திங்கள், 15 மே, 2017

ஐரோப்பாவின் காதல் முறிவு

ஐரோப்பாவின் காதல் முறிவு.



அண்மைக்காலத்தில் இணையம் உட்பட அனைத்து தகவல் முறைமைகளிலும் பேசுபொருளாக மாறியிருந்த ஒரு விடயம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ஐக்கிய இராச்சியத்துக்குமான காதல் முறிவாகும். கடந்தகாலங்களில் விரும்பியோ, விரும்பாமலோ புறக்காரணங்களால் இணைந்திருந்த காதலர்களில் ஒருவர் இனியும் சேர்ந்திருக்க முடியாது என பிரிந்து செல்லும் நிலைக்கு ஒப்பான காட்சியே தற்போது ஐரோப்பாவில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற Brexit மீதான மக்கள் வாக்கெடுப்பின் முடிவுகள் (Image courtesy: weforum.org)
கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பு மூலமாக, ஐரோப்பிய ஒன்றியத்தை பிரிவதாக ஐக்கிய இராச்சியம் முடிவுக்கு வந்தபோதிலும், அதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் அண்மையில்தான் அவர்களது பிரதமர் திரேசா மே (Theresa May) அவர்களின் உத்தியோகபூர்வ கையெழுத்துடன் ஆரம்பமாகி இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை பிரிவதற்கான இந்த செயற்பாடு நிறைவுபெற குறைந்தது இரண்டு வருடங்களாவது செல்லக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது. இவ் எதிர்பார்க்கபடும் இரண்டு வருடங்களுமே, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சரி, ஐக்கிய இராச்சியத்துக்கும் சரி மதில்மேல் பூனையாக உள்ள காலப்பகுதியாகும். காரணம், பிரிவுக்கான பேர்ச்சுவார்த்தைகள் சுமூகமாக செல்லாதபட்சத்தில், இருசாராருக்கும் தீர்க்கமுடியாத பிரச்சனைகளை அது ஏற்படுத்தகூடும் என எதிர்பார்க்கபடுகிறது. அப்படி, ஒருவேளை சுமுகமாக முடிவுகள் எட்டப்படாதவிடத்து, ஐரோப்பாவாழ் சமூகத்தினர் கீழ்வரும் விடயங்கள் தொடர்பில், அதிகம் கவலைகொள்ளவேண்டி ஏற்படலாம்.
சரத்து 50இன் மூலமாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார் பிரித்தானிய பிரதமர் (image courtesy imgix.net)

பிரிவுக்கான வரைபுகள்

ஐரோப்பிய ஒன்றியம் என்பது, ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான நாடுகளை உறுப்பினராக கொண்டு உருவாக்கபட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் நிர்வாக செலவீனங்கள் அனைத்துமே, அனைத்து நாடுகளுக்கும் அதன் தன்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படுகிறது. உட்கட்டுமான திட்டங்கள், சமூக திட்டங்கள், ஆய்வுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஊழியர்களின் வேதனம் மற்றும் ஓய்வூதியங்கள் என்பனவும் இதில் உள்ளடங்குகிறது.
தற்போதைய பாதீட்டு திட்டமானது 2020ம் ஆண்டுவரை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு வருடம்தோறும் அனைத்து நாடுகளாலும் நிதியளிப்பு செய்யப்படுகிறது. இந்தநிலையில், ஐக்கிய இராச்சியம் இடைநடுவே பிரிந்துசெல்வதால், சுமார் 63 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தவேண்டி ஏற்படும் என கணக்கிடபட்டுள்ளது. இது ஒரே தடவையில் செலுத்தமுடியாத மிகப்பெரிய தொகையாக ஐக்கிய இராசியத்துக்கு இருக்கும். எனவே, இது தொடர்பில், இருசாராரும் முடிவொன்றுக்கு வராதபடசத்தில், ஐக்கிய இராச்சியம் நிதிரீதியாக பலவீனப்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நீங்குவதால் தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய சில விடயங்கள் (image courtesy pwc.ie)

வர்த்தக செயற்பாடுகள்

ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவராக உள்ளமட்டும், ஐக்கிய இராசியமானது இலவச வர்த்தக ஒப்பந்தங்களூடாக எவ்வித வரிகளுமின்றி ஐரோப்பிய நாடுகளுக்குள் வர்த்தக தொடர்பை கொண்டிருந்தது. இந்த நடைமுறையின் கீழ், ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் மாத்திரம் சுமார் 44%மான ஏற்றுமதி சந்தையையும், 53%மான இறக்குமதி சந்தையையும் கொண்டுள்ளது.
தற்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிவதாக முடிவாகியுள்ள நிலையில், இந்த சலுகைகளை முழுமையாக அனுபவிக்க முடியாதநிலை இருசாராருக்குமே ஏற்படும். இதன் விளைவாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழ்கின்ற மக்கள், இதுவரை காலம் பயன்படுத்திய பொருட்களை இனி அதிகவிலைகொடுத்து வாங்கவேண்டிய துர்பாக்கியநிலை ஏற்படும்.
பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமான வர்த்தக உறவுகள் (image courtesy: licdn.com)
இதனை கருத்தில்கொண்டுதான், ஐக்கிய இராச்சிய பிரதமர், ஒன்றியத்தின் விலகல் பேச்சுவார்த்தைகளில் புதிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடையாக அமையகூடாது என்கிற தொனியில் கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகிகள், ஐக்கிய இராச்சியத்தின் விலகல் சுமூகமாக அமையும்பட்சத்தில் மட்டுமே, இதுதொடர்பில் விவாதிக்க முடியும் என கருத்தினை வெளியிட்டு, சர்ச்சைகளுக்கான தொடக்கத்தினை விதைத்து இருக்கிறார்கள்.

