வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

சரி சரி அவரே இருக்கட்டும்! ஓ.பி.எஸ் க்கு ‘விட்டுக்கொடுத்த’ சசிகலா!

சரி சரி அவரே இருக்கட்டும்! ஓ.பி.எஸ் க்கு ‘விட்டுக்கொடுத்த’ சசிகலா!


2017ம் ஆண்டு இப்படி தொடங்கும் என மொத்த தமிழகமும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஜெயலலிதா இல்லாமல் ஒரு புத்தாண்டு பிறந்திருக்கிறது. ஜெயலலிதா இல்லாமல் மாணவர்கள் நடத்திய எழுச்சிப் போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது.
கட்சியின் செயற்குழுவில் மட்டுமே ஜெயலலிதாவால் அனுமதிக்கப்பட்ட சசிகலா, அந்த கட்சிக்கே பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு முன் 2 சந்தர்ப்பங்களில் முதல்வர் பொறுப்பேற்ற ஓ.பி.எஸ் எப்போதும் இல்லாமல் நெஞ்சு நிமிர்த்தியபடி சட்டமன்றத்தில் அம்மாவின் இருக்கையை அலங்கரிக்கிறார்.
முதல்வராக இருந்த முந்தைய காலங்களில் கள்ள மௌனத்துடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்க்கும் அவர், அப்படியே சந்திக்கும் அவசியம் எழுந்தாலும் எல்லை மீறிவிடாமல் பேசி வந்தவர், இன்று பேட்டிகளின்போது சிநேகமாய் சிரிக்கிறார்; சீண்டும் கேள்விகளுக்கும் சீற்றமின்றி பதில் தருகிறார்.
நழுவி ஓடும் மீனாக இருந்தவர் நின்று அடுத்து வரும் கேள்விகளை எதிர்நோக்குகிறார். கையை பின்னுக்கு கட்டிக்கொண்டு கம்பீரமாக பேசுகிறார். ஜல்லிக்கட்டு நடக்குமா... என புதுடெல்லி விமானநிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “முதல்வர் நான் சொல்கிறேன். இதற்கு மேல் யார் வந்து சொல்லவேண்டும்” என புன்முறுவலுடன் கடந்தார்.
குடியரசு தினத்தன்று கொடியேற்றும் அதிர்ஸ்டத்தைப் பெற்ற அவர், முத்தாய்ப்பாக குடியரசு தின கலைநிகழ்ச்சியில் மனைவி சமேதராக மேடையில் அமர்ந்தும் விட்டார்.
ஓ.பி.எஸ்ஓ.பி.எஸ் இப்படி! நடராஜன்..? பல ஆண்டுகளாக பத்துக்கு பத்து அறையில் கூட அதிமுக பற்றியும் அதன் தலைமை பற்றியும் பயந்து பயந்து பேசிக்கொண்டிருந்த நடராஜன் ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்படும் முன்பே, கட்சியை காப்பாற்றுவோம் என்று கண்ணாடியை இறக்கிவிட்டபடி சூளுரைக்கிறார்.
ஜெயலலிதா எழுந்து வந்துவிட மாட்டார் என்ற அவரது மதிநுட்பத்தை பாராட்டித்தான் இருக்க வேண்டும். இத்தனை சம்பவங்களையும் ஒருவேளை ஜெயலலிதா பார்த்திருந்தால் அவர்களின் நிலை குறித்து நினைக்கவே குலை நடுங்குகிறது. ஆனால் அவர் இல்லாததால்தான் இத்தனையும் நடக்கிறது என்பதுதான் இயற்கையின் நாடகம்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் கட்சியை எந்த சிரமுமின்றி கைப்பற்றிக்கொண்டுவிட்டார் சசிகலா. இருக்கும் நாலரை வருடங்களை எளிதில் 'இழக்க'விரும்பாத எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் நிர்வாகிகளால் சாத்தியமான ஒன்று இது.
ஆனால் தொண்டனுக்கு எதுவும் இல்லையென்பதால் இன்னமும் 'புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி' என புலம்பிக்கொண்டிருக்கிறான்.
ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சசிகலா தரப்பு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. கட்சியை கைப்பற்றிக்கொண்டாலும் அரசியலமைப்பு சட்டப்படி அரசு இயந்திரத்தை நிர்வகிப்பதுதானே அந்தஸ்தாக இருக்கும். அதற்கான முயற்சிகள்தான் பல்வேறு வடிவங்களில் எடுத்து வந்தது சசிகலா தரப்பு.
ஆனால் அதற்கு ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து சமிக்ஞை கிடைக்கவில்லையாம். மத்திய அரசிடம் இருந்து தனக்கு கிடைக்கும் ஆதரவு ஓ.பி.எஸ் க்கு இந்த தைரியம் தந்தது என்கிறார்கள்.
தமிழக வரலாற்றில் அரசியல் களத்தையே அதிர்ச்சியும் ஆச்சர்யத்துக்கும் உள்ளாக்கிய மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜனநாயக ரீதியாக போராட்டத்தை அனுமதித்தது ஓ.பி.எஸ் மீது தமிழக மக்களிடையே ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது.
முந்தைய ஆட்சியாக இருந்திருந்தால் இப்படி ஒரு போராட்டத்திற்கு இத்தனை லட்சம் மக்களை ஒருங்கிணைய அனுமதித்திருப்பார்களா என்ற சிந்தனையில்தான் ஓ.பி.எஸ் -ன் அணுகுமுறை புரிந்திருக்கும்.
