திங்கள், 28 அக்டோபர், 2019

கந்த சஷ்டி விரதம் பற்றிய முழு தகவல்கள்!!

கந்த சஷ்டி விரதம் பற்றிய முழு தகவல்கள்!!


palani_murugan

இன்று முதல் கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
கந்த சஷ்டி உருவான கதை
படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சகன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சகன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவவலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் இணைந்து சூரபத்மனும், சிங்கமுகமுடைய சிங்கனும், யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.
காசிபர் தன் பிள்ளைகளிடம், சிவபெருமானை நோக்கித் தவம் செய்து வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர். இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாகப் பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்க, பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தம்மைப் போல் பலரை உருவாக்கி இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர்.
இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக்கண்களைத் திறக்க அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றி, ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர்.
அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க, அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். திருக்கரத்தில் வேலேந்திக்கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை என்றார். 
அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர்.
சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். உலகை ஆள வந்த முருகன் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். முருகன் அசறவில்லை. முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு, அது பாவமென்றும் அவன் கருதினான். 
அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார்.அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. உன்னைப் பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும் என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தைச் சுருக்கி சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலைதூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.
முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். வேல்பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்து, ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார்,சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் அனுஷ்டிக்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.
கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் விடியற்காலை துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, “ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை உச்சரித்தபடி முருகனை மனதில் இருத்தி நீரில் மூழ்கி எழ வேண்டும்.
கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் கலிவெண்பா திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதைத் தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.
இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப “கந்தசஷ்டி” விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும். கடும் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பால், பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.
ஆறாம் நாள் சஷ்டித்திதியில், சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்குமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிரானுக்குரிய சிவராத்திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிக விசேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விழித்திருத்தல்) பொருத்தமானதே. 
கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.
ஜோதிடத்தில் சஷ்டி விரதம்
இந்து மதத்தின் பிரிவுகளில் உள்ள ஆறு பெரும் பிரிவு மதங்களில், மிகப் பழைமையானது கௌமாரம். கார்த்திகேயனை வணங்குபவர்கள் கௌமாரம் மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களே முருக பக்தர்கள்! ஒவ்வொரு மாதத்தின் ஆறாம் திதி சஷ்டி. இந்த சஷ்டியும் இந்தக் குமரனுக்கு உரிய நாள். எனவே கௌமாரர்கள் அனைவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள்.
ஜோதிடத்தில் அழகைக் குறிக்கும் கிரஹம் சுக்கிரன். குழந்தைப் பிறப்பிற்கு தேவையான காமத்திற்கும் சுக்கிலத்திற்கும் அதிபதி சுக்கிரன். சுக்கிரனைக் குறிக்கும் என் ஆறு. தெய்வங்களில் அழகன் எனப் போற்றப்படுபவர் முருகன். முருகனுக்கு ஆறு முகங்கள். முருகனை வளர்த்தவர்கள் ஆறு கார்த்திகை பெண்டீர். முருகனுக்குகந்த திதி ஆறாவது திதியான சஷ்டி. ஆண்மையைக் குறிக்கும் கடவுள் 
முருகப்பெருமான் ஆகும். "சுக்கிற்கு மிஞ்சின மருந்தும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" எனும் சொலவடை உண்டு. மேலும் எண்ணியல் ஜோதிடத்தில் ஆறாம் எண்ணிற்கு அதிபதியாக சுக்கிரனை கூறுவர்.
ஜாதகத்தில் செவ்வாய் என்பது ஆண்மையையும் வீரியத்தையும் குறிக்கும். சூரியன் ஆன்மா உற்பத்தியாவதை அதாவது கருவளர்ச்சிக்கு தேவையான சீதோஷ்ணத்தை தருவது சூரியன். சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கு மேஷமும் சிம்மமும் மற்றும் அதன் அதிபதிகளான செவ்வாயும் சூரியனும் பலமிழந்துவிடுவார்கள் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.
மேஷம் கால புருஷனுக்கு லக்ன பாவம். செவ்வாயின் மூல த்ரிகோண வீடு. சூரியன் உச்சமாகுமிடம். ஆண்மையைக் குதிரையோடு ஒப்பிடுவது வழக்கம். குதிரையைக் குறிக்கும் அஸ்வினி நக்ஷத்திரம் முதல் நக்ஷத்திரமாக அமைந்திருப்பதும் மேஷத்தில்தான். ஆக ஆண்மைக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்திருக்கும். அடுத்தது சிம்ம ராசி. சிம்ம ராசி கால புருஷனுக்கு ஐந்தாமிடம் எனப்படும் புத்திரஸ்தானம் ஆகும். அதற்குரிய கிரகம் சூரியன் ஆகும். இந்த இரண்டு ராசிகளும் கிரஹங்களும் நன்றாக இருந்தால் தான் ஒருவர் தகப்பன் ஆகும் பாக்கியம் ஏற்படும்.
விசாகம் குழந்தை வேலப்பராகிய முருகனுக்கும் உகந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கந்த சஷ்டியின் ஆறாம் நாள் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையுடன் கூடிய சஷ்டி திதியில் அமைந்திருப்பதும் ஆத்மகாரகனாகிய சூரியனின் நக்ஷத்திரமான உத்திராடத்தில் அமைந்திருப்பதும் கோசாரக குருபகவான் செவ்வாயின் வீட்டில் நின்று காலபுருஷ குடும்ப ஸ்தானம் மற்றும் சுக்கிரனின் வீடாகிய ரிஷபத்தை பார்ப்பதும் இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்குக் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பதை உணரமுடிகிறது.
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ருண ரோஹ சத்ரு ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகரின் எதிரி எப்படிப்பட்டவர், எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார், ஜாதகர் என்ன காரணங்களுக்காக கடன் வாங்குவார் என்பதை அறியலாம். நோய் தீர்ப்பதில் செவ்வாயும் அதன் அதிபதியான முருக பெருமானும் முக்கியமானவர்கள் ஆகும். முருகனுக்கு செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது, சஷ்டியில் விரதமிருப்பது மற்றும் கிருத்திகை நக்ஷ‌த்திர நாளில் விரதமிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பாம்பன் குமர குருதாஸ ஸ்வாமிகள் அருளிய “ஓம் ஷண்முக பதயே நமோ நம” எனத் தொடங்கும் குமாரஸ்தவ பாடலைப் படித்தால் நாள் பட்ட தீராத வியாதியும் தீரும். நோய் என்பது தீர்க்கக்கூடியது. ஆனால் பிணி என்பது. தீர்க்க முடியாதது. நோயை மருத்துவர்கள் குணப்படுத்திவிடுவார்கள். பிணியைக் குணப்படுத்துவது சிரமம். பிணி இறையருளால் தான் குணப்படும். வினையும் அப்படித்தான் இறையருளால்தான் தீரும் இங்கே வினை என்பது இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும் முற்பிறவியில் நாம் செய்த செயல் ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தைப் பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த கால கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.
ஜெனன ஜாதகத்திற்கு ஆறாம்வீட்டிற்கு பன்னிரண்டாம் பாவத்தையும் அதன் கிரஹங்களையும் கொண்டு நோய் தீர்க்கும் அமைப்பை அறியலாம். அதேபோல காலபுருஷனுக்கு ஆறாம் வீடான கன்னி ராசிக்கு பன்னிரண்டாம் பாவமான சிம்மம் மற்றும் அதன் திரிகோண ராசிகளான மேஷம், தனுசு ஆகிய ராசிகளும் அதன் அதிபதிளும் நோய் தீர்க்கும் அமைப்பைக் கூறுவார்கள்.
இந்த கந்த ஷஷ்டி விரத முதல் நாளில் வேலைப் பெற விரும்புவோர்கள் மற்றும் சத்ரு, கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கந்த ஷஷ்டி கவசமும், குழந்தை பாக்கியம் பெறவிரும்புபவர்கள் திருப்புகழும், கடும் நோயினால் அவதியுறுபவர்கள் ஷண்முக கவசம் மற்றும் திருமுருகாற்றுப்படையும், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் திருப்புகழில் குறிப்பிட்ட பாடல்களும் சுப்ரமணிய புஜங்கமும் பாடி முருகனை வணங்கி வர அவரவர் பிரார்த்தனைகளை அந்த முருகப்பெருமான் தட்டாமல் நிறைவேற்றுவார்.
மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத வியாதிகள் நீண்ட நாட்களாக இழுவையில் இருக்கும் வழக்குகள், தொடர்ந்து தொல்லை தரும் சத்ருகள் ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் இந்த ஆறு நாட்களில் சத்ரு சம்ஹார அர்ச்சனை செய்து வணங்கி வரத் தொல்லைகள் முற்றும் நீங்கி நிம்மதியைத் தரும் என்பது நிதர்சனம்.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
Mobile 9498098786
WhatsApp 9841595510