குடியேற்ற உரிமைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டவிதிகள் பிரகாரம், ஒன்றிய அங்கத்துவம் வகிக்கும் நாடுகளில் உள்ள எவரும், ஐக்கிய இராச்சியத்தில் குடியேறவும், ஐக்கிய இராசியத்தில் உள்ளவர்கள் அங்கத்துவ நாடுகளில் குடியேறவும் அனுமதியளித்து இருக்கிறது.
தற்சமயம், ஐக்கிய இராச்சியத்தின் பிரிவு முடிவானது இந்த சுதந்திர குடியேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக அமையவுள்ளது. இதன் விளைவாக, இருபக்கங்களையும் சார்ந்த சுமார் 4 மில்லியன் மக்கள் பாதிப்படையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய இராசியத்தில் உள்ளவர்கள் அங்கத்துவ நாடுகளில் சுதந்திரமாக குடியேற முட்டுக்கட்டையாகியுள்ள Brexit (image courtesy- artoncapital.com )
மேற்கூறிய விடயங்கள் அனைத்துமே, இருபக்கமும் பாதிப்பினை ஏற்படுத்தும் விடயங்களாக உள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தினை பிரிவதன் விளைவாக, கீழ்வரும் விளைவுகளை மேலதிகமாக எதிர்கொள்ளவேண்டிய துர்பாக்கியநிலையை கொண்டுள்ளது.

வளர்ச்சியில் தேக்கநிலை

ஐக்கிய இராச்சிய நாட்டின் பாதீட்டு குழுவானது, எதிர்வரும் காலத்தில் நாட்டின் அபிவிருத்தியானது அல்லது வளர்ச்சி நிலையானது முன்னைய காலங்களுடன் ஒப்பிடுமிடத்து குறைவடையும் என கணக்கிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை பிரிவதற்கான வாக்கெடுப்பு நடந்து முடிந்தபின்பு இடம்பெற்ற கணிப்பீட்டில் ஐக்கிய இராச்சியத்தின் வளர்ச்சியானது 2.2% என மதிப்பிடபட்டபோதிலும், தற்போது அது 2%மாக அமையும் என பொருளியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதுபோல, 2018ம் ஆண்டில் இது மேலும் குறைவடைந்து 1.6% வளர்ச்சியையே கொண்டிருக்கும் என குறிப்பிடுகிறார்கள். இந்தநிலை, ஜரோப்பாவிலிருந்து ஐக்கிய இராச்சியம் தனித்து இயங்க முடிவு செய்துள்ள ஆரம்பகாலகட்டத்தில் மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்த வல்லதாகும்.

அதிகரிக்கும் கடன்சுமை

எதிர்வுகூறப்படும் மிகமெதுவான வளர்ச்சியானது அரச வருமானத்தை பாதிப்படைய செய்யும். இதன் விளைவாக, செலவினங்களை ஈடுசெய்வதற்கும், வருமான-செலவின இடைவெளியை ஈடுசெய்யவும் மேலதிகமாக கடன்பெறுவதனை தடுக்க இயலாதநிலை ஏற்படும்.
இதன்பிரகாரம், 2016ல் சுமார் 1.74 திரில்லியனாக உள்ள கடன்சுமையானது 2021ல் 1.9 திரில்லியனாக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த கடன் அதிகரிப்பானது அரசின் மேலதிக கடன்வாங்கல்கள் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டாலும், நீண்டகலத்தில் இறுக்கமான நிதிக்கொள்கைகள் மூலமாக, மக்கள் மீது சுமத்தபடவே அதிக வாய்ப்புக்களை கொண்டதாக உள்ளது.