ஆச்சர்யம் என்னவென்றால் போராட்ட வடிவம் திசைமாற்றப்பட்டு ஒரே நாளில் தமிழகத்தின் பல பகுதிகள் கலவர பூமியாக மாறிய போதும் இன்றுவரை காவல்துறையின் மீதுதான் விமர்சனங்களும் கண்டனங்களும் வைக்கப்படுகின்றன.
எரியும் தீப்பந்தங்களுக்கு மத்தியில் அத்தனை சூட்டிலும் முதல்வர் ஓ.பி.எஸ் எரியாமல் இருப்பது ஆச்சர்யம்தான். ஓ.பி.எஸ் பெரும் அதிர்ஸ்டக்காரர்தான் போல.தங்களால் அடையாளம் காணப்பட்ட ஒருவர் தற்போது தங்களின் முன்னே அதிகாரம் மிக்க பதவியை அலங்கரிப்பது யாருக்கும் எரிச்சல் தரும் விஷயம்.
ஜெயலலிதாவின் சமாதியின் ஈரம் காயும் முன் பங்காளி சண்டை வேண்டாம் என பொறுத்தே இருந்தது சசிகலா தரப்பு. ஆனால் இது தொடர்வதை விரும்பாததால் நேரடியாக அவரை பதவி விலகச் சொல்லி சசி தரப்பு கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
அதற்கான எழுத்துபூர்வமான கடிதத்தையும் கேட்கப்பட்டதாம். ஆனால் “இப்போது வரை உங்களுக்கு கட்டுப்பட்டவனாகத்தான் நான் இருக்கிறேன். நீங்கள் எப்போது தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தாலும் அந்த கணத்தில் வழிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறேன்.
அதற்கு கடிதம் தேவையா” என அதற்கு மறுத்துவிட்டாராம் ஓ.பி.எஸ். ஜல்லிக்கட்டு பிரச்னை புதாகரமாவதற்கு சில தினங்களுக்கு முன் இது நடந்ததாம்.சசிகலாஓ.பி.எஸ்ஸின் இந்த வார்த்தையை நம்பியே தலைமைச் செயலகத்தில் சசிகலா முதல்வராவதற்கான முன்னோட்டங்களாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
முதல்வர் ஓ.பி.எஸ் அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு துறைக்கும், முதல்வர் அலுவலகத்தில் உள்ள தங்கள் துறையின் அனைத்து .பைல்களையும் ஓரிரு தினங்களில் திரும்பப்பெற்றுக்கொள்ளவும் எனவும், கொஞ்சநாட்களுக்கு புதிய ஃபைல்களை முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டாம்” என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம்.
கூடவே ஒவ்வொரு துறைகளிலும் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட இருக்கும் கட்டிடங்கள், வழங்கப்படாமல் உள்ள நலத்திட்டங்கள் இவற்றை திரும்ப துாசி தட்டித் தயாராக வைத்திருக்கும்படியும் எல்லா துறைகளின் செயலாளர்களுக்கும் உத்தரவு போனதாம். தேவைப்பட்டால் அவைகளுக்கு தேதியை ரிசர்வ் செய்யவேண்டியதிருக்கும்.
எதற்கும் தயாராக இருக்கும்படி சொன்னது உத்தரவு.“அவசர காலத்தில் நீங்கள் தற்காலிகமாக இந்த இடத்தில் அமரவைக்கப்பட்டாலும் சும்மா வந்துவிடவில்லை இந்த தகுதி. எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி நீங்கள்.
தகுதியில்லாமலா அம்மா உங்களை இந்த இடத்திற்கு கொண்டுவந்தார்.? அம்மாவிற்குப் பிறகு தமிழக மக்களுக்கு உங்கள் மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கிறது. அப்படியிருக்க இன்னும் நீங்கள் இரண்டாம் இடத்திலிருந்தே செயல்படவேண்டுமா... என இந்த சமயத்தில் நெருக்கமான வட்டாரங்கள் அவருக்கு துாபம் போட்டதாக சொல்லப்படுகிறது.
“மத்திய அரசு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்” என்றதோடு, சசிகலா மீதான வழக்கு இன்னும் உயிருடன் இருப்பதையும் அவர்கள் அப்போது நினைவுபடுத்தி 'கலகம் பிறந்தால் வழி பிறக்கும்' எனச் சொல்லிமுடித்தார்களாம்.ஓ.பி.எஸ்அதிலிருந்துதான் தனி ஆவர்த்தனம் செய்ய முடிவெடுத்தார் ஓ.பி.எஸ் என்கிறார்கள்.
எதிர்பார்த்தபடி ஓ.பி.எஸ்ஸிடமிருந்து சமிக்ஞை கிடைக்காததால், நேரடியாகவே, “எப்போது பதவி விலகப்போகிறீர்கள்” என சசி தரப்பு கேட்டதாகச் சொல்கிறார்கள்.
ஆனால் இந்த முறை ஓ.பி.எஸ் பதில் வேறுமாதிரி இருந்திருக்கிறது. “எல்லாம் நன்றாய்த்தானே போய்க்கொண்டிருக்கிறது. கட்சிக்கு உங்களை எந்த பிரச்னையுமின்றி தேர்ந்தேடுத்து விட்டோம்.
ஆட்சியை நான் பார்த்துக்கொள்கிறேன். இதிலும் உங்கள் குறுக்கீடு இருந்தால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு எழும். அது கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்லதல்ல.
ஏற்கனவே தீபா பிரச்னை. இதில் நாமும் சலசலப்பை எழுப்புவது நல்லதல்ல” என்ற தொனியில் ஓ.பி.எஸ் பேசியதாக கூறப்படுகிறது.சசிகலா தரப்பு கொஞ்சம் இன்னும் அழுத்தம் கொடுத்த போது, ஓ.பி.எஸ் சொன்ன வார்த்தைகள் அதிர்ச்சி தந்ததாம். “எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.