சந்திராஷ்டம/அதிர்ஷ்ட தினங்கள்:

சந்திராஷ்டம/அதிர்ஷ்ட தினங்கள்: கன்னி
2015/01/25
கன்னி ராசிக்கான
சந்திராஷ்டம தினங்கள் – அதிர்ஷ்ட நாட்கள்: 2019
மாதம்சந்திராஷ்டம நாட்கள்அதிர்ஷ்ட நாட்கள்
ஜனவரி
24, 25
17, 18, 19
பிப்ரவரி
21, 22
13, 14, 15
மார்ச்
20, 21
13, 14
ஏப்ரல்
16, 17, 18
9, 10
மே
14, 15
6, 7, 8
ஜூன்
10, 11
3, 4, 30
ஜூலை
7, 8, 9
1, 2, 27, 28, 29
ஆகஸ்ட்
4, 5, 31
24, 25
செப்டம்பர்
1, 27, 28, 29
20, 21
அக்டோபர்
25, 26
17, 18, 19
நவம்பர்
21, 22
14, 15
டிசம்பர்
18, 19
11, 12

மரணித்தும், மக்கள் மனங்களில் என்றென்றும் ஈரமான நினைவுகளாக கண்ணதாசன்..!


மரணித்தும், மக்கள் மனங்களில் என்றென்றும் ஈரமான நினைவுகளாக கண்ணதாசன்..!