வேலைவாய்ப்பில் மந்தநிலை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் பிரிந்துசெல்வதன் விளைவாக, ஜக்கிய இராச்சியவாசிகளுக்கு உடனடியாக வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என நாம் எண்ணக்கூடும். ஆனால், யதார்த்தநிலை வேறுவிதமாக உள்ளதாக அந்நாட்டின் பாதீட்டு குழுவினர் சுட்டிகாட்டுகிறார்கள். குறிப்பாக, 2016ம் ஆண்டளவில் ஐக்கிய இராச்சியத்தில் சுமார் 830,000பேர் வேலையில்லா தீர்வையை பெற்று இருந்தார்கள் இந்த நிலையானது, 2020ம் ஆண்டளவில் சுமார் 880,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறபட்டுள்ளதுடன், 2018ம் ஆண்டளவில் நாட்டின் வேலையில்லாதவர்கள் சதவீதமானது சுமார் 5.2%மாக அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இணைந்திருந்த காதலர்கள் இனியும் சேர்ந்திருக்க முடியாது என பிரிந்து செல்லும் நிலைக்கு ஒப்பான காட்சியே தற்போது ஐரோப்பாவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. (image courtesy- alexedmans.com)
ஐரோப்பிய ஒன்றியத்தை பிரிவதுதான் ஐக்கிய இராச்சிய நலனுக்கு நன்மைபயக்கும் என ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டாலும், அந்த நலனை நீண்டகாலத்தில் அனுபவிக்க மிகப்பயங்கரமான பாதையை ஐக்கிய இராச்சியம் கடந்துவர வேண்டியிருக்கும் என்பது தற்போது நிதர்சனமான உண்மையாகியிருக்கிறது.
இரு காதலர்களும் இணைந்திருப்பதிலும் பார்க்க, பிரிந்திருப்பதே சிறந்தது என முடிவுக்கு வந்துள்ளநிலையில், அந்த பிரிவுக்கு மிகப்பெரும் விலையையும், சிலபல தியாகங்களையும் இருதரப்பினரும் செய்தே ஆகவேண்டிய கட்டாய நிலைக்கு வந்துவிட்டனர். இனி, இரு தரப்பினரும் எப்படி ஒருவரை ஒருவர் காயப்படுத்தாமல் விலகி செல்வது என்பதிலேயே அவர்களது வெற்றி தங்கியிருக்கிறது. யார் ஒருவரும், மற்றொருவருக்கு பாதிப்பை ஏற்படுத்த நினைத்தாலும், இருவரும் அதற்கான விலையை கொடுக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, இதில் விரும்பியோ விரும்பாமலோ இணைந்துவிட்ட ஐரோப்பிய வாழ்மக்களும், இந்த பிரிவு சுமுகமாக இடம்பெறும்வரை வெறும் பார்வையாளர்களாக இறுதிவரை பொறுமையாக இருந்தே முடிவு செய்யவேண்டியதாக இருக்கும்.