நீங்கள் அழுத்தம் கொடுத்தால் இப்போதே பதவி விலகுகிறேன். ஆனால் அடுத்த நொடியிலிருந்தே உங்களுக்கு பிரச்னைகள் உருவாகும். அதை சமாளிக்க முடியுமா என பார்த்துக்கொள்ளுங்கள்” என்றபோது விக்கித்து போனதாம் சசி தரப்பு. ஓ பி எஸ்அன்று முதல்தான் இரண்டு கடிதங்கள்,
இரண்டு அறிக்கைகள், என ஓ.பி.எஸ்க்கும் சசி தரப்புக்கும் பனிப்போர் துவங்கியது என்கிறார்கள். ஓ.பி.எஸ் ஸை பொறுத்தவரை கட்சியின் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் மத்தியில் அவர் அம்மாவால் வைக்கப்பட்ட கொலு பொம்மை என்ற பிம்பம்தான் இன்றுவரை உள்ளது.
அதனால் ரெமோவிலிருந்து அந்நியனாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் தந்திரங்களை அவர் இப்போது கையாளத்துவங்கிவிட்டார் என்கிறார்கள்.
கட்சியும் ஆட்சியும் சசிகலாவினால் ஒரு பிரச்னையுமின்றி நிர்வகிக்கப்படுகிறது என்ற பிம்பத்தை உடைக்கும் முயற்சியாகத்தான் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி திவாகரனை குறிவைத்ததும் காரசாரமாக அவர் கடந்த மாதத்தில் பேட்டி அளித்ததும் என்கிறார்கள்.
கட்சியில் இன்னொரு தலைமை மேலெழும்பும்போது அதிருப்தியாளர்கள் எளிதாக அதன் கீழ் ஒன்றிணைவார்கள் என்பது ஓ.பி.எஸ் தரப்பின் எண்ணம். ஆனால் அதை திணிப்பதுபோல் அல்லாமல் கலகக்குரல், பரபரப்பு பேட்டிகள், என அடுத்தடுத்து மூவ் மூலம் இயல்பான ஒரு விஷயமாக மாற்றி சாதிக்க நினைக்கிறது என்கிறார்கள்.
அதன் முன்னோட்டம்தான் கே.பி முனுசாமி - திவாகரன் மோதல் விவகாரம். முனுசாமி முந்தைய ஆட்சியில் ஓ.பி.எஸ் உடன் இணைந்த நால்வர் அணியில் ஓ.பி.எஸ்க்கு நெருக்கமானவராக இருந்தவர்.
திவாகரனுடனான மோதலில் அவர் அளித்த பேட்டியில் திவாகரனை வசைபாடிய அவர், கூடவே ஓ.பி.எஸ் நிர்வாகத்திறமையை புகழ்ந்து தள்ளியதையும் கவனித்திருக்கலாம்.
அதைத்தொடர்ந்தே அப்போது ஒரு விழாவில் பேசிய நடராஜன், தமிழகத்தில் உள்ள சிலரின் சதித்திட்டத்திற்கு மோடி பலியாகிவிடக்கூடாது என காட்டமாக தெரிவித்திருந்தார்.
ஓ.பி.எஸ்எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதுபோல், டெல்லி விஜயத்தில் ஓ.பி.எஸ் தனித்தன்மையுடன் நடந்துகொண்டது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக எம்.பிக்களை மோடி தவிர்த்து விட்டு ஓ.பி.எஸ்க்கு மட்டும் அப்பாயிண்மென்ட் வழங்கியது என அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள் எல்லாம் சசி தரப்பை எரிச்சலடையச் செய்திருக்கிறது.
அதனால்தான் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான முடிவுகளை மோடி எடுத்த நிலையிலும், சசியின் குரலாக தம்பிதுரை பாஜக வை கடந்த வாரம் வறுத்தெடுத்தது என்கிறார்கள்.ஜல்லிக்கட்டு விவகாரம் எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக கலவரத்தில் முடிந்தது,
இதில் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் உருவாகியது. இதை வைத்து ஓ.பி.எஸ்-யை ஓரங்கட்டலாம் என்று சிலர் நினைத்தார்கள். ஆனால், அதுவும் இறுதியில் தோல்வியில் முடிந்தது.
முதல்வராக பலம்பொருந்திய பதவியில் ஓ.பி.எஸ்ஸை தொடரச் செய்வது கட்சியில் அவருக்கான ஆதரவு வட்டத்தை பெருக்கி கட்சியில் இன்னுமொரு அதிகாரம் மையம் உருவாகிவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கும் அதேசமயம், ஓ.பி.எஸ்க்கு டெல்லித் தலைமை அளிக்கும் முக்கியத்துவத்தையும் கூர்ந்து கவனிக்கிறது.
இதனால் அச்சத்துக்குள்ளாகியிருக்கும் சசி தரப்பு, ஓ.பி.எஸ் ஸை மென்மையான அணுகும் முடிவுக்கு வந்திருப்பதாக சொல்கிறார்கள். அதனால்தான் இப்போதைக்கு விவகாரத்தை ஆறப்போட முடிவெடுத்திருக்கிறதாம்.
ஓ.பி.எஸ்முதல்வர் பொறுப்பில் இருந்து ஓ.பி.எஸ்ஸை ஓரம்கட்ட சட்டமன்றத்தின் உள்ளேயே எம்.எல்.ஏக்கள் மூலம் சகல வித்தைகளையும் காட்டமுடியும் என்றாலும், அது மக்களிடையே உள்கட்சி விவகாரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டிவிடும் என்பதால் கொஞ்சகாலம் பொறுமை காப்பது நல்லது என முடிவெடுத்திருப்பதோடு, அதை பட்டவர்த்தனமாக கடந்த வாரம் நடராஜன் மூலம் ஒருமேடையில் 'ஓ.பி.எஸ்ஸை இப்போதைக்கு மாற்றும் எண்ணம் இல்லை' என்று கூறி தற்காலிகமான முதல் பாதி ஆட்டத்தை முடித்துக்கொண்டிருக்கிறது சசிகலா தரப்பு என்கிறார்கள்.
- Vikatan