By ஆர். வெங்கடேசன் 












kannathasan


வாழும்போது வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் மாமனிதர்கள், மரணித்த பிறகும் மக்கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக என்றென்றும் நிலைபெற்றுவிடுகிறார்கள், அவர்களில், தமிழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்ட உன்னத கவிஞர் கண்ணதாசனும் ஒருவர். காலத்தால் அழியாத காவியங்களாக தன் திரைப்படப் பாடல்களில் கரைத்து, மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட அந்த மாபெரும் கவிஞனின் நினைவு நாள் இன்று.. அந்த தன்னிகரில்லா கவிஞனை தமிழர்கள் நினையாத நாள் என்று? கண்ணதாசன் என்ற தமிழ் காவியத்தை அவரது நினைவுநாளில் புரட்டிப்பார்க்கிற ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பாக எனக்கு தெரிந்ததை உங்களுக்காக..
முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல்மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகித்து, வெள்ளித்திரையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன். ‘கவியரசு’ எனப் போற்றப்பட்டவர்.
தமக்கெனத் தனிப்பாணியை உருவாக்கிக்கொண்டவர். அரசியலிலும் ஆன்மிகத்திலும் அவர் வாழ்வில் நேர்ந்த மாற்றங்களுக்கேற்ப, அவர் சிந்தனைப்போக்கில் மாற்றங்கள் நேர்ந்தன; அவற்றையொட்டி அவர் கவிதையும் முரண்பாடுகளைக் கண்டு வளர்ந்தது. தமிழ் வழங்கும் இடங்களில் எல்லாம் அவரைச் சிறப்பாகத் திகழவைத்தவை அவர் எழுதிய ஆயிரக்கணக்கான திரைப்பாடல்களே.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டிநாடு பகுதியின் சிறுகூடல்பட்டி கிராமத்தில் பெற்றோர் சாத்தப்ப செட்டியார் - விசாலாட்சி ஆச்சிக்கு 1927, ஜூன் 24-ல் பிறந்த முத்தையா, பின்னாளில்  கண்ணதாசன் ஆனது சுவாரசியமான கதை. அதை அவரது 'வனவாசம்' நூலைப் படித்தால் உணரலாம். உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.
செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருந்து வருகிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். 
புனைபெயர்
காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி.
கல்வி
சிறுகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வி, அமராவதி புதூர் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசித்ததின் பலனாக, பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவு. 15 வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பிவந்தார். சந்திரசேகரன் என்று புனைபெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். 
கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் 17 வயதில் அவரது முதல் கவிதையான ‘‘நிலவொளியிலே” வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். 
நண்பர் ஒருவரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "பிழை திருத்துனர்" வேலை கேட்டார். நேர்முகத் தேர்வில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அப்போது அந்த நொடியில் அவர் அவரது பெயரை ‘‘கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில்தான்.   
கண்ணதாசனின் திறமையால் ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார்.  
பின்னர், திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. 
கவிதைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட கண்ணதாசன், திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாட்டின் வெளிச்சமாக, சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிடைத்தது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.
 
பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய ‘கள்வனின் காதலி’ படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். இந்த பாடல்தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். 
கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, கதை, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர் என சகல துறைகளிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்திவந்த கண்ணதாசனின் பாடலை தங்களது இசையில் அவருடைய பாடல் இடம்பெறுவதை பெருமையாகக் கருதினர் அக்கால இசையமைப்பாளர்கள்.  
எழுதிய காலம்
1944 - 1981
முதல் குறுங்காவியம்
மாங்கனி. இது, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் சிறையில் இருந்தபோது படைத்தது. (1952-53)
மணவாழ்க்கை
1950-ல் கண்ணதாசனின் மணவாழ்க்கை தொடங்கியது. கவிஞருக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் பொன்னழகி என்கிற பொன்னம்மா. இவர்களுக்கு கண்மணி சுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்கள். அலமேலு, தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்கள் (விசாலாட்சி என்பது கண்ணதாசனின் தாயாரின் பெயர்).
இரண்டாவது மனைவி பார்வதிக்கு காந்தி கண்ணதாசன், கமல், அண்ணாதுரை, கோபாலகிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்கள். ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்கள். (காந்தி கண்ணதாசன் தற்போது 'கண்ணதாசன் பதிப்பக'த்தின் உரிமையாளர்).
மூன்றாவது மனைவி புலவர் வள்ளியம்மைக்கு, விசாலி என்ற ஒரே மகள். (கண்ணதாசன் இறந்தபோது விசாலிக்கு 4 வயதுதான். பிற்காலத்தில், சினிமாவிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். மேடைப் பேச்சாளரும்கூட). 
மூன்று மனைவியர், 15 பிள்ளைகள் என வாழ்ந்த கபடமற்ற வள்ளல் கண்ணதாசன் தன் வாழ்க்கை வரலாற்றை, ஒளிவுமறைவு இன்றி 'வனவாசம்' என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். அது அவருடைய மறுபக்கத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறது. தன் குணச்சித்திரத்தை இரண்டே வரிகளில் பாடலாக எழுதியுள்ளார்.
கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்கள், துன்பங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். 
'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணை இருப்பு' என்பதே அப்பாடல். இப்பாடல், அவரே பாடுவதுபோல ‘இரத்தத்திலகம்’ படத்தில் இடம் பெற்றுள்ளது.
அரசியல்
தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன், 1949-ல் திமுக தொடங்கி அரசியல் பயணத்தை தொடங்கியவர் ஆரம்பகாலத்து திமுக தலைவர்களுள் ஒருவராக விளங்கினார். அரசியலில் துரோகமும் சுயநலமும் கோலோச்சுவது கண்டு விரக்தியுற்றவர் 1960-61-ம் ஆண்டுகளில் திமுகவில் இருந்து விலகிச் சிறிது காலம் கழித்துக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர் அரசியல் தனக்கு ஒத்துவராது என்று முற்றிலும் அரசியலில் இருந்து விலகினார்.
ஆரம்ப காலத்தில் பகுத்தறிவு என்ற போர்வையில் நடந்த நாத்திக பிரசாரத்தில் மூழ்கிய கண்ணதாசன், அதிலுள்ள ஏமாற்றுவித்தையை உணர்ந்து ஆத்திகப் பாதைக்கு திரும்பினார்.  
கண்ணதாசனின் ஆளுமை என்பது, அவரது சாகாவரம் பெற்ற இலக்கியங்களில்தான் நிலைகொண்டுள்ளது. நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்கள், அற்புதமான துள்ளுதமிழ் நடையுடன் கூடிய நூல்கள், கட்டுரைகள், சிறுகாப்பியங்கள், நவீனங்களை எழுதியது கண்ணதாசனின் சாதனை. தமிழில் புதிய மறுமலர்ச்சியை பாரதிக்குப் பிறகு ஏற்படுத்தியவர் கண்ணதாசனே.
இவரது 'சேரமான் காதலி' என்ற புதினம் 1980-ல் சாஹித்ய அகாதெமி விருது பெற்றது. 'குழந்தைக்காக' என்ற திரைப்படத்திற்கு எழுதிய திரைவசனத்திற்காக (1961) இவருக்கு தேசிய விருது கிடைத்தது. திரைப்பாடல்களிலும் செந்தமிழ் துள்ளி விளையாடுவது கண்ணதாசனின் சிறப்பு. பண்டைய இலக்கியங்களில் அவருக்கு இருந்த தேர்ச்சி திரைப்பாடல்களில் வெளிப்பட்டது. சந்தமும், செந்தமிழும் எந்த சிரமும் இன்றி கைகோர்த்தன. கண்ணதாசனின் பாடல்களில். அவர் ஆசுகவியாகவே திகழ்ந்தார்.
பத்திரிகை
அரசியல்வாதி, திரையிசைக் கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் என்ற பன்முகங்களுடன், பத்திரிகையாசிரியராகவும் கண்ணதாசன் விளங்கினார். அவர் நடத்திய சண்டமாருதம், திருமகள், முல்லை, திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல் திரை, கண்ணதாசன் ஆகிய இதழ்கள் தமிழ் இதழ்களின் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவையாக இன்றும் பேசப்படுகின்றன. குறிப்பாக தென்றலில் அவர் தீட்டிய கூர்மையான அரசியல் நையாண்டியுன கூடிய  உருவகக் கட்டுரைகள் அக்காலத்தில் பெரும் விழிப்புணர்வையும் பரபரப்பையும் உருவாக்கின.
அரசவைக் கவிஞர்
தமிழ்நாட்டின் அரசவைக் கவிஞராக (ஆஸ்தான கவிஞர்) கண்ணதாசனை எம்.ஜி.ஆர். நியமித்தார். தமிழ்நாட்டில், காங்கிரஸ் ஆட்சியின்போது நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அரசவைக் கவிஞராக இருந்தார்.
அதன்பிறகு அப்பதவி ரத்து செய்யப்பட்டது. 1977 தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றிபெற்று, தமிழக முதல்வரானார். அவர் கண்ணதாசனை, 28.3.1978-ல் 'அரசவைக் கவிஞர்' ஆக நியமித்தார்.
அர்த்தமுள்ள இந்துமதம்
அர்த்தமுள்ள இந்துமதம் (பத்து பாகங்கள்), வனவாசம், மாங்கனி, ஏசு காவியம் ஆகியவை கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டிய நூல்களாகும். பகவத் கீதைக்கும் அபிராமி அந்தாதிக்கும் சௌந்தர்யலஹரிக்கும் (பொன்மழை) கண்ணதாசன் விளக்கம் எழுதி இருக்கிறார்.
சுயபிரகடனம்
கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கை கட்டுப்பாடற்றது. மனித பலவீனங்களுக்கு சாட்சியாக விளங்குவது. அதை அவரே தனது சுயசரிதையில் கூறி இருக்கிறார். ''நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' என்பதே கண்ணதாசனின் சுயபிரகடனம்.
தமிழகத்தில் நாத்திகவாதமும் பிரிவினைவாதமும் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், அதே பிரசாரக் காலத்திலிருந்து விடுபட்டு, தேசியத்தையும் தெய்வீகத்தையும்  உயர்த்திப் பிடித்த குரல் கவிஞர் கண்ணதாசன். மக்களிடம் வெகுவாகப் புழங்கிய திரையிசைப் பாடல்களின் மூலம் தனது கருத்துகளை ஆர்ப்பாட்டமின்றி அறிவுறுத்திய தேசிய சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது.
கண்ணதாசனின் நூல்கள்
* பிரதானமானவை
* இயேசு காவியம்
* அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
* திரைப்படப் பாடல்கள்
* மாங்கனி
கவிதை நூல்கள்
* கண்ணதாசன் கவிதைகள் (6 பாகங்கள்)
* பாடிக்கொடுத்த மங்களங்கள்
* கவிதாஞ்சலி
* தாய்ப்பாவை
* ஸ்ரீகிருஷ்ண கவசம்
* அவளுக்கு ஒரு பாடல்
* சுருதி சேராத ராகங்கள்
* முற்றுப்பெறாத காவியங்கள்
* பஜகோவிந்தம்
* கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்