போதையில் பட்டதாரிகள்

போதையில் பட்டதாரிகள்

ஏன்டா!, ஏதோ பொறியியல் படிக்கிறதும் படிக்க வைக்கிறதும் தேச விரோத செயல் மாதிரி எழுதிருக்க! மொதல எல்லாத்தையும் எதிர்மறை பார்வையிலிருந்து பார்காதிங்கடா! என்று கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் திட்டிக்கொண்டே இருந்தான் நண்பன். (அப்பாடா நம்ப கட்டுரையை ஒரு பொறியியலாளன் படுச்சு கோபம் வந்துருக்குனா உருப்படியா எழுதிருக்கோம் என்று எண்ணியபடி பேச ஆரம்பித்தேன்.)
உனக்கு என்னடா புடிக்கல அந்த கட்டுரையில்? என்றேன்.
எல்லாமேதான் புடிக்கல!,பொறியியல் படிச்சா மட்டும் தான் வேலை கிடைக்காதுனு மாதிரி எழுதிருக்க . இப்போ எந்த படிப்பு படிச்சாலும்தான் வேலை கிடைக்காது! அப்றம் ஏதோ பெரிய ட்விஸ்ட்  வச்சு முடிக்கனும்னு பில்டப் கொடுத்து முடுச்சியே, எங்க சொல்லுடா பார்ப்போம் என்று கோபமாக என் முன் அமரந்தான். (இவன்ட அடிவாங்கமா தப்பிகனுமே என்று எண்ணியபடி ஆரம்பித்தேன்)
எல்லா படிப்புக்கும் வேலை இல்லை என்பது உண்மைதான் ஆனால் ஏன்?. எல்லா இடத்திலும் எந்த வேலைனாலும் பரவாயில்லை என்று பொறியியல் படித்தவர் போய் வேலை கேட்பதும் குறைந்த ஊதியத்தில் அவர்களை பயன்படுத்திக்கொள்வதும்தான். ஒரு உணவக விளம்பரம் ஒன்றில் புரோட்டா போட ஆட்கள் தேவை பொறியாளர்கள் விண்ணப்பிக்காதீர்கள் என்று போட்டிருந்தார்கள் இதை பகடி என்று கடந்து விட முடியாது! காரணம், கடந்த ஆண்டு ஒரு மாநிலத்தில் நகர சுத்தி (cleaners) தொழிலாளர்கள் பணிக்கு வந்த விண்ணப்பத்தில் 80% பொறியியல் மாணவர்களின் விண்ணப்பம். இதை விட சிறந்த விளக்கம் எப்படித் தர முடியும்?
BPO வில் 90% இரவுப் பணி மட்டும் தான், முழுக்க முழுக்க இரவுப் பணி பார்க்கும் இளைஞர்களின் மனநிலை வேறு மாதிரியாக மாறுகிறது! (digitaltrends.com)
வேற வழி இல்லாமல் இப்ப இருக்க 80% பொறியியல் மாணவர்கள் BPO வை நோக்கி போகிறார்கள், வெறும் ஆங்கில அறிவும் 12ஆம் வகுப்பு தேர்ச்சியும் மட்டுமே அதுக்கு போதுமே!,டேய் நீ மறுபடியும் வேலை இல்லா திண்டாட்டத்தை வச்சே ஒப்பேத்துர!, இத தாண்டி ஒரு அதிர்ச்சி இருக்குனு பில்டப் குடுத்தேல அத பத்தி சொல்லு என்று இடை மறித்ததான்.
அதுக்கு தான்டா வரேன் இரு! BPO வில் 90% இரவுப் பணி மட்டும் தான், முழுக்க முழுக்க இரவுப் பணி பார்க்கும் இளைஞர்களின் மனநிலை வேறு மாதிரியாக மாறுகிறது!. அவர்கள் மன உளைச்சல் காரணமாக போதையின் பிடியில் சிக்குகிறார்கள். சென்னைப் போன்ற பெருநகரங்களில், பெற்றோர்களிடம் இருந்து தொலைவில் இருக்கும் இளைஞர்கள் கஞ்சா போன்ற வஸ்துக்களையே நாடுகின்றனர்.
கஞ்சாவுல அப்டி என்னதான் இருக்கு என்று ஒருமுறை அதை பயன்படுத்தும் நபர் ஒருவரைக் கேட்க, கஞ்சா அடுச்சுட்டு சீலிங் பேன படுத்துக்கிட்டு பார்த்தா அது மூஞ்சி பக்கத்துல வர மாதிரி தெரியும் தம்பி என்று  அவர் சிரித்தது எனக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
தேவைக்கு அதிகமான பணம், பற்று இல்லாத வேலை, தட்டிக் கேட்க ஆள் இல்லாத சூழல். இந்த உட்சக்கட்ட சுதந்திரம் அவர்களை “குரோதத்தின்” எல்லைவரை கொண்டு செல்கிறது. இதன் கேவலமான உதாரணம் தான் சென்னையில் ஒரு IT மாணவன் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதும் எரித்ததும்!.
ஒரு குழந்தையை அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் மன நிலையை அவனுக்கு ஏற்படுத்தியது எது?
தேவைக்கு அதிகமான பணம், பற்று இல்லாத வேலை, தட்டிக் கேட்க ஆள் இல்லாத சூழல். இந்த உட்சக்கட்ட சுதந்திரம் அவர்களை “குரோதத்தின்” எல்லைவரை கொண்டு செல்கிறது. (pixabay.com)