சம்பந்தன் முன்னிலையில் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி! நிறைவேற்றுவாரா?


நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவர இருக்கும் புதிய அரசியலமைப்பு எந்த வகையிலும் இந்த தேசத்தை பிளவுபடுத்த மாட்டாது என தனது கிழக்கு மாகாண விஜயத்தின் போது தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசியலமைப்பினூடாக ஐக்கிய இலங்கைக்குள் இன நெருக்கடிக்கான நிரந்தரமானதும் சகலரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான தீர்வு எட்டப்படுமெனவும் அதற்காக அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
நேற்று முன்தினம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயமொன்றை மேற்கொண்டபோது எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையில் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, தான் ஒரு சமூகத்தின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படவில்லை என அழுத்திக் கூறியதோடு நாட்டின் ஜனாதிபதியாக என்னைத் தெரிவு செய்வதில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமுகங்களுக்கு பெரும் பங்களிப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டு சிறுபான்மைச் சமுகங்களின் எதிர்பார்ப்புகள் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
நல்லாட்சி அரசின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிரணி சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்த ஜனாதிபதி, எதிரணியினரின் ஆட்சிக் கவிழ்ப்புக் கனவு வெறும் கனவாகவே முடிந்துவிடுமெனவும் அது ஒருபோதும் நனவாகப் போவதில்லையெனவும் தெரிவித்ததோடு தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அநீதி இழைக்கப்பட மாட்டாது எனவும், எதிரணியினரின் பொய்ப் பிரசாரங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் தனக்கு ஆதரவளித்த கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அந்த மக்களை நேரில் சந்திக்கவே இந்த விஜயத்தை பயன்படுத்திக் கொண்ட ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுடன் தாம் மேற்கொண்ட பேச்சுக்கள் தொடர்பாகவும் மக்களுக்கு பகிரங்கமாக தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் நல்லதொரு புரிதலுடன் காணப்படுவதாகவும் அவரதும் தமிழ் மக்களதும் எதிர்பார்ப்பும் எமது அரசின் எதிர்பார்ப்பும் ஒன்றாகவே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் ஜனாதிபதி, ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன, மத மக்களும் சமாதான சக வாழ்வுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் இலக்கு என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் மிக முக்கியமாகத் தேவைப்படுவது புரிந்துணர்வை ஏற்படுத்துவதாகும்.புரிதல்களின்றி எதனையும் சாதித்து விட முடியாது.
அந்தப் புரிதல்களுடன் செயற்பட்டால் மட்டுமே மக்களின் மனங்களை வென்றெடுக்க முடியும். மக்களது மனங்கள் வெற்றிகொள்ளப்படாவிட்டால் எத்தகைய திட்டங்களைத் தீட்டினாலும் அவற்றை நடைமுறைச் சாத்தியமாக்க முடியாது.
மனங்கள் வெல்லப்படுவதற்கு நம்பகத்தன்மை மிக முக்கியமானதாகும். அத்தகைய நம்பகத்தன்மையை கட்டியெழுப்புவதற்கே நல்லாட்சி அரசு முன்னுரிமை கொடுத்து வருவதைக் காணமுடிகிறது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியும், ஜனநாயக வழி மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கமும் இணைந்து செயற்படும்போது அதனை குழப்பும் வகையில் எந்தத் தரப்பும் செயற்பட முனையுமானால் அது துரோகச் செயலாகவே அமையமுடியும்.
சிலர் சுய அரசியல் இலக்குகளை அடையும் நோக்கில் பொய்ப்பிரசாரங்களையும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர்.
மக்களால் புறக்கணிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட ஒரு கூட்டம் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக மக்களை தவறாக வழி நடத்த முற்பட்டுள்ளது.
இவர்களின் போலி வேஷங்களை நாட்டு மக்கள் நன்கறிந்து வைத்துள்ளனர். இந்த வேஷங்கள் மிக விரைவில் கலையப்பட்டுவிடும். அதற்கான காலம் அண்மித்துக்கொண்டிருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தை நிராகரிக்க வேண்டுமானால் அடுத்து வரும் தேர்தலில் மக்கள் தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும். மக்களால் தோற்கடிக்கப்ட்ட சக்தியால் அதனைச் செய்ய முடியாது.
அந்த அடிப்படையிலேயே ஜனாதிபதி உறுதியாகக் கூறுகிறார். 2020 ஆம் ஆண்டு வரை இந்த ஆட்சியை எந்தச் சக்தியாலும் வீழ்த்த முடியாது.
நல்லாட்சி அரசு மக்கள் சக்தியைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசாகும். எதிரணியினரின் பசப்பு வார்த்தைகள், ஏமாற்று நடவடிக்கைகள் குறித்து கவனமாக இருக்கவேண்டும்.
மீண்டுமொருதடவை பாதாளத்துக்குள் வீழ்ந்து விடக் கூடாது.ஜனாதிபதி கிழக்கில் தெரிவித்திருக்கும் மற்றுமொரு விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
எதிர்காலத்தில் நாட்டின் நலன் கருதி சில தீர்மானங்களை எடுக்க நிர்ப்பந்திக்கப்படலாம். சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வரவேண்டும்.
இன்றிருக்கும் எமக்குமட்டுமல்ல எமது நாளைய எதிர்கால சந்ததிகளுக்குமானதொரு சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதே எமது இலக்கும், இலட்சியமாகும் என்றவாறு ஜனாதிபதியின் பேச்சு அமைந்துள்ளது.
செழிப்பான நாளைய எதிர்காலத்துக்குரிய அர்ப்பணிப்பைச் செய்வதற்கான கடப்பாட்டை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றோம்.
இதில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என வேறுபட முடியாது.தெற்கு போன்று வடக்கும், கிழக்கும் ஏன் ஒட்டுமொத்த தேசமும் வளமடையவேண்டும்.
இதில் இனம், மதம், மொழி பேதம் இருக்க முடியாது. பிரதேசவாதம் இருக்க முடியாது.
ஒரே நாடு, ஒரே இனம் (One Nation, One Country) என்ற கோட்பாட்டில் நாம் இலங்கையர் என்ற நிலையில் ஒன்றுபடுவதன் மூலம் அனைத்துச் சவால்களையும் வெல்ல முடியும் என்ற உறுதிப்பாட்டில் இணைந்து பயணிப்போம்.
Tzmilwin

அவுஸ்திரேலியாவில் தேசிய மொழியாக தமிழ் மொழிக்கு அங்கீகாரம்..!


அவுஸ்திரேலிய நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்மைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும், செல்வம் அடைக்கலநாதன் அந்நாட்டு பிரதமருக்கும், அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புலம்பெயர் தமிழ் மக்களின் பாரம்பரியத்தை அங்கீகரித்து அவுஸ்திரேலிய நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை மற்றும் உலகம் பூராவும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன், அமைச்சரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களது இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், நன்றிகளையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துகொள்கின்றேன் என அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 2 பிப்ரவரி, 2017

மூடிமறைக்கப்பட்ட தமிழனின் அடையாளம் - இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கல்வெட்டு

200 முதல் 300 ஓவியங்கள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கற்பாறை 75 மீற்றர் நீளமும் 20 மீற்றர் உயரமும் கொண்டது.
கற்பாறைக்கு கீழே கிறிஸ்துவுக்கு முன் 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டுக்குரிய பண்டைய சிங்கள மொழியிலான பிரம்மி எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டும் கிடைத்துள்ளது.
சூமன கற்பாறை என்று அழைக்கப்படும் இது தேவநம்பிய தீசன் அரசாண்ட காலத்தில் உருகுணைக்கு தப்பிச் சென்ற மகாநாகன் என்ற அரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என இரண்டு கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.
இந்த பகுதி அந்த காலத்தில் பௌத்த பிக்குகளுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கல் ஓவியங்களில் மனித உருவம், விலங்குகளின் உருவம் உள்ளிட்டவை காணப்படுகின்றன.
இதற்கு முன்னர் ஆரம்ப காலத்திற்குரிய குகை ஓவியங்கள் தந்திரிமலை, பில்லேவ, ரஜகல, கோனாகொல்ல ஆகிய பிரதேசங்களில் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் பண்டைய காலத்தில் எழுதப்பட்ட இந்த பிராமி எழுத்துக்கள் வாசிக்கப்பட்டால் அது கட்டாயம் தமிழாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மூத்தசிவன், தேவநம்பிய தீசன், மகாநாகன் ஆகியோர் தமிழ் மன்னர்களே. பின்னாளில் தேவநம்பிய தீசன் பௌத்தனாக மதம் மாறியதால்,சிங்கள வரலாற்று ஏடுகளும் இந்த மன்னர்களை சிங்களவர்களாக சித்தரித்து வரலாற்றை தலைகீழாக மாற்றி விட்டன.
இவ்வாறான நிலையில், தமிழர்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்படுவதால், தமிழர்களுக்குரிய வரலாற்று சான்றுகள் தமிழர் அல்லாதவர்களிடம் சிக்கி மறைக்கப்படுகின்றன.
இலங்கை மாத்திரம் இது விதிவிலக்கல்ல, தமிழகம் உட்பட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் 90 வீதமானவை தமிழ் கல்வெட்டுகள் எனக் கூறப்படுகிறது.
அவற்றில் 60 வீதமானவை இன்னும் வாசிக்கப்படாமல் இருப்பது தமிழர்களின் வரலாற்று சோகம்.
தமிழகத்தில் மதுரைக்கு அருகில் கீழடி என்ற இடத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய தமிழரின் வரலாற்று பொக்கிஷமான பெரும் நகரம் ஆராய்ச்சியின் இடைநடுவே கைவிடப்பட்டு மூடப்பட்டு விட்டது.
இதுவும் பழந்தமிழர்களின் இவ்வாறான அடையாளங்கள் தொடர்ந்தும் சிதைக்கப்பட்டு கொண்டிருப்பது ஒரு இனத்தின் சாபம் என்பதை தவிர வேறில்லை.