புதினங்கள்
* அவள் ஒரு இந்துப் பெண்
* சிவப்புக்கல் மூக்குத்தி
* ரத்த புஷ்பங்கள்
* சுவர்ணா சரஸ்வதி
* நடந்த கதை
* மிசா
* சுருதி சேராத ராகங்கள்
* முப்பது நாளும் பவுர்ணமி
* அரங்கமும் அந்தரங்கமும்
* ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
* தெய்வத் திருமணங்கள்
* ஆயிரங்கால் மண்டபம்
* காதல் கொண்ட தென்னாடு
* அதைவிட ரகசியம்
* ஒரு கவிஞனின் கதை
* சிங்காரி பார்த்த சென்னை
* வேலங்காட்டியூர் விழா
* விளக்கு மட்டுமா சிவப்பு
* வனவாசம்
* அத்வைத ரகசியம்
* பிருந்தாவனம்
வாழ்க்கைச்சரிதம்
* எனது வசந்த காலங்கள்
* எனது சுயசரிதம்
* வனவாசம்
கட்டுரைகள்
* கடைசிப்பக்கம்
* போய் வருகிறேன்
* அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
* நான் பார்த்த அரசியல்
* எண்ணங்கள்
* தாயகங்கள்
* வாழ்க்கை என்னும் சோலையிலே
* குடும்ப சுகம்
* ஞானாம்பிகா
* ராகமாலிகா
* இலக்கியத்தில் காதல்
* தோட்டத்து மலர்கள்
* இலக்கிய யுத்தங்கள்
* போய் வருகிறேன்
நாடகங்கள்
* அனார்கலி
* சிவகங்கைச்சீமை
* ராஜ தண்டனை
கவிஞரின் பழமொழிகள்
கையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம் ரூபாய் வேண்டுமானாலும் எழுதலாம், செய்யப்போவதில்லை என்று முடிவுகட்டிவிட்டால், எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் செல்லலாம்!
முட்டையைக் கொடுத்துக் காசு வாங்கிறவன் வியாபாரி; காசைக் கொடுத்து முட்டையை வாங்குபவன் சம்சாரி; எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி.
கடிகாரம் மணியைக் காட்டுகிறது. காலண்டர் தேதியைக் காட்டுகிறது. தேர்தல் ஜாதியைக் காட்டுகிறது.
தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்!
யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே
ஒருவேளை மாற நினைத்தால்
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாறவேண்டி வரும்.
அழும்போது தனிமையில் அழு; சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி! கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்; தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.
நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே..
மழைகூட ஒருநாளில் தேனாகலாம்; மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்..
ஆனாலும் அவையாவும் நீயாகுமா? அம்மாவென் றழைக்கின்ற சேயாகுமா?
உணர்ச்சிகளைச் சொல்லும்போது நேராகவும் கூராகவும் அவர் வெளிப்படுத்த தவறியதில்லை.
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
நான்பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்.
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை.
சொல்லாத சொல்லுக்கு விலைஏது மில்லை.
என தத்துவத்தைத் திரைப்பாடல்களில் மனமுருகக் காட்டியவர் கண்ணதாசன்.
"எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - என்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா."
நூற்றுக்கணக்கான பாத்திரங்களின் ஆயிரக்கணக்கான உணர்வுகளின் நுட்ப வேறுபாடுகளைக் கண்ணதாசன் சித்திரித்ததுபோல வேறொருவர் சித்திரித்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன். திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன்தான் இந்துவாக இருந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.
மக்கள் மனங்களிலும் உதடுகளிலும் அன்றும் இன்றும் என்றும் அசைப்போடும் பாடல்கள்
"கலங்காதிரு மனமே ,உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே.."என்று பாடல் எழுதி அவரது கனவை எல்லாம் நனவாக்கிய கவிஞர் அடுத்து...
"போனால் போகட்டும் போடா .
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ?"
"வீ டுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ ?"
"மனிதன் மாறி விட்டான்
மதத்தில் எறி விட்டான்.."
"உன்னைச் சொல்லி குற்றமில்லை.."
"கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்" 
"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..."
"மலர்ந்தும் மலராத பாதி மலர் போல..."
"உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை"
"பிறக்கும் போது அழுகின்றான்.
சாகும் போது அழுகிறான்"
"நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னை தொடாதே"
‘கவலை இல்லாத மனிதன்’ படம் எடுத்து நஷ்டப்பட்டு கவலைப்பட்ட வரலாறும் உண்டு.
"நோட்டெழுதி வாங்கிய கடனுக்கு
பாட்டெழுதி வாங்கிய பணம் போகத் தொடங்கியது.."
என்று சொன்ன வரிகள் இன்றும் பலரின் உதடுகளில் உறவாடி வருகின்றன.
மணிமண்டபம்
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகிறது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கவிஞரின் இரங்கல் கவிதை
மறைந்த பிரதமர் நேரு மீது மிகுந்த பற்று வைத்திருந்த கண்ணதாசன். 1964-ல் நேரு மறைந்தபோது அவர் மீது கொண்டிருந்த பக்திக்கு சான்றாக 'சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா' என்று கண்ணதாசன் எழுதிய இரங்கல் கவிதை விளங்குகிறது.
இதோ அந்தக் கவிதை..
சீரிய நெற்றி எங்கே?
சிவந்த நல் இதழ் எங்கே?
கூரிய விழிகள் எங்கே?
குவலயம் போனதெங்கே?
நேரிய பார்வை எங்கே?
நிமிர்ந்த நன் நடைதான் எங்கே
நிலமெல்லாம் வணங்கும் தோற்றம் நெருப்பில் வீழ்ந்த திங்கே
ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய்?
எங்கள் ராஜா இல்லையே மார்பினில் சூட
தாயே எனக்கொரு வரம் வேண்டும்
தலை சாயும் மட்டும் நான் அழ வேண்டும்
சாவே உனக்கொருநாள்
சாவு வந்து சேராதோ
சஞ்சலமே நீ ஒரு சஞ்சலத்தைக் காணொயோ?
தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ?
தெய்வமே உன்னையும் நாம் தேம்பி
அழ வையோமோ
கண்ணதாசனின் ஆசையும் மறைவும்
கண்ணதாசன் பொது நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் பேசிவந்தார். அப்போதெல்லாம் அவர் தனது இறுதி நாட்கள் பற்றியும், மரணத்தைப் பற்றியும் குறிப்பிடலானார். தன்னுடைய மரணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அவரே உணரலானார். 'மரணத்தை ரகசியமாக இறைவன் வைத்துள்ளதால்தான் மனிதன் ஓரளவுக்காவது மனிதாபிமானத்துடன் நடக்கிறான்' என்று ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், 'காமராஜர்போல, மறைந்த பட அதிபர் சின்ன அண்ணாமலைபோல மரணம் திடீர் என்று வர வேண்டும். என் கண்ணனிடம் எனது கடைசி ஆசையாக இதைத்தான் கேட்டு வருகிறேன்' என்று கூறிவந்த கவிஞர், வெள்ளித்திரையில் ஒரு முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர். உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24-ல் சிகாகோ நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்றைய நாளான அக்டோபர் 17 சனிக்கிழமை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்தார். 
நம்மைவிட்டுப் பிரிந்து 36 ஆண்டுகள் கடந்தும், கண்ணதாசன் இன்றும் நம் மத்தியில் 
என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் ‘கவியரசு’ அவர்.