நான் சிறுவனாக இருக்கும் போது பார்த்த பல திரைப்படங்களில்  “படிச்ச” பிள்ளை வருது அது முன்னாடி “பீடி ” குடிக்கிறியே அத தூக்கி போடு. என்ற காட்சிகள் வரும், ஆனால் இன்று மாணவர்களுக்கு உருவாக்கப்பட்டதே “மது ” என்று விளம்பரம் செய்கின்றன சினிமா!. என் பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று பெண் பார்த்த காலம் போய் என் பையன் “Social Drinker ” (எப்போதாவது குடிப்பவர்) என்று இணையத்தில் பெண் தேடுகிறார்கள்.
புகையும், குடியும் பிள்ளைகளுக்கான சுதந்திரம் என்று பெற்றோர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்களின் இப்போதைய கண்டிப்பு அவர்களின் கண்முன் தவறுகளை செய்யாதிருப்பது மட்டுமே (பிள்ளைகளை கவனிக்க நேரமில்லை என்று காரணம் கூறும் பெற்றோர்கள்தான் அதிகம்) இப்பொழுது  தந்தையும் மகனும் இணைந்து மது அருந்தும் காட்சி படங்களில் வருவதைப் பார்க்கும்போது பயமாக உள்ளது.
சரி சினிமா, சமூகம் மற்றும் குடும்பம்தானே இளைஞர்கள் பாதை மாறுவதற்கான காரணம் இதில் பொறியியல் படிப்பை மட்டும் குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம் என்ன? என்று தோன்றலாம்!. பொறியியல் படிப்பை தேர்வு செய்யும் மாணவனின் மனநிலை பட்டம் பெற்று வெளியே வரும்போது வேறு விதமாக உள்ளது. அறிவியல் மற்றும் கலை பிரிவு படிக்கும் மாணவனிடம் இருக்கும் “Experimentation ” (தான் எதற்கு சரியானவன் என்று சோதிப்பது) பொறியியல் மாணவர்களிடம் சுத்தமாக இல்லை!. ஒரு கட்டிடக்கலை பயின்ற (Civil Engineering) பொறியியல் மாணவனுக்கு “ஒரு ஏக்கருக்கு எத்தனை சென்ட் ” என்று கூட தெரியவில்லை. இவர் எப்படி தன் துறை சார்ந்த வேலையை திறம்பட செய்வார்?, இவர் எளிதாக பணம் பெறும் துறை என்று BPOவை மட்டுமே நாடுவார். கல்லூரியில் 4 ஆண்டுகள் படித்தது போதாது என்று நேர்முகத் தேர்விற்கு சிறப்பு வகுப்புகள் வேறு!, என்ன தான் செய்கிறது கல்லூரிகள்?.
அவர்கள் வாழ்கையை அவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்று விட்டு விட முடியாது! 2020 இந்தியாவின் மக்கள் தொகையில் சரி பாதி இளைஞர்களே அதில் 65% பேர் வருமானம் ஈட்டக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. மற்றொரு ஆய்வு உலக ” காசநோயாளிகளில்”  30% பேர் இந்தியாவில் தான் உள்ளார்கள் என்றும் அதில் பெரும்பான்மை இளைஞர்கள் என்றும் கூறுகிறது. இந்திய இளைஞர்கள் மது குடிக்க ஆரம்பிக்கும் வயது 16 என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது ஆனால் இங்கு 18 வயதிற்கு குறைந்தவர்க்கு போதை பொருட்கள் விற்பது குற்றம் ஆகும், பின் எப்படி இது நடக்குறது?.
இந்திய இளைஞர்கள் மது குடிக்க ஆரம்பிக்கும் வயது 16 என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது ஆனால் இங்கு 18 வயதிற்கு குறைந்தவர்க்கு போதை பொருட்கள் விற்பது குற்றம் ஆகும், பின் எப்படி இது நடக்குறது? (pixabay.com)
பள்ளியில் இருந்து கல்லூரி வரை ஒன்றாக படித்த நண்பனை சமீபத்தில் சந்தித்தேன் பேசும் போது பந்தாவாக “சிகரெட்டை” எடுத்து பற்ற வைத்தான். டேய் உனக்கு எப்ப இருந்துடா இந்த பழக்கம்? என்றேன். இல்ல பங்காளி “பாஸ்” (boss) கூட நெருங்கி பழக week end party-ல அடுச்சு பழகிட்டேன் நிறுத்த முடியல என்றான், வீட்டுக்கு தெரியுமா என்றேன் தெரியும் ஆனா காட்டிக்க மாட்டாங்க என்றான்!..
