வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

சரி சரி அவரே இருக்கட்டும்! ஓ.பி.எஸ் க்கு ‘விட்டுக்கொடுத்த’ சசிகலா!

சரி சரி அவரே இருக்கட்டும்! ஓ.பி.எஸ் க்கு ‘விட்டுக்கொடுத்த’ சசிகலா!


2017ம் ஆண்டு இப்படி தொடங்கும் என மொத்த தமிழகமும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஜெயலலிதா இல்லாமல் ஒரு புத்தாண்டு பிறந்திருக்கிறது. ஜெயலலிதா இல்லாமல் மாணவர்கள் நடத்திய எழுச்சிப் போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது.
கட்சியின் செயற்குழுவில் மட்டுமே ஜெயலலிதாவால் அனுமதிக்கப்பட்ட சசிகலா, அந்த கட்சிக்கே பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு முன் 2 சந்தர்ப்பங்களில் முதல்வர் பொறுப்பேற்ற ஓ.பி.எஸ் எப்போதும் இல்லாமல் நெஞ்சு நிமிர்த்தியபடி சட்டமன்றத்தில் அம்மாவின் இருக்கையை அலங்கரிக்கிறார்.
முதல்வராக இருந்த முந்தைய காலங்களில் கள்ள மௌனத்துடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்க்கும் அவர், அப்படியே சந்திக்கும் அவசியம் எழுந்தாலும் எல்லை மீறிவிடாமல் பேசி வந்தவர், இன்று பேட்டிகளின்போது சிநேகமாய் சிரிக்கிறார்; சீண்டும் கேள்விகளுக்கும் சீற்றமின்றி பதில் தருகிறார்.
நழுவி ஓடும் மீனாக இருந்தவர் நின்று அடுத்து வரும் கேள்விகளை எதிர்நோக்குகிறார். கையை பின்னுக்கு கட்டிக்கொண்டு கம்பீரமாக பேசுகிறார். ஜல்லிக்கட்டு நடக்குமா... என புதுடெல்லி விமானநிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “முதல்வர் நான் சொல்கிறேன். இதற்கு மேல் யார் வந்து சொல்லவேண்டும்” என புன்முறுவலுடன் கடந்தார்.
குடியரசு தினத்தன்று கொடியேற்றும் அதிர்ஸ்டத்தைப் பெற்ற அவர், முத்தாய்ப்பாக குடியரசு தின கலைநிகழ்ச்சியில் மனைவி சமேதராக மேடையில் அமர்ந்தும் விட்டார்.
ஓ.பி.எஸ்ஓ.பி.எஸ் இப்படி! நடராஜன்..? பல ஆண்டுகளாக பத்துக்கு பத்து அறையில் கூட அதிமுக பற்றியும் அதன் தலைமை பற்றியும் பயந்து பயந்து பேசிக்கொண்டிருந்த நடராஜன் ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்படும் முன்பே, கட்சியை காப்பாற்றுவோம் என்று கண்ணாடியை இறக்கிவிட்டபடி சூளுரைக்கிறார்.
ஜெயலலிதா எழுந்து வந்துவிட மாட்டார் என்ற அவரது மதிநுட்பத்தை பாராட்டித்தான் இருக்க வேண்டும். இத்தனை சம்பவங்களையும் ஒருவேளை ஜெயலலிதா பார்த்திருந்தால் அவர்களின் நிலை குறித்து நினைக்கவே குலை நடுங்குகிறது. ஆனால் அவர் இல்லாததால்தான் இத்தனையும் நடக்கிறது என்பதுதான் இயற்கையின் நாடகம்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் கட்சியை எந்த சிரமுமின்றி கைப்பற்றிக்கொண்டுவிட்டார் சசிகலா. இருக்கும் நாலரை வருடங்களை எளிதில் 'இழக்க'விரும்பாத எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் நிர்வாகிகளால் சாத்தியமான ஒன்று இது.
ஆனால் தொண்டனுக்கு எதுவும் இல்லையென்பதால் இன்னமும் 'புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி' என புலம்பிக்கொண்டிருக்கிறான்.
ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சசிகலா தரப்பு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. கட்சியை கைப்பற்றிக்கொண்டாலும் அரசியலமைப்பு சட்டப்படி அரசு இயந்திரத்தை நிர்வகிப்பதுதானே அந்தஸ்தாக இருக்கும். அதற்கான முயற்சிகள்தான் பல்வேறு வடிவங்களில் எடுத்து வந்தது சசிகலா தரப்பு.
ஆனால் அதற்கு ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து சமிக்ஞை கிடைக்கவில்லையாம். மத்திய அரசிடம் இருந்து தனக்கு கிடைக்கும் ஆதரவு ஓ.பி.எஸ் க்கு இந்த தைரியம் தந்தது என்கிறார்கள்.
தமிழக வரலாற்றில் அரசியல் களத்தையே அதிர்ச்சியும் ஆச்சர்யத்துக்கும் உள்ளாக்கிய மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜனநாயக ரீதியாக போராட்டத்தை அனுமதித்தது ஓ.பி.எஸ் மீது தமிழக மக்களிடையே ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது.