12 ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 | ஜோதிடம் | தினமணி

ஐஎஸ் அமைப்பினால் கொல்லப்பட்ட பெண்ணின் பெயரில் முன்னெடுக்கப்பட்ட பக்தாதிக்கு எதிரான நடவடிக்கை | Virakesari.lk

ஐஎஸ் அமைப்பினால் கொல்லப்பட்ட பெண்ணின் பெயரில் முன்னெடுக்கப்பட்ட பக்தாதிக்கு எதிரான நடவடிக்கை | Virakesari.lk: ஐஎஸ் அமைப்பினால் கொல்லப்பட்ட பெண்ணின் பெயரில் முன்னெடுக்கப்பட்ட பக்தாதிக்கு எதிரான நடவடிக்கை

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

கோட்டா காலத்தில் ஆவணங்கள், கோவைகள் எரிக்கப்பட்டன

கோட்டா காலத்தில் ஆவணங்கள், கோவைகள் எரிக்கப்பட்டன

இவர் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்க முடியுமா
கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளர் பதவிக்காலத்து ஆவணங்களும், கோவைகளும் காணாமல் போயுள்ளன. அல்லது எரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறான ஒருவர் தான் நாட்டின் மிகப் பெரிய பதவியான ஜனாதிபதி பதவிக்காகப் போட்டியிட முன்வந்துள்ளார். இவர் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்க முடியுமா என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது என்று ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஆசூ மாரசிங்க நேற்று முன்தினம் ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
2005 ஆம் ஆண்டில் பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஷ தனது சொத்து விபரங்களைப் பிரகடனப்படுத்த தவறிவிட்டதாகவும், இன்றுவரையில் அந்த விபரங்களை வெளிப்படுத்தவில்லை.
பாதுகாப்புச் செயலாளர் என்ற அடிப்படையில் அவர் மீதான பொறுப்பை நிறைவேற்றத்தவறியுள்ளதாகவும் ஆசூ மரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு செயலாளர் பதவிக்கே பொருத்தமில்லாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவானால் அதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
அவர் ஜனாதிபதி தேர்தலில் முன்வைக்கும் கொள்கைத்திட்டம் தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார். இந்த அழைப்புக்கு இன்னமும் அவரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. நாம் மீண்டுமொரு தடவை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம். எந்தவொரு ஊடகத்தின் மூலமோ, அல்லது அனைத்து ஊடகங்களையும் ஒரே இடத்தில் கூட்டியோ இந்த பகிரங்க விவாதத்தை நடத்த சஜித் பிரேமதாச தயாராகவே உள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனித்துநின்று பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம்கொடுப்பார் என்பதை அறிந்துகொள்ளவே விரும்புகிறோம்.
நாட்டின் தலைவராக பதவிக்கு வரக்கூடிய ஒருவர் பிரச்சினைகளுக்கு தனித்து நின்று முகம்கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும். அண்ணனிடம் கேட்டு பதில் சொல்கிறேன் எனக் கூறி தப்பிக்க முடியாது. இன்று கோட்டாபய செய்வது அண்ணனின் தலையில் பிரச்சினைகளை போட்டுத் தப்பும் ஒரு கலையைப் பின்பற்றுகிறார். இது தலைமைக்கு பொருத்தமானதல்ல. இவ்வாறான ஒருவரிடம் நாட்டின் பொறுப்பை எப்படி ஒப்படைக்க முடியும். தேர்தலில் மக்கள் நன்றாகச் சிந்தித்து முடிவெடுத்து தமது வாக்குரிமையைப் பயன்படுத்த முன்வரவேண்டும். கண்களை மூடிக்கொண்டு படுகுழியில் வீழ்ந்து விடக்கூடாது.
எம். ஏ. எம். நிலாம் 

சனி, 26 அக்டோபர், 2019

எந்த இனத்துக்கும் அநீதி இழைப்பதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.