இலங்கை அரசியலில் மற்றுமொரு இடதுசாரி சக்தி உருவாகும் - திடுக்கிடும் அரசியல் பின்னணி


ஜே.வி.பி என்று சுருக்கமான அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணிக்கு மறைவாக இருந்து உயிரூட்டிய அதன் இரகசியமான தலைவராக இயங்கிய பிரேமகுமார் குணரட்னத்திற்கு இலங்கையின் குடியுரிமை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இடதுசாரி அரசியல் களத்தில் குமார் குணரட்னம் அண்மை காலத்தில் பரவலாக பேசப்பட்ட தலைவர்.குமார் குணரட்னம் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் அவருக்கு குடியுரிமை வழங்குவது குறித்து ஆராயப்படும் என அமைச்சர் எஸ்.பி. நாவின்ன இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அவரை மீண்டும் நாடு கடத்தப் போவதில்லை எனவும் கூயிருந்தார். இதனடிப்படையில் குமார் குணரட்னத்திற்கு தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
நேயேல் முதலிகே என்ற பெயரில் அறியப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் திரைக்கு பின்னால் இருந்து செயற்பட்டவர் என்ற வகையில் குமார் ஒரு காலத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தார்.
அரசியல் சூழ்நிலைகள் காரணமாக 2006 ஆம் ஆண்டு நேயேல் முதலிகே என்ற பெயரில் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற அவர் 2011ம் ஆண்டு இலங்கை திரும்பிய பின்னர் செய்திகளை உருவாக்கும் நபராக மாறினார்.
குமார் குணரட்னம் வேறு யாருமல்ல 1988ம் 89ம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது சமவுடமைவாத கிளர்ச்சியில் முக்கிய செயற்பட்டாளராக இருந்தவர் என்பது நாட்டில் பலருக்கு தெரியாத உண்மை.
2011ம் ஆண்டு மீண்டும் இலங்கை திரும்பிய குணரட்னம் அன்றைய அரசாங்கத்தினால் கடத்திச் செல்லப்பட்ட அவுஸ்திரேலியாவின் கடும் அழுத்தங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
இதனையடுத்து 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் நாடு திரும்பிய குமார் குணரட்னம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டில் அவர் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டு, அண்மையில் விடுதலையானார்.
வடக்கை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெற்றோருக்கு பிரேமகுமார் குணரட்னம் கேகாலையில் 1965ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி பிறந்தார்.
இவரது தாய் ஒரு ஆசிரியர்.1971ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி முதல் 1980 ஆண்டு வரை டிசம்பர் வரை கேகாலை புனித மேரி கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்றார்.
இதனையடுத்து 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1985ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பின்னவல மகாவித்தியாலயத்தில் கணிதப் பிரிவில் உயர் தரம் பயின்றார்.
இதனையடுத்து 1985ம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் நுழைந்தார்.
குமார் குணரட்னம் பேராதனை பல்கலைக்கழத்தின் பொறியியல் பீடத்திற்கு செல்லும் போது அவரது மூத்த சகோதரர் ரஞ்சிதம் குணரட்னம் பீடத்தில் சிரேஷ்ட மாணவராக இருந்தார்.
ரஞ்சிதம் குணரட்னம் பின்னவல மகாவித்தியாலத்தில் உயர்தர வகுப்பு மாணவராக இருந்த போது அதாவது 1981ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியுடன் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.
ரஞ்சிதம் குணரட்னம் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய அரசியல் செயற்பாட்டாளராக இருந்த போதிலும் அவரது சகோதரர் குமார் குணரட்னம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அவர் விரும்பவில்லை.
தனது சகோதரர் நன்றாக கல்வி கற்று ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என ரஞ்சிதம் குணரட்னம் எதிர்பார்த்தார்.
1988-89ம் கிளர்ச்சியின் போது அரச படையினரால் ரஞ்சிதம் குணரட்னம் படுகொலை செய்யப்பட்டா்.
இந்த நிலையில், பிரேம குமார் குணரட்னம், சிசிர குமார தேவப்பிரிய என்ற அன்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரபல மாணவ செயற்பாட்டாளர் ஊடாக நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ஆரம்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் சங்கங்களில் இணைந்து செயற்பட்ட குமார் குணரட்னம் மாணவர்கள் மத்தியில் பிரலமிக்க பாத்திரமாக மாறினார்.
மாணவ சங்க அரசியலில் ஈடுபட்டிருந்த போதே குமார் குணரட்னத்தின் மனைவியான அன்று பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட மாணவியாக இருந்த சம்பா சோமரத்னவுடன் தொடர்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், 1987ம் ஆண்டு ஏப்ரல் 14ம் திகதி தமிழ், சிங்கள புது வருட நாளின் நடு இரவில் கண்டி பல்லேகலையில் உள்ள இராணுவ முகாம் மீதான தாக்குதல் காரணமாக குமார் குணரட்னத்தின் பெயர் களத்திற்கு வந்தது.
1987ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கலகெதர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அவர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
1988ம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைகளில் பல்லேகலை இராணுவ முகாமில் ஆயுதங்களை கொள்ளையிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறான பின்னணியில் குமார் குணரட்னம் சிறையில் இருந்து தப்பிச் சென்றார்.1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருகோணமலை மங்கி பிரிஜ் இராணுவ முகாமில் இருந்த இராணுவ வீரரிடம் இருந்து செய்தி ஒன்று கிடைத்தது.
குமார் குணரட்னத்திற்கு சில ஆயுதங்களை வழங்குவதாக அந்த இராணுவ வீரர் உறுதியளித்திருந்தார். ஆயுதங்களை பெற இராணுவ முகாமுக்கு சென்ற அவரை படையினர் கைது செய்தனர்.
அப்போது அங்கு ஒரு முக்கிய நபரை அவர் சந்தித்தார். அவர் வேறு யாருமல்ல முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா.
இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் குமார் குணரட்னத்திற்கு எந்த தொந்தரவும் கொடுக்கப்படவில்லை. இராணுவத்தினர் அவரை நன்றாக கவனித்துக் கொண்டனர். இதற்கு வேறு அரசியல் பின்னணிகள் காரணமாக இருந்திருக்கலாம்.
இலங்கையில் இருந்த இந்திய அமைதி காக்கும் படையினர் 1990ம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் குமார் குணரட்னம் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டார்.
சில காலம் தடுப்பில் இருந்த பின்னர் குமார் குணரட்னம் உட்பட புனர்வாழ்வு பயிற்சி பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 15 உறுப்பினர்களுக்கு அரசாங்கம் ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது.
ஜப்பான் செல்லாத குமார் குணரட்னம் மீண்டும் தலைமறைவாகி அரசியலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1990ம் ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் மீள் ஒருங்கமைப்பு பணிகளில் குமார் குணரட்னம் முக்கிய பங்காற்றினார்.
அங்காங்கே சிதறி கிடந்த முன்னணியின் உறுப்பினர்களை ஒன்றிணைத்து மக்கள் விடுதலை முன்னணி மீள் உருவாக காரணமாக அமைந்தார்.
மக்கள் விடுதலை முன்னணியுடன் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகள் காரணமாக அதில் இருந்து வெளியேறி முன்னிலை சோசலிசக் கட்சி உருவாகவும் அவர் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil win

நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..!- (பாகம் -1)

நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..!- (பாகம் -1)
January 27
15:402017
சுமார் அரைநூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் சினிமா, அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை, ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும் அவர்களது இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
MGR_Cover_16111  நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..!- (பாகம் -1) MGR Cover 16111
எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையினால் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பல சோதனைகளுக்கு ஆளாகி, தன் மனிதநேயத்தால் மக்களின் இதயங்களைத் திருடி, பின்னாளில் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஆவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகள் என்ன…
இந்த வெற்றிக்கு அடைந்த செய்த தியாகங்கள், அடைந்த துயரங்கள் என அவர் வாழ்வின் இன்னும் பல சுவாரஸ்ய பக்கங்களை சொல்கிறது இந்தத் தொடர்.
“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்… ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்“ - முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் இளைஞர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த தான் ஏறிய மேடைகளில் தவறாமல் உதிர்த்த வார்த்தைகள் இவை.
பல நூறு மேடைகளில் இதை அவர் தெரிவித்திருந்தாலும்… 2012-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி அவர் இந்த வார்த்தைகளை உச்சரித்த மேடை, மிகப் பொருத்தமானது.
ஆம் அவர் அப்படிப் பேசியது தனது பிறப்பை சம்பவமாகவும் இறப்பை வரலாறாகவும் மாற்றிக்கொண்ட ஒரு மனிதர் வாழ்ந்து மறைந்த இடத்தில் நின்றுதான்!
அது, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளி! அந்த மாமனிதர் மருதுார் கோபாலமேனன் ராமச்சந்திரன்.
ரத்தின சுருக்கமாக எம்.ஜி ஆர் என்றால் இந்தத் தலைமுறையின் எந்தக் குழந்தைக்கும் புரியும்.
mgr_solo_3_13375  நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..!- (பாகம் -1) mgr solo 3 13375
இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தாலும் எம்.ஜி.ஆர், இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல; அவரது தந்தை கோபாலமேனனின் (மேனன் அல்ல; மேன்மைக்குரியவர் என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.)
பூர்வீகம் கோவை அடுத்த காங்கேயம் எனச் சொல்லப்படுகிறது. அங்கு மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் என பின்னாளில் எம்.ஜி.ஆர் பிறப்பு குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட ’செந்தமிழ்வேளிர் எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கோபாலன் கேரளாவைச் சேர்ந்த வடவனுரில் பணிநிமித்தமாக நீண்ட காலம் வசித்தார்.
அப்போதுதான் மருதூரைச் சேர்ந்த சத்யபாமாவைச் சந்தித்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது.
அந்தத் திருமணத்தில் சத்யபாமா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாதநிலையில், தனியே வசித்தார்கள் தம்பதியினர்.
தொடர்ந்து பணி நிமித்தமாக சத்யபாமா குடும்பம் அரூர் கரூர், திருச்சூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் வசித்திருக்கிறது.
எம்.ஜி.ஆர்கோபாலன் நேர்மையான மனிதர். மனிதநேயம் கொண்டவர். எதற்காகவும் தன் பணியில் சமரசம் செய்துகொள்ளாதவர் என பெயரெடுத்தவர்.
இறைநம்பிக்கையில் அதீத பற்றுக் கொண்ட அவர், தீவிர விஷ்ணு பக்தர். பக்தர் என்றால் சாதாரண பக்தர் அல்ல.
புராண காலத்தைப்போன்று இறைவன் மேல் தீராத காதல்கொண்டவர். வைணவத்தின் மீது வெறித்தனமாக பக்தி கொண்டிருந்தவர்.
தன் பிள்ளைகளில் ஒருவர் சக்கரபாணி பிறந்தபோது அவர் கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தார்.
அவர் வசித்த இடத்தின் அருகே சிவன் கோயில்தான் புகழ்பெற்றிருந்தது. அதனால் சத்யபாமா, குழந்தைக்கு அந்தக் கோயிலில் முறையான வழிபாடு நடத்தி, நீலகண்டன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
கொதித்துப்போனார் கோபால மேனன். சில மாதங்கள்வரை மனைவி பிள்ளைகளுடன் அவர் பேசவில்லை.
அடுத்த சில மாதங்களில் மற்றோர் இடத்துக்கு மாற்றலாகியபோது முதல்வேலையாக அங்குள்ள விஷ்ணு கோயில் ஒன்றுக்கு பிள்ளையை அழைத்துச்சென்று நீலகண்டன் என்ற பெயரை சக்கரபாணி என மாற்றினாராம்.
கூடவே,’’ இனி அந்தப் பெயரில்தான் யாரும் அழைக்கவேண்டும்’’ என கறார் உத்தரவும் போட்டாராம்.
அப்படி ஒரு விந்தை மனிதர் அவர். 1914-ல், தான் தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கில்… அவரது தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு சம்பவம் நடந்தது.
தன்னை விட்டுக்கொடுக்க விரும்பாத கோபால மேனன், தன் பணியை விட்டுக்கொடுத்தார்.
பணியை ராஜினாமா செய்தார். மாத வருவாயில் இருந்தவரை குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது.
இப்போது வறுமை, குடும்பத்தைச் சூழ்ந்துகொண்டது. கோபால மேனனுக்கு அப்போது 4 பிள்ளைகள்.
இவர்களில் கோபாலனின் முதல் தாரத்து பிள்ளைகளும் அடக்கம். குடும்ப வறுமையைப் போக்க வேலை தேடி இலங்கை அடுத்த கண்டிக்கு இடம்பெயர்ந்தது கோபால மேனன் குடும்பம்.
அங்கு கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்படி கண்டியில் வசித்தபோது 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வானத்தை எந்தக் கருமேகங்களும் சூழவில்லை;
தேவதூதன் பிறக்கப்போவதாக எந்த அசரீரி குரலும் மக்களுக்குக் கேட்கவில்லை; அசாதாரண சூழல் அங்கு எங்கும் தென்படவில்லை.
ஆனால் அப்துல்கலாம் குறிப்பிட்ட அந்தச் ‘சம்பவம்’ நிகழ்ந்தது. ஆம்…அன்றிரவு அந்தக் குடும்பத்தின்
