ஞாயிறு, 21 மே, 2023

எதற்கும் பயன்படாதவன்

 எதற்கும் பயன்படாதவன்







கல்லாலயமாம் தேவருமாம், கழுதை கசடர் பொதி சுமக்கும்,
கடாவோ உழுது பயிரிடற்காம், காட்டம் பன்றிக்கிரையாகும்,
புல்லேறு ஈசர் வாகனமாம் பொதியுஞ்சுமக்கும், பிணமதுவும்
பூசிமுடித்து மறையோர்க்கும் பொருளையீந்து புகழெய்தும்,
மல்லார் குட்டிச்சுவர் தானும் மறைவா(ம்) மாடுதேய்த்திடற்காம்,
மதியாத் துடைப்பம் தினந்தோறு(ம்) மாடகூடங்களை விளக்கும்,
அல்லார் உலுத்தன் எதற்குதவும்? அவனுக்கிணை இங்கெதுவுமிலை, அவனைக்குறித்துக் கூறுமிடத்தவனுக்கவனே சரிதானே.

கல்லானது ஆலயம் கட்டப் பயன்படும், தெய்வச் சிலைகளையும் செய்யலாம்; கழுதை பொதி சுமக்கப் பயன்படும்; எருமைக்கடா உழுது பயிரிடப் பயன்படும்; மலமும் பன்றிக்கு உணவாகும். எருது ஈஸ்வரனுக்கு வாகனமாகும், பொதி சுமக்கப் பயன்படும்; செத்த பிணமும்கூட சந்தனம் முதலியவை பூசி மலர்சூடி அந்தணருக்கு பொருளை தன்பொருட்டு தானமாகக் கொடுத்து (கொடுக்கச் செய்து) புகழ் எய்தும்; வலிமையுடைய குட்டிச் சுவரும் மறைவிடமாகும், மாடு முதுகு தேய்த்துத் தினவு தீர்க்க உதவியாகும்; உயர்வாக மதிக்கப்படாத துடைப்பமும் நாள்தோறும் வீடுவாசல் கூட்டப் பயன்படும்; ஆனால் மனதில் இருள் பொருந்திய லோபகுணமுடையவன் (உலுத்தன், லோபி, கருமி, கஞ்சன் = பொருளைத் தானும் அனுபவிக்காமல் மற்றவருக்கும் கொடுக்காமல் பதுக்கி வைத்திருப்பவன்) எந்தக் காரியத்திற்கு உபயோகமாவான்? (எதற்கும் உபயோகப் படமாட்டான்.) அந்தக் கஞ்சனுக்கு உவமை சொல்ல இந்த உலகத்தில் எதுவும் இணை இல்லை. அவனுக்கு அவனே சமானமாவான்.



புதன், 17 மே, 2023

அநித்ய சுகம்.

 அநித்ய சுகம்




கொண்டு விண்படர் கருடன்வாய்க் கொடுவரி நாகம்,
விண்ட நாகத்தின் வாயினில் வெருண்ட வன் தேரை,
மண்டு தேரையின் வாயினில் அகப்படு தும்பி,
வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்.

ஒரு கருடன்  தன் வாயில் நாகத்தை இரையாகக் கொண்டு பறந்தது. அந்த நாகத்தின் வாயில் தவளையும்,  தவளையின் வாயில் தும்பியும் இருந்தன. தும்பிவண்டு நாவில் விழுந்த ஒருதுளி தேனை ருசித்து  அனுபவித்தது. இதைப் போன்றதே (மரணதேவனின் வாயில் இருக்கும்) மனிதர் அனுபவிக்கும் இன்பம்.

(ஆகவே அற்பமான உலக இன்பத்தை விடுத்து நிலையான பேரின்பத்தை தேடு.)

விலகியே இருத்தல் நலம்.

விலகியே இருத்தல் நலம்.



டவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்,
மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனைக் கொல்லும்,
தடவரை முலைமா தேயித் தரணியில் உள்ளோர்க் கெல்லாம்,
மடவனை யடித்த கோலும் வலியனை யடிக்கும் கண்டாய்.

இளம் பெண்ணே! முடவன் (எதிர்க்கும் ஆற்றல் இல்லாதவன்) ஒருவனை முரடன் ஒருவன் துன்புறுத்தினால் அவனை அவனினும் வலியவன் வதைப்பான்.  அவ்வலியவனை எமன் கொல்வான். இவ்வுலகில் உள்ள எல்லாருக்கும் இது நியதி. ஏழையைக் அடித்த கோல் ( விதி மாறும்போது) வலியவனையும் அடிக்கும் என்று அறிந்து கொள்வாயாக!

#விவேக் சிந்தாமணி#

சொல்லுவார்,வார்த்தை கேட்டு.



சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை யிகழ்வார் புல்லர்

நல்லவர் விசாரி யாமற் செய்வரோ நரிசொற் கேட்டு

வல்லியம் பசுவுங் கூடி மாண்டதோர் கதையைப் போலப்

புல்லிய ரொருவ ராலே போகுமே யாவும் நாசம். (45)


  • கேட்பார் சொல்லைக் கேட்டுத் தன் தோழனை இகழ்வாகக் கருதுபவர் ‘புல்லர்’.
  • நல்லவர்களை விசாரிக்காமல் தோழனை இழப்பார்களோ?
  • நரியின் சொல்லைக் கேட்டுப் புலியும் பசுவும் கூடி வாழ்ந்த கதை போல் புல்லியன் ஒருவனால் நல்லவன் வாழ்வு முடிந்துவிடும்.

# பட்டினத்தார் பாடல்#

 மாலைப்பொழுதில் நறுமஞ்சல் அரைத்தே குளித்து

வேலை மினுக்கிட்டு விழித்திருந்து- சூலாகிப்

பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை

பித்தானால் என்செய்வாள் பின்.

    # பட்டினத்தார்    பாடல்#

 

வியாழன், 13 ஏப்ரல், 2023

தூங்காமை,கல்வி,துணிவுடமை.

 இன்றைய குறள்:

பொருட்பால் > அரசியல் > இறைமாட்சி
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.   (383)

நாடாளும் மன்னனுக்கு, விரைவாகச் செயலைச் செய்தலும், அதனை அறியும் அறிவும், செய்யும் துணிவும் என்னும் மூன்று திறனும் நீங்காமல் இருக்க வேண்டும்
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
— மு. வரதராசன்

செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.
— சாலமன் பாப்பையா

காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்
— மு. கருணாநிதி

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

வருவிருந்து..

 

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. 

நாள்தோறும் தன்னை நாடி வரும் விருந்தினரைப் போற்றுகிறவனுடைய இல்வாழ்க்கை துன்பத்தால் பாழ்படுதல் என்றும் இல்லையாகும்  (௮௰௩)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.  (௮௰௩)
— மு. வரதராசன்


நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.  (௮௰௩)
— சாலமன் பாப்பையா

திங்கள், 3 ஏப்ரல், 2023

ஈனருக்கு உரைத்திடாதே

 ஈனருக்கு உரைத்திடாதே .


வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்,
தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்,
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்,
ஈனருக் குரைத்திடில் இடர தாகுமே.
 (விவேக சிந்தாமணி)

ஒரு குரங்கானது மழையில் நனைந்து துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்த (முன்னரே கூடுகட்டி வசிக்கும்) தூக்கணம் பறவை ஒன்று, தன்னைப்போல் ஒரு இருப்பிடம் அமைத்து பாதுகாப்பாக வாழக்கூடாதா? என்று கேட்க, கோபம் கொண்ட குரங்கு குருவியின் கூட்டை பிய்த்தெறிந்தது. கீழான குணம் கொண்ட அறிவில்லாதவர்க்கு கல்வியால் தான் பயின்ற நூல்களின் ஞானத்தை உபதேசம் செய்தால் அது துன்பத்தை உண்டாக்கும். 

(கேளாமல், தகுதி பாராமல் எதையும் சொல்லாதே)
நனறி:Purnayogamp0

அகவை தின, வாழ்த்துகள்..!

 


                                                                        24-03-1965

ஐம்பத்தெட்டாவது அகவையில் கால்பதிக்கும்,-திருமதி

எனதருமைத் துணைவிக்கு,இனிய வாழ்த்துக்கள் 

கடந்துவந்த பாதையில்,சாதனைகளையும்-பல

சோதனைகளையும்,சரிசமமாக ஏற்று,

சரித்திரமாக மாற்றும், வல்லமை கொண்ட-எந்தன்

வெற்றித் திருமகளே,! வாயார வாழ்த்துகின்றேன். 

இப்புவியில் இணைந்த நாள் தொட்டு,இனிதாக-நீ

இன்னும் வாழ, இறைவனை பிரார்த்திக்கிறேன்,!

வியாழன், 26 ஜனவரி, 2023

காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிரத் தயார் – ஜெய்சங்கர் வந்த சூட்டோடு ரணில் சம்பந்தனுக்கு உறுதியளித்தார்

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்குத் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்து திரும்பியதை அடுத்து அவசர அவசரமாக நேற்றுமுன்தினம் பிற்பகல் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து இதனைத் தெரிவித்துள்ளார்.
‘தேசிய காணி ஆணைக்குழு தொடர்பான சட்ட வரைவு தயாராகி வருகின்றது. அது நிறைவடைந்தவுடன் காணி அதிகாரங்கள் மாகணங்களுக்கு வழங்கப்படும். மாகாணங்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் எண்ணிக்கையை 10 ஆக வரையறுப்பதற்கும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்பது மாகாணங்களுக்கும் தலா ஒரு பிரதிப் பொலிஸ் மா அதிபரும், கொழும்பு மெற்றோபொலிட்டன் பிரிவுக்கு ஒருவருமாக பத்து நியமனங்கள் வரையறுக்கப்படவுள்ளன. அதன் பின்னர் அவர்களை மாகாண நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரா. சம்பந்தனிடம் உறுதியளித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.