எமது நாட்டின் இனங்களுக்கிடையில் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு இனத்திற்கும் அநீதி இழைக்கப்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. பாதுகாப்பு என்பது சகலருக்கும் ஒருவிதமானதாகத் தான் அமையும் என தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேசிய பாதுகாப்பு என்ற எனது கருத்து ஒரு சமுகத்தை மட்டும் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் ஒரு திட்டமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜா-எல நகரில் நேற்று முன்தினம் இரவு (24) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச,
இந்நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜையும் அரசியலமைப்பு ரீதியில் ஒரு விதமாகத்தான் உள்வாங்கப்படுகிறார்கள். எவருக்கும் தனியான சிறப்பு உரிமை எதுவும் கிடையாது. நான் அனைவரையும் இலங்கை பிரஜையாகவே பார்க்கின்றேன். இன ரீதியாகவோ மத ரீதியாகவோ யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பார்க்க விரும்பவில்லை.
எங்களுக்குத் தேவை சுவீட்சமான ஒரு நாட்டை உருவாக்குவதே. உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இரண்டாம் தரமாக வாழ்வதற்கு நாம் விரும்பவில்லை.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் வறுமை கோட்டிலுள்ள மக்களை எட்டவில்லை. அவர்கள் தொடர்ந்தும் வறுமை கோட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பொருளாதார ஆய்வு முடிவுகளின்படி எமது நாட்டில் வளமான வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு அவசியமான வருமானத்தை நாட்டு மக்கள் தொகையில் 45சதவீதமானோர் பெற்றுக்கொள்வதில்லை எனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பாலும் வரி அதிகரிப்பாலும் பாரிய சுமையை மக்கள் சுமந்தி கொண்டிருக்கும் நிலையில் நான் பதவியேற்றதும் மிக குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன் அதனை சாதாரண மக்களும் உணரக் கூடிய நிலையை உருவாக்குவேன். எமது மக்கள் இன்னொருவர் கைகளில் தங்கி நிற்கும் நிலை இருக்கக் கூடாது. எல்லோருக்கும் சமமான சகல உரிமைகளும் கிட்டவேண்டும்.
எதிர்காலத்தில் நாட்டின் நிர்வாகம் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்போது நாட்டு மக்களை முன்னிறுத்தி சிந்தித்து வரிச் சுமையிலிருந்து விடுபடும் ஒரு நிலையை ஏற்படுத்துவேன். எம்மிடம் நிதி இல்லையென்று எவரும் கூறமுடியாது உண்மையிலேயே போதுமான அளவிற்கு நிதி வசதியுண்டு. ஆனால் ஜனாதிபதி என்ற கதிரைக்கு சென்ற உடன் அரச திறைசேரியை குடும்பத்தின் உடமையாக்கிக் கொள்ளும் கலாசாரமொன்றே உருவாகியிருந்தது. நாட்டின் அரச சொத்துக்கள் அனைத்தும் பொது மக்களுக்கே சொந்தமானது. அரசியல் வாதிகளுக்குச் சொந்தமானதல்ல. எனவே நாம் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யவோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தவோ மாட்டோம். நாம் நாட்டை ஆட்சி செய்வோர்களல்ல. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மக்களால் குறிப்பிட்ட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற நாட்டுக்கான சேவையாளர் மட்டுமே. மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொண்டு சேவை செய்வதே என் மீதான கடப்பாடாகும்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் வாதிகளுக்கு புதிய வாகனங்கள், வீடுகள் வழங்கப்படும். ஆனால் நான் ஜனாதிபதியானதன் பின்னர் எக்காரணம் கொண்டும் வெளிநாடுகளிலிருந்து எனது பாவனைக்காக குண்டு துளைக்காத வாகனங்களை பெற்றுக் கொள்ள மாட்டேன். அரசியல் வாதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு பாராளுமன்றத்தினூடாக நிதி ஒதுக்கீடு செய்யமாட்டேன். இந்த பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கம் அமைப்பதென்பது உண்மையிலேயே மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களுக்கும் சேவையாற்றி நாட்டுக்கும் சேவையாற்றுவதேயாகும். இதனை உணர்ந்த எவரும் என்னோடு இணைந்து செயற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றி:எம்.ஏ.எம். நிலாம்,தினகரன் .

