(க.கமலநாதன்)
நாட்டின் பிரதான சட்டதிட்டங்களை முதன் முறையாக தமிழில் மாற்றியமைத்து தமிழ் வடிவ சட்டக்கோவைகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. 
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் வைத்து நேற்று 2 ஆம் திகதி  மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்டகோவைகளில் முதல் பகுதிகளை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார்.
இலங்கையின் நீதி மன்ற கட்டமைப்புக்குள் ரோமன் டச்சு சட்டம் மற்றும் ஆங்கிலேயச் சட்டம் என்பன  உள்ளடங்கியுள்ளன. நீதியை நிலைநாட்டும் பணியை செய்யும் நீதிமன்றத்திறத்தின் சட்டதிட்டங்கள் பலவும் ஆங்கில மொழியிலேயே வகுக்கப்பட்டுள்ளன.
அதனால் சாதாரண மக்கள் சட்டத்தினை அறிந்து கொள்வதிலும் நீதித்துறையின் வளர்ச்சிக்கும் நெருக்கடியாகவும் அமைந்திருந்தது. அதனால் தற்போது சுலபமாக சட்திட்டங்களை கற்று அறிந்து கொள்ளும் வகையில் நாட்டின் கோவையில் உள்ள பிரதான சட்ட திட்டங்களை தமிழ் வடிவத்திற்கு மாற்றியமைத்து பிரபல தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை கொண்டு கோவையாக்கியுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட கோவையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துகலாசார அலுவல்கள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ஊனா மெக்குவாலி ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.