5-வது குழந்தையை சத்யபாமா பெற்றெடுத்தார். குழந்தைக்கு ராம்சந்தர் என பெயர் சூட்டப்பட்டது.
ராம்சந்தர் பிறந்தநேரம் குடும்பம் மோசமான வறுமையில் சிக்கிக்கொண்டிருந்தது. ஆசிரியர் வருமானத்தில், குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் திணறினார் கோபால மேனன்.
இந்தச் சமயத்தில் குழந்தைகளில் இருவர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் பாலக்காட்டுக்குத் திரும்பியது குடும்பம்.
குடும்பத்தின் சூழல் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போனது.
பணி முடிந்து எத்தனை மணிக்குத் திரும்பினாலும் கோபால மேனன் குழந்தைகளுக்குப் பிடித்தமானதை வாங்கிவந்து அவர்களின் படுக்கைத் தலையணைக்குக் கீழே வைத்துவிடுவார்.
காலையில் குழந்தைகள் எழுந்தவுடன் அதைப் பார்த்து மகிழ்வதைக் கண்டு ரசிப்பது அவர் வழக்கம்.
ராம்சந்தர் கைக்குழந்தையாக இருந்த சமயம் ஒருநாள் அப்படிக் குழந்தைகள் தங்கள் படுக்கையைத் தடவிப்பார்த்தபோது அங்கு எதுவும் வைக்கப்பட்டிருக்கவில்லை.
மூத்த பிள்ளை சக்கரபாணி வழக்கமாக தனக்குப்பிடித்த வாழைப்பழத்தைத் தேடுவார். அன்று கிடைக்காத ஏமாற்றத்துடன் தாயை பார்த்தார் அவர்.
“பசங்களா இனி தலையணையில் எதுவும் தேடாதீங்க…அப்பா உடம்பு சுகமில்லை. இனி அவர் வேலைக்குச் செல்லமாட்டார்’’ என சேலைத்தலைப்பை வாயில் பொத்தியபடி கூறிவிட்டுச் சமையற்கட்டுக்கு ஓடிச் சென்றார் சத்யபாமா.
குழந்தைகளுக்குப் பெரும் ஏமாற்றம். கொஞ்சநாளில் கோபால மேனனுக்கு உடல்நிலை ரொம்ப மோசமானது.
ஒருநாளில் தன் பிள்ளைகளில் மூத்தவரான தங்கத்தை அழைத்த கோபால மேனன், “தங்கம்… அப்பா இனி பிழைக்கவழியில்லை.
நீதான் இனி விபரம் தெரியாத அம்மா மற்றும் உன் சகோதரர்களைப் பொறுப்போடு பார்த்துக்கொள்ளவேண்டும். செய்வாயா” என மகளின் கையைப் பிடித்தபடி ‘நாராயணா, நாராயணா’ என மூன்று முறை சொன்னார். அவர் கை தளர்ந்து விழுந்தது. அந்த வீட்டில் பெருங்குரலெடுத்த ஓர் அழுகை புறப்பட்டது. அது சத்யபாமாவுடையது.
mgr_parent_13508  நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..!- (பாகம் -1) mgr parent 13508
வீட்டின் ஒரே வருவாய் ஆதாரம் மறைந்துவிட்டது. வறுமை வாணலியில், வறுபட ஆரம்பித்தது சத்யபாமா குடும்பம்.
உறவினர்களிட மிருந்து எந்த ஆதரவுமில்லை. அரிதாகச் சிலர் உதவினார்கள். ஆனால், உண்பதற்கு மீன் தருவதைவிட மீன் பிடிக்க கற்றுத்தருவதுதானே நிரந்தர உதவி.
அப்படி நிரந்தரமாக அந்தக் குடும்பத்துக்கு வருவாய் ஏற்படுத்தித் தர உறவினர்கள் யாரும் உதவிட முன்வரவில்லை.
குழந்தைகளின் எதிர்காலம் கருதி தானே வேலைக்குச் செல்வதென முடிவெடுத்தார் சத்யபாமா.
பாலக்காட்டில் ஒரு வசதியானவர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றார் அவர். ஆனால் கெளரவமாக இதுநாள் வரை குடும்பம் நடத்திவந்த அவருக்கு அங்குதான் சோதனைகள் உருவாகின.
வேலைக்குச் செல்கிறபோது தன் கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் பொருட்டு ராம்சந்தரை மட்டும் சத்யபாமா, வேலை செய்யும் வீட்டுக்குத் தூக்கிச் செல்வார்.
அதற்கு வீட்டுக்காரப் பெண்மணியிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. கொஞ்சநாட்களில் சத்யபாமாவை, ’’வாடி போடி’’ என்ற தொனியில அந்த வீட்டுப்பெண்மணி கீழ்த்தரமாக அழைக்க ஆரம்பித்தார்.
பொறுத்துப்பார்த்து பொங்கித்தீர்த்துவிட்டார் சத்யபாமா. “இத பாரும்மா… நானும் உன்னைப்போல ஒருகாலத்துல வசதியாக மாட மாளிகையில வசித்தவதான்.
என் விதி என்னை இப்டி வீட்டு வேலை செய்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. ஆனா, நீ மனிதப்பிறவி போல என்னை நடத்தலை.
எனக்கு சத்யபாமா, கண்ணச்சியம்மா, சின்னம்மா என ஒண்ணுக்கு மூணு பேர் இருக்கு. அதுல ஏதாவது ஒண்ணைவைத்துக் கூப்பிடு. இல்லைனா, இனி ஒரு நிமிஷம்கூட உங்கிட்ட வேலை பார்க்க முடியாது” என பொரிந்துதள்ளிவிட்டு குழந்தை ராம்சந்தரைத் துாக்கி இடுப்பில் துாக்கிவைத்தபடி வீட்டை நோக்கி நடந்தார் சத்யபாமா.
உண்மையில் வீட்டுக்காரப் பெண்மணி சத்யபாமாவைக் கொடுமைப்படுத்தியதில் பின்னணியில் இன்னொரு காரணமும் உண்டு.
குழந்தையில்லாத அவரது உறவினர் ஒருவர், சத்யபாமாவின் வறுமையைச் சுட்டிக்காட்டி குழந்தை ராம்சந்தரை தனக்கு தத்து கொடுத்துவிடும்படி முன்பு ஒருமுறை கேட்டிருந்தார்.
கோபமடைந்த சத்யபாமா, “எத்தனை கஷ்டம் வந்தாலும் குழந்தையை தத்து தர மாட்டேன்” என மறுத்துவிட்டார். இதுதான் வீட்டுக்கார அம்மாவின் கோபத்துக்குக் காரணம்.
அன்றிரவு குழந்தைகளைக் கட்டியணைத்தபடி பலப்பல சிந்தனைகள் தோன்றி மறைந்தன அவருக்குள்.
குழந்தைகளைக் காக்க தாமதிக்காமல் தமிழகத்துக்குச் செல்வது ஒன்றுதான் தனக்கு ஒரே தீர்வு என முடிவெடுத்தார்.
கடவுளை வேண்டியபடி பின்னிரவுக்குப்பிறகே உறங்கப்போனார். மறுநாள், அவரைத்தேடி வந்தார் வேலுநாயர். இவர் ஓய்வுபெற்ற போலீஸ்காரர்.
கோபாலனுடன் பணியாற்றியவர் என்பதோடு… அவருக்கு நெருங்கிய நண்பர். கோபாலன் இறந்த தகவல் கேட்டு விசாரிக்க வந்திருக்கிறார்.
குடும்பத்தின் நிலையை நேரில் பார்த்த அவர், கும்பகோணத்துக்கு தான் செல்லவிருப்பதாகவும்… அங்கு வந்தால், ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாமே என ஆறுதல் சொன்னதோடு… தன்னோடு வந்தால் தானே அதற்கு வழி செய்வதாகக் கூற, சில தினங்களில் மாட்டுவண்டியை ஏற்பாடு செய்துகொண்டு குழந்தைகளுடனும் கணவரின் புகைப்படங்களோடு அவரது நினைவுகளையும் சுமந்தபடி கும்பகோணத்துக்குப் பயணமானார் சத்யபாமா.
மாட்டுவண்டி கும்பகோணத்தை அடைந்தநேரம் விடிந்தும் விடியாத ஒரு விடியற்காலைப்பொழுது.
அந்த நேரம், தம் நடிப்பாலும் மனிதநேயப் பண்பாலும் ஓர் அரைநுாற்றாண்டு காலம் தமிழர்களின் உறக்கத்தைக் கலைக்கப்போகிற குழந்தை ராம்சந்தர் தாயின் மடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான். ராம்சந்தருக்கு அப்போது இரண்டேகால் வயது.