நோயாளி இளைஞர்களைக் கொண்டு இந்தியாவின் பலமான எதிர்காலத்தை உருவாக்க முடியாது. இதை அரசு சிந்திக்க வேண்டும் ஆனால் இங்கு அரசு தானே மதுக்கடைகளையே நடத்துகின்றன!. சரி குடி, புகை இது இரண்டும் தனி நபரைத்தானே பாதிக்கிறது என்று கடந்து போகிறவர்களும் உண்டு. ஆனால் இதனால் “பாதிப்படைவது பெண்களே” குடித்துவிட்டு இரவு நேரங்களில் பெண்களிடம் தவறாக நடப்பது அதிகமாகி உள்ளது. இதன் விளைவாக கர்நாடக அரசு எல்லா நிறுவனங்களும் இரவு பணிகளில் பெண்களை அமர்த்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது . இது எப்படி நிரந்தர தீர்வாக அமையும்?. முன்பு எல்லாம் தவறு செய்பவர்கள் படிப்பறிவு குறைந்தவர்களாக இருப்பார்கள் ஆனால் இன்று பட்டதாரிகள் அல்லவா அதிகமாக உள்ளார்கள்.
தன் வேலையின் மீதான காழ்ப்புணர்வை எந்த வழியில் வெளிப்படுத்துவது என்று தெரியாமல் எல்லா தீய பழக்கத்திற்கும் ஆளாகிறார்கள். அதற்கு இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பம் எளிதில் வழி காட்டுகிறது,  இதற்கும் பொறியியல் படிப்பை தேர்வு செய்வதற்கும் என்ன சம்பந்தம்?,
“ஒரு மீனின் இயல்பு என்பது நீந்துவது அதை மரம் ஏறச் சொல்லி கட்டாயப் படுத்தினால் அது இறந்து போகும்”, அது போல பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளின் திறன் கண்டு அவர்களின் மேற்படிப்பை தேர்ந்தெடுக்க வைக்க வேண்டும். அப்படி இல்லையேல் அந்த மீனின் நிலைதான் அவர்களுக்கும்.
சரி விருப்பமான துறையில் பயிலும் மாணவன் தவறு செய்ய மாட்டான் என்று உறுதி கூற முடியுமா? என்றால், தனக்குப் பிடித்த துறையை தேர்வு செய்யும் மாணவன் அதில் சாதனைகள் செய்ய புதுப்புது உத்திகளை பயிலவும், பயன்படுத்தவுமே எண்ணுவான். கண்டிப்பாக தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் விகிதம் குறையும்.
தன் வேலையின் மீதான காழ்ப்புணர்வை எந்த வழியில் வெளிப்படுத்துவது என்று தெரியாமல் எல்லா தீய பழக்கத்திற்கும் ஆளாகிறார்கள். அதற்கு இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பம் எளிதில் வழி காட்டுகிறது (pixabay.com)
டேய் உண்மையிலயே! BPO- ல வேலை பார்க்குறவங்க கஞ்சா அடிக்கிறாங்களா? உனக்கு தெரியுமா? பொய் தானே சொல்ற அப்பதான் நிறையா பேர் படிப்பாங்கனு! என்றான் நண்பன். 100% அடிப்பாங்கனு சொல்லலடா ஆனா பெரும்பான்மையான நபர்கள் அடிக்கிறாங்க என்று தெரிந்த ஒரு நண்பனின் அறைக்கு அவனை அழைத்துச் சென்றேன். விடுமுறை தினம் வேறு, அறை முழுவதும் ஒரே புகை மூட்டம். தொலைக் காட்சியில் ஒரு புரியாத ஆங்கிலப் பாடல் அதிலும் கஞ்சா புகைத்துக் கொண்டுதான் ஆடுகிறார்கள். வாயடைத்து நின்றான் நண்பன். உள்ளே இருக்கும் 5 பேர்களும் கோயம்பத்தூரில் ஒரு சிறந்த கல்லூரியில் (அப்படித்தான் விளம்பரம் செய்து கொள்கிறார்கள்) பொறியியல் படித்தவர்கள். மாதம் வாங்கும் 25,000 சம்பளத்தில் 15,000 இப்படித்தான் போகிறது என்று கூறிய போது ஐவரில் ஒருவன் நான் வந்ததை இப்பொழுதுதான் கவனித்தான் (15  நிமிடம் கழித்து) யோவ் டைரக்டர் எப்பயா வந்த? என்று என் அருகில் வந்தான்.
யோவ் டைரக்டர், நானும் எவ்ளோ நாள் சொல்றேன் இதுல இரண்டு இழுவ இழுத்தனு வையி (கஞ்சா) ஜேம்ஸ் கேமரூன், ஸபீல் பெர்க் எல்லாம் உன்னட்ட பிச்சைதான் எடுக்கணும் என்று சிகரெட்டைக் காட்ட, கட்டுரை எழுத வந்தவனை காவு வாங்கிடுவான்க போலயே என்று நண்பனையும் இழுத்துக் கொண்டு பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடி வந்தேன். (என்னுடன் ஒரு புது நபர் வந்திருந்ததை அவர்களில் யாருமே கவனிக்கவில்லை அவ்வளவு போதை)