வியப்பூட்டும் வாக்குறுதிகள்

வியப்பூட்டும் வாக்குறுதிகள்

தேர்தல் திருவிழாக் காட்சிகளும் தலைவர்களின் கதைகளும் கட்சிகளின் அறிக்கைகளும் சிரிப்பைத் தருகின்றன.காலங்கள் மாறினாலும் இந்தக் காட்சிகள் மாறவில்லை.அதாவது எதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே பொருளாகும்.
இதனால்தான் இலங்கையில் இனப்பிரச்சினை உள்ளிட்ட எந்தப் பிரச்சினையும் தீர்க்க முடியாமலிருக்கின்றன. எளிய உண்மை என்னவென்றால், இலங்கையின் இனப்பிரச்சினை தொடக்கம் பொருளாதாரப் பிரச்சினை வரையில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் மேலும் வளர்ந்து முள்ளாகச் சடைத்துக் கொண்டேயிருக்கின்றன. இதைத் தீர்ப்பதற்கு ஆத்ம சுத்தமான முறையில் முயற்சிகளை எடுத்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது.
ஆனாலும் அரசியல்வாதிகள், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் திரும்பத் திரும்ப நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளோடு வருகிறார்கள். “இதைப் பற்றி மக்கள் என்ன சிந்திப்பார்களோ” என்று எந்தவிதமான அக்கறையோ கூச்சமோ இல்லாமல் மறுபடியும் மறுபடியும் அதே வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டு நமக்கு முன்னே வருகிறார்கள் என்றால், இப்படி வரக்கூடிய துணிச்சலை இவர்களுக்குக் கொடுத்தது வேறு யாருமல்ல. நாம்தானே!
எளியதொரு உதாரணம், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்று எத்தனை தடவை சொல்லி விட்டன இக்கட்சிகள்? இப்படிச் சொன்னதற்கு அமைய, வாக்குறுதிகளை வழங்கியதற்கு ஏற்ப இவை விசுவாசமாகப் பின்னர் செயற்பட்டுள்ளனவா? அப்படிச் செயற்படவில்லை என்றால் இவற்றை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? 
இன்றுள்ள தலைவர்கள் எத்தனையோ தடவை இதைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஏராளம் வாக்குறுதிகளை நமக்குத் தந்திருக்கிறார்கள். இவர்கள்தான் ஐம்பது ஆண்டுகளாக (அரை நூற்றாண்டு காலமாக) மாறி மாறி அரசியல் அதிகாரத்திலிருக்கிறார்கள். தீர்மானிக்கும் நிலையிலிருக்கிறார்கள்.  இவர்களால் இந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லை என்றால் இதை நாம் எப்படிப் பார்ப்பது? எப்படிப் புரிந்து கொள்வது? இனியும் இதைப் பற்றி பேசுவதற்கான தகுதி இவர்களுக்கு உண்டா? இனியும் அரசியலில் இவர்களை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? 
ஏனெனில் தங்களுடைய கடந்த காலச் செயற்பாடுகளின் மூலமாக தங்களைத் தவறானவர்கள் என்று இவர்களே நிரூபித்திருக்கிறார்கள். தங்களின் பலவீனங்களையும் தகுதியின்மையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கடந்த காலத்தில் இவர்கள் இந்த நாட்டு மக்களாக எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எடுத்துப் படித்துப் பார்த்தால் புரியும். 
காலமாற்றங்கள் என்பது சமூக வளர்ச்சியினாலேயே அடையாளப்படுத்தப்படும். சமூக வளர்ச்சி என்பது ஒரு தீப்பொறியைப் போன்றது. அது நிச்சயமாக ஒரு போது ஒளிகொண்டெழும். அதுவரையில் இந்த மாதிரியான சீரழிந்த நிலையே நீடிக்கும். அந்த நிலை இந்த மாதிரியான அரசியல்வாதிகளுக்கும் தவறான அரசியலுக்கும் வாய்ப்பாகும்.
இதை நாம் மேலும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய பிரச்சினைகள் எதுவும் தீராதிருப்பதற்குக் காரணம் நாமும்தான் என்ற புரிதல் (பிரக்ஞை) நமக்கு வேண்டும். ஆனால், இதைப்பற்றி நாம் கவலைப்படுவதே கிடையாது.
ஆனாலும் அவ்வப்போது இதையெல்லாம் கண்டு கோபப்படுகிறோம். சலித்துப் பேசுகிறோம். பிறகு வேறு வழியில்லை என்று சொல்லிக் கொண்டு இவர்களுக்கே வாக்களித்து விட்டு வருகிறோம். இது நம்முடைய இயலாமையின் வெளிப்பாடா? அல்லது அறியாமையின் விளைவா? இதிலே சிங்களத் தலைவர்கள்தான் ஏதோ தவறானவர்கள், வாக்குறுதிகளைச் செயற்படுத்தாதவர்கள் என்றில்லை.  தமிழ்த் தலைவர்களும் தமிழ்க் கட்சிகளும் இதிலே சேர்த்தி.
2009க்குப் பிறகு வருகின்ற எல்லாத் தேர்தல்களிலும் போர் வெற்றி அரசியல் முதலீடாக்கப்படுகிறது.
விவசாயிகளின் கடன்களை ரத்துச் செய்வேன் என்கிறார் கோட்டாபய. விவசாயிகளுக்கு வேண்டியளவுக்கு மானியங்களை வழங்குவேன் என்கிறார் சஜித். நாட்டின் பாதுகாப்புக் கவசமாக இருப்பேன் என்கிறார் கோட்டாபய. பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க மாட்டேன் என்கிறார் சஜித். புதிய பொருளாதாரத் திட்டங்களை உருவாக்குவேன் என்கிறார் கோட்டாபய. சம்பளத்தையே வாங்க மாட்டேன் என்கிறார் சஜித்.
இப்படி ஆளாளுக்கு மாறி மாறி ஏராளம் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது இந்த ஜனாபதிபதிப் பதவி என்பது ஏதோ கடவுளுக்கு நிகரானது. சர்வ வல்லமை பொருந்தியது. எல்லா நோய்களுக்கும் நிவாரமளிக்கக் கூடிய சர்வரோக நிவாரணி போலவே படுகிறது.   இதொன்றும் புதிதல்ல. இதற்கு முன்பிருந்தவர்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்களில்லை இவர்களும் என்பதையே இவர்களுடைய கடந்த காலமும் எங்களுக்கு நிரூபித்திருக்கிறது.
 வந்தாலும் வந்தது ஜனாதிபதித் தேர்தல். இந்தத் தேர்தலையொட்டித் தினமும் ஏராளம் ஏராளம் வேடிக்கைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் இருபத்தைந்து நாட்கள் இருக்கின்றன. அதற்கிடையில் இன்னுமின்னும் ஏராளம் காட்சிகளைப் பார்க்கலாம். ஆனால், இந்தக் காட்சிகள் ஒன்றும் முன்னரைப்போல இலகுவாகக் கடந்து செல்லக் கூடியனவல்ல. அல்லது இலகுவில் மறந்து விடக் கூடியனவாகவும் இருக்காது.
நன்றி :கருணாகரன்.தினகரன் .