http://ilakkiyainfo.com/
(தொடரும்)

 கிழக்கு முதலமைச்சரின் பதில் இல்லை

கிழக்கு முதலமைச்சரின் பதில் இல்லை


வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியபோதிலும் அவரிடமிருந்து இன்னமும் பதில் கிடைக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபை அமர்வில் நேற்குக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில்,
'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது தொடர்பில் இரு மாகாணசபையும் இணக்கம் தெரிவித்தால் பரிசீலிக்கலாம் என்று கூறப்பட்டது. அதற்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். எனினும் கிழக்கு மாகாண முதலமைச்சரிடமிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை' என்றார்.


இலங்கையின் 70 வருட பிரச்சினையை தீர்க்க மஹிந்த உதவ வேண்டும் : மஹிந்தவுக்கு சம்பந்தன் பகிரங்க அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்பாமல், தீர்வுத்திட்ட நடவடிக்கைகளுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அபிவிருத்தி என்பது தக்கவைத்துக்கொள்ளும் அபிவிருத்தியாக இருக்கவேண்டும், இந்த நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், வறுமை ஒழிக்கப்பட வேண்டும், அரசாங்கம் இதில் வெற்றிபெறவேண்டும். இதற்காக தனது ஆட்சிக்காலத்தில் சில விடயங்களை செய்யவேண்டும் என ஜனாதிபதி செயற்பட்டுவருகின்றார்.
பட்டிருப்பு தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்திய எஸ்.எம்.இராசமாணிக்கம் ஒரு பெரும் தலைவர். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக திகழ்ந்தார், கடமை புரிந்தார். எல்லோரது மதிப்பினையும் பெற்ற ஒரு தலைவர்.
1961ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு நாங்கள் போராட்டம் நடாத்தியபோது எங்களை கைது செய்து பனாகொடை இராணுவமுகாமில் அடைத்தார்கள். அன்று எனக்கு வயது 28. இளம் சட்டத்தரணியாக கடமையாற்றி வந்தேன்.
நாங்கள் உரிமைக்காக தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்தி வருகின்றோம். இன்று பேச்சுவார்த்தை மூலம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி அந்த அரசியல் சாசனம் ஊடாக நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான நியாயமான தீர்வினைக்கண்டு இந்த நாட்டில் வாழும் மக்கள் மத்தியில் சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு சமாதானத்தை ஏற்படுத்த விரும்புகின்றோம்.
புதிய அரசியலமைப்பு ஊடாக நாங்கள் பிரிவினையை ஏற்படுத்த முனைகின்றோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இது தவறான கருத்தாகும். உண்மையற்ற கருத்து.
பிரிக்கப்படாத ஒருமித்த நாட்டுக்குள் ஒரு அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு வழங்கப்பட வேண்டும். பெரும்பான்மை சிங்கள மக்கள், தமிழ் மக்கள், இஸ்லாமிய மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
அது பிரிக்கப்படாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இந்த பணியில் மஹிந்த ராஜபக்ஸவும் இணைந்துகொள்ளவேண்டும் என இங்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். உங்கள் ஒத்துழைப்பினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
மக்கள் மத்தியில் தவறான கருத்துகளை பரப்பாமல் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தாமல் மக்களை ஒற்றுமைப்படுத்தி 70 வருடமாக இந்த நாட்டில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை காண்பதற்கு உதவ வேண்டும். அது அவரின் புனிதமான கடமை. அந்த கடமையினை தவறக்கூடாது என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.