பகிஷ்கரிப்புக்களை பகிஷ்கரிப்போம்

பகிஷ்கரிப்புக்களை பகிஷ்கரிப்போம்


Jude Prakash


“கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி”
மூதுரையில் ஒளவையார்
வரலாற்றில் தமிழர் பிரதேசத்தில் நடந்த முதலாவது பகிஷ்கரிப்பாக 1931ல் யாழ்ப்பாண இளைஞர் பேரவை (Jaffna Youth Congress, JYC), முன்னின்று நடாத்திய தேர்தல் பகிஷ்கரிப்பு பதிவாகிறது. டொனமூர் யாப்பிற்கமைய, நடாத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமையடிப்படையிலான  தேர்தலை, யாழ்ப்பாணத் தமிழர்கள் புறக்கணித்தார்கள்.
சாதி, மத, பால் பாகுபாடின்றி, ஆசிய கண்டத்திலேயே இலங்கையில்தான் முதன் முதலாக அனைவருக்குமான வாக்குரிமை (universal suffrage) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 1950 வரை அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படவில்லை. சுவிஸ்லாந்து 1971ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும்போது, உலகின் முதலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பதவியேற்று ஆறாண்டுகள் கடந்துவிட்டிருந்தன.
இரண்டாவது ஸ்பானிய குடியரசில் வாக்குரிமை பயிற்ச்சியில் ஈடுபடும் பெண்கள் (wikimedia.org)
“கீழ் சாதியினருக்கும் படிப்பறிவில்லாதவர்களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பது முட்டாள்தனமானது” என்று சேர் பொன் இராமநாதன் எதிர்ப்பு தெரிவிக்க, இலங்கையிலேயே எழுத்தறிவில் முன்னணியில் திகழ்ந்த யாழ்ப்பாண மாவட்டமோ, வேறொரு காரணத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட முதலாவது ஜனநாயக உரிமையை பகிஷ்கரிக்கத் தயாரானது.
இந்திய தேசிய காங்கிரஸின் வழிநின்ற யாழ்ப்பாண இளைஞர் பேரவை, பிரித்தானியா இலங்கைக்கு சுயராஜ்ஜியம் வழங்காததால் தேர்தலை புறக்கணிக்குமாறு அழைப்பு விட, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஆசனங்களும் வெற்றிடமாயின. யாழ்ப்பாணத்தில் போட்டியிட முடியாத ஜீஜி பொன்னம்பலம், மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோற்றுப்போனார்.
தேர்தல் புறக்கணிப்பால் தேசிய சட்ட சபையில் தங்கள் உரிமைகளும் நலன்களும் புறக்கணிக்கப்படுவதையும்
பாதிக்கப்படுவதையும் காலங்கடந்து உணர்ந்த யாழ்ப்பாண மக்கள், அடுத்து வந்த காலங்களில் யாழ்ப்பாண இளைஞர் பேரவையை புறந்தள்ளினார்கள் என்பது வரலாறு.
இந்த தேர்தல் புறக்கணிப்பு பற்றி Jane Russell எனும் வரலாற்றாசிரியர் எழுதிய விரிவான கட்டுரைக்கு அவர் இட்ட தலைப்பு “The dance of the Turkey-cock: the Jaffna Boycott 1931”, அதாவது “வான் கோழியின் நடனம்: யாழ்ப்பாண பகிஷ்கரிப்பு 1931”. இந்திய தேசிய காங்கிரஸ் என்ற மயிலைப் பார்த்து யாழ்ப்பாண இளைஞர் பேரவை என்ற வான் கோழி ஆடிய நடனமே 1931ம் ஆண்டு தேர்தல் பகிஷ்கரிப்பு என்று Jane Russell விபரிக்கிறார்.
1980களின் மத்தியில் இயக்கங்களின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாண தீபகற்பம் இருந்த காலங்களில், இயக்கங்களின் மாணவர் அமைப்புக்கள் நடத்திய பகீஷ்கரிப்புக்களையும் ஹர்த்தால்களையும் ஊர்வலங்களையும் அந்தக் காலப்பகுதியில் வாழ்ந்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பெரும்பாலான பகீஷ்கரிப்புக்களை முன்னின்று நடத்தியது PLOTE அமைப்பின் மாணவர் அணியான TESO, EROS அமைப்பின் GUYS மற்றும் EPRLFன் GUES.
“இன்று ஹர்த்தால்” என்று காலை எழுந்ததும் ஈழநாடு பத்திரிகையில் கொட்டை எழுத்தில் தலையங்கம் மிரட்டும். இலங்கை அரசாங்கம் நிகழ்த்திய ஏதோ ஒரு அநியாயத்தை கண்டித்து, நாங்கள் பள்ளிக்கூடங்களை பகிஷ்கரித்து, கடைகளை அடைத்து, அலுவலகங்களை மூடி, கண்டி வீதியால் கச்சேரியை நோக்கி, “மாணவர் சக்தி… மாபெரும் சக்தி” என்று தொண்டை கிழிய கோஷம் எழுப்பிக்கொண்டு, கொளுத்தும் வெயிலில் ஊர்வலம் போக, கொழும்பில் அத்துலத்முதலியும் ஜெயவர்த்தனாவும் சுடச்சுட தேத்தண்ணியோடு கொக்கீஸ் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.
அதே காலப்பகுதியில், மலையகத்திலும் வேலைநிறுத்த போராட்டங்கள் இடம்பெற்றன. அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகித்துக்கொண்டே, பெருந்தோட்டங்களில் வேலைநிறுத்த போராட்டங்களுக்கு செளமியமூர்த்தி தொண்டமான் அறைகூவல் விடுப்பார். இலங்கைப் பிரஜாவுரிமை கோரியும் சம்பள உயர்வு கேட்டும் மலையகத் தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுத்தந்தது.  இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தோட்டத்துறையின் வகிபாகமும் அந்தத் துறையில் மலையகத் தமிழர்களின் உழைப்பின்  முக்கியத்துவமும் அவர்களடைந்த வெற்றிகளுக்கு பிரதான காரணிகளாகின.
கடந்த ஏப்ரல் 24ம் திகதி, இலங்கையின் பெற்றோலியத்துறை தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் விடுத்த வேலைநிறுத்த கோரிக்கைக்கும், அரசாங்கம் 24 மணித்தியாலங்களுக்குள் அடிபணிந்தது. பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்கு வெளியே ஏற்பட்ட வாகன நெரிசலும் பொருளாதாரத்தையே முடக்கவல்ல அறிகுறிகளும் இலங்கை அரசாங்கத்தை, தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை செவிமடுக்கச் செய்தது.
பெற்றோலிய தொழிற்சங்கத்தின் பணிப் பகிஷ்கரிப்பு மட்டுமன்றி தென்னிலங்கையில் இடம்பெறும் பெரும்பாலான போராட்டங்கள் வெற்றி பெறுவதற்கான காரணம், அவை பெரும்பான்மையின சிங்களவர்களால் மேற்கொள்ளப்படுவது மட்டுமன்றி, அந்த போராடங்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் செலுத்தவல்ல எதிர்மறையான தாக்கமும்தான்.
பெற்றோலியத் தொழிலார்களின் பகிஷ்கரிப்பு நடந்து மூன்று நாட்கள் கழித்து, காணாமல் போனவர்கள் பிரச்சினைக்கு ஆதரவாக தமிழர் பிரதேசங்களில் நடந்த பகிஷ்கரிப்பிற்கு இலங்கை அரசின் பதில், “நல்லாட்சி அரசில் ஜனநாயக வழியில் போராட ஏற்பட்டுள்ள பொது வெளியை இந்த பகிஷ்கிரிப்பு பிரதிபலிக்கிறது” என்பதாக அமைந்தது.

