திங்கள், 27 டிசம்பர், 2010

பதினாறு பேறு.

தமிழ் பண்பாட்டில் தமிழர்களின் சைவத் திருமணச் சடங்குகளில் "ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தப்படுகின்றது. வாழ்த்துதல்,ஆசிர்வதித்தல் என்பவைகள்,அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். வாழ்த்தும்போதும்,ஆசிர்வதிக்கும்போதும் எல்லோராலும் கூறப்படும்.வார்த்தை இந்தப் பதினாறு பேறு. இந்தப் பதினாறு பேறுக்குள் அடங்கியிருப்பது என்ன?.

எனது நண்பன் ஒருவர் கூறினார் பதினாறு பிள்ளைகளைப் பெற்று பெருவாழ்வு வாழ்வதுதான்.பதினாறு பேறு என்பதன் கருத்தென்றார். இரண்டு பிள்ளைகளைப் பெற்றவர்களே துண்டைக்காணோம்,துணியைக்காணோம் என்று ஓடிக்கொண்டிருக்கும்போது,பதினாறு பிள்ளைகளைப் பெறுவதென்பது நடக்கக்கூடிய காரியமா? கட்டுபடியாகிகின்ற ஒரு சாதனை தானா என்ற கேள்வியின் தேடல்தான் இந்தப்பதிவு.


  1. கலையாத கல்வி
  2. கபடற்ற நட்பு
  3. குறையாத வயது
  4. குன்றாத வளமை
  5. போகாத இளமை
  6. பரவசமான பக்தி
  7. பிணியற்ற உடல்
  8. சலியாத மனம்
  9. அன்பான துணை
  10. தவறாத சந்தானம்
  11. தாழாத கீர்த்தி
  12. மாறாத வார்த்தை
  13. தடையற்ற கொடை
  14. தொலையாத நிதி
  15. கோணாத செயல்
  16. துன்பமில்லா வாழ்வு

.இதைத்தான் கவி காளமேகப் புலவர் இப்படிக் கூறினாரோ. 

துதிவாணி வீரம் விசயம்சந்தானம் துணிவுதனம்
 மதிதானியம் சௌபாக்கியம் போகம் - அறி(வு)அழகு
 புதிதாம் பெருமை அறம்குலம்நோவகல் பூண்வயது
 பதினாறுபேறும் தருவாய்மதுரைப் பராபரனே 

இதையே அபிராமி பட்டர் இன்னும் ஒருபடி மேலே சென்று என்ன அழகாகக் கூறியிருக்கிறார்.  பாருங்கள்  

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே! 

இவை எல்லாம் சரிதான்,ஆசிர்வதிப்பவர்கள் வாழ்த்துபவர்கள் மணம் கனிந்து வாழ்த்த
வேண்டும்.அவர்கள் மணம் கனிந்து வாழ்த்தினால்தான் இந்தப் பதினாறில் ஒன்றாவது,
நம்மை வந்து சேரும்.வயிறு எரிந்து வாழ்த்தி, ஆசிர்வதித்தால், எந்தவித பயனும் கிடைக்கப் போவதில்லை.

இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!