எங்களது பகிஷ்கரிப்புகளும் ஹர்த்தால்களும் கடையடைப்புக்களும் வெற்றி பெற வேண்டுமென்றால், நாங்கள் முதலில் பொருளாதார ரீதியில் பலம் பெற வேண்டும். (tamilguardian.com)
இலங்கைத் தீவின் மூன்றிலொரு பங்கு நிலப்பரப்பையும் மூன்றிலிரண்டு பங்கு கடற்பரப்பையும் தன்னகத்தே கொண்ட, தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெறும் பகிஷ்கரிப்புகள், வெற்றி பெறாமல் போவதற்கான மிகப் பிரதான காரணம், வட-கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் செலுத்தும் தாக்கம் எதுவுமில்லை என்ற கசப்பான உண்மையே. இலங்கையின் 2015ம் ஆண்டிற்கான GDPயில் கிழக்கு மாகாணம் 6.0% ஐயும் வட மாகாணம் 3.5% ஐயும் பங்களிப்பு செய்திருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை கூறுகிறது.
இந்த உண்மைகளை அறிந்தும் தங்கள் சொந்த அரசியல் நலன்களுக்காகவும் அரசியல் சாகஸத்திற்காகவும் (political stunt) ஹர்தால்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழ் தலைமைகளைப் பற்றி என்னத்தைச் சொல்ல?
யுத்தத்தில் அழிவுண்டு சிதைவுண்டு போயிருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எந்தவித ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளாத அதே வேளை, பகிஷ்கரிப்புக்களை நடாத்தி, வட-கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் முதலீட்டாளர்களையும் துரத்தி விடும் கைங்கரியத்தை, இந்த தமிழ் தலைமகள் செவ்வனே செய்கின்றன.
பொருளாதார அபிவிருத்திக்கும் அதனுடனான மக்களின் சுபீட்சமான வாழ்விற்கும் அடிப்படையாக அமைவது தொழில்சார் முதலீடுகளே. இந்த முதலீடுகளை தங்கள் தங்கள் நாடுகளுக்கு கவர உலகிலுள்ள 190 சொச்ச நாடுகளோடு இலங்கையும் போட்டி போடுகிறது. அவ்வாறு இலங்கைக்குள் வரும் முதலீடுகளை தங்கள் தங்கள் மாகாணங்களுக்குள் உள்வாங்க ஒன்பது மாகாணங்களும் முட்டி மோத வேண்டும்.
எங்களது பகிஷ்கரிப்புகளும் ஹர்த்தால்களும் கடையடைப்புக்களும் வெற்றி பெற வேண்டுமென்றால், நாங்கள் முதலில் பொருளாதார ரீதியில் பலம் பெற வேண்டும். புலம்பெயர்ந்த எங்களுறவுகளின் முதலீடுகளுக்கும் வெளிநாட்டு உள்நாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கும் உகந்த பிரதேசமாக வட-கிழக்கு மாகாணங்களை மாற்ற வேண்டும்.
முதலீட்டாளர்கள் ரஜினிகாந்தை வரவழைத்து வவுனியாவில் திறப்பு விழா நடாத்தவும் டென்டுல்கரை கூப்பிட்டு கிளிநொச்சியில் கிரிக்கெட் போட்டி நடாத்தவும் எதிர்ப்பு தெரிவிப்பதை நிறுத்த வேண்டும். அதைவிட முக்கியமாக எங்கள் தலையில் நாங்களே மண் வாரியிறைக்கும் பகிஷ்கரிப்புக்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
ஒரு விதத்தில் இன்று நாங்கள் அரங்கேற்றும் பகிஷ்கரிப்புகளும், 1931ம் ஆண்டு தேர்தல் பகீஷ்கரிப்பைப் போல், வான் கோழி நடனங்களே. எந்தவித பொருளாதார வலுவுமற்று, ஹர்த்தால் நடாத்துவதால் எதிரிக்கு எந்த வித பாதிப்பும் நேராது என்றறிந்தும், கடையடைப்பு நடாத்தி வியாபாரத்தை முடக்கி, அன்றாட வேதனத்தில் வாழும் எம்மவர்களை நாங்களே நிர்க்கதியாக்கும் செயற்பாடுகளை நாங்கள் நிறுத்த வேண்டும்.
நீதியும் நியாயமுமான எங்கள் கோரிக்கைகளை உலகுக்கு எடுத்துரைக்க, எழுக தமிழ் போன்ற பேரணிகளுக்கும் உண்ணாவிரதங்களுக்கும் பகிஷ்கரிப்புகளுக்கும் அழைப்பு விடுக்கும் அரசியல் தலைவர்களை, எங்களுக்காக ஒரு நாளேனும் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகவும் அலரி மாளிகைக்கு பின்பாகவும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் உண்ணாவிரதம் இருக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஒரு விதத்தில் இன்று நாங்கள் அரங்கேற்றும் பகிஷ்கரிப்புகளும், 1931ம் ஆண்டு தேர்தல் பகீஷ்கரிப்பைப் போல், வான் கோழி நடனங்களே (slguardian.org)
ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள், அந்த மக்களின் உரிமைக்காக தங்களை வருத்தி போராட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக “ஊர் வாழ வேண்டுமென்ற, உன்னத நோக்கம் கொண்டு, ஏராளமான துயர் தாங்கி நின்று” களமாடிய ஆயிரமாயிரம் போராளிகள் உலாவிய எங்கள் தேசத்தில்,  அரசியல் உரிமைகளுமின்றி, ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் காணிகளை மீட்கவும் காணாமல் போன தங்கள் உறவுகளை தேடியும் போராடும் எம்மக்களுக்கு தலைமை தாங்கவென முன்வரும் எவரும் அந்த மக்களுக்காக தியாகங்கள் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?
“கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே” என்றுள்ள எங்கள் பகிஷ்கரிப்புகளுக்கு விடை கொடுப்போம். எங்கள் போராட்ட வடிவங்களை மாற்றி எங்கள் தலைவர்களை முன்னிறுத்தி  போராடங்களில் ஈடுபடுவோம். அதேவேளை எங்கள் பொருளாதாரத்தை வளப்படுத்தி வான்கோழிகளாக எங்களைப் பார்ப்பவர் கண்களில் நாங்களும் கான மயில்களாக அவதாரம் எடுப்போம்.
போலிப் பகிஷ்கரிப்புகளை பகிஷ்கரிப்போம் !