முந்தைய ஆட்சியாக இருந்திருந்தால் இப்படி ஒரு போராட்டத்திற்கு இத்தனை லட்சம் மக்களை ஒருங்கிணைய அனுமதித்திருப்பார்களா என்ற சிந்தனையில்தான் ஓ.பி.எஸ் -ன் அணுகுமுறை புரிந்திருக்கும்.
ஆச்சர்யம் என்னவென்றால் போராட்ட வடிவம் திசைமாற்றப்பட்டு ஒரே நாளில் தமிழகத்தின் பல பகுதிகள் கலவர பூமியாக மாறிய போதும் இன்றுவரை காவல்துறையின் மீதுதான் விமர்சனங்களும் கண்டனங்களும் வைக்கப்படுகின்றன.
எரியும் தீப்பந்தங்களுக்கு மத்தியில் அத்தனை சூட்டிலும் முதல்வர் ஓ.பி.எஸ் எரியாமல் இருப்பது ஆச்சர்யம்தான். ஓ.பி.எஸ் பெரும் அதிர்ஸ்டக்காரர்தான் போல.தங்களால் அடையாளம் காணப்பட்ட ஒருவர் தற்போது தங்களின் முன்னே அதிகாரம் மிக்க பதவியை அலங்கரிப்பது யாருக்கும் எரிச்சல் தரும் விஷயம்.
ஜெயலலிதாவின் சமாதியின் ஈரம் காயும் முன் பங்காளி சண்டை வேண்டாம் என பொறுத்தே இருந்தது சசிகலா தரப்பு. ஆனால் இது தொடர்வதை விரும்பாததால் நேரடியாக அவரை பதவி விலகச் சொல்லி சசி தரப்பு கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
அதற்கான எழுத்துபூர்வமான கடிதத்தையும் கேட்கப்பட்டதாம். ஆனால் “இப்போது வரை உங்களுக்கு கட்டுப்பட்டவனாகத்தான் நான் இருக்கிறேன். நீங்கள் எப்போது தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தாலும் அந்த கணத்தில் வழிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறேன்.
அதற்கு கடிதம் தேவையா” என அதற்கு மறுத்துவிட்டாராம் ஓ.பி.எஸ். ஜல்லிக்கட்டு பிரச்னை புதாகரமாவதற்கு சில தினங்களுக்கு முன் இது நடந்ததாம்.சசிகலாஓ.பி.எஸ்ஸின் இந்த வார்த்தையை நம்பியே தலைமைச் செயலகத்தில் சசிகலா முதல்வராவதற்கான முன்னோட்டங்களாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
முதல்வர் ஓ.பி.எஸ் அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு துறைக்கும், முதல்வர் அலுவலகத்தில் உள்ள தங்கள் துறையின் அனைத்து .பைல்களையும் ஓரிரு தினங்களில் திரும்பப்பெற்றுக்கொள்ளவும் எனவும், கொஞ்சநாட்களுக்கு புதிய ஃபைல்களை முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டாம்” என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம்.
கூடவே ஒவ்வொரு துறைகளிலும் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட இருக்கும் கட்டிடங்கள், வழங்கப்படாமல் உள்ள நலத்திட்டங்கள் இவற்றை திரும்ப துாசி தட்டித் தயாராக வைத்திருக்கும்படியும் எல்லா துறைகளின் செயலாளர்களுக்கும் உத்தரவு போனதாம். தேவைப்பட்டால் அவைகளுக்கு தேதியை ரிசர்வ் செய்யவேண்டியதிருக்கும்.
எதற்கும் தயாராக இருக்கும்படி சொன்னது உத்தரவு.“அவசர காலத்தில் நீங்கள் தற்காலிகமாக இந்த இடத்தில் அமரவைக்கப்பட்டாலும் சும்மா வந்துவிடவில்லை இந்த தகுதி. எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி நீங்கள்.
தகுதியில்லாமலா அம்மா உங்களை இந்த இடத்திற்கு கொண்டுவந்தார்.? அம்மாவிற்குப் பிறகு தமிழக மக்களுக்கு உங்கள் மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கிறது. அப்படியிருக்க இன்னும் நீங்கள் இரண்டாம் இடத்திலிருந்தே செயல்படவேண்டுமா... என இந்த சமயத்தில் நெருக்கமான வட்டாரங்கள் அவருக்கு துாபம் போட்டதாக சொல்லப்படுகிறது.
“மத்திய அரசு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்” என்றதோடு, சசிகலா மீதான வழக்கு இன்னும் உயிருடன் இருப்பதையும் அவர்கள் அப்போது நினைவுபடுத்தி 'கலகம் பிறந்தால் வழி பிறக்கும்' எனச் சொல்லிமுடித்தார்களாம்.ஓ.பி.எஸ்அதிலிருந்துதான் தனி ஆவர்த்தனம் செய்ய முடிவெடுத்தார் ஓ.பி.எஸ் என்கிறார்கள்.
எதிர்பார்த்தபடி ஓ.பி.எஸ்ஸிடமிருந்து சமிக்ஞை கிடைக்காததால், நேரடியாகவே, “எப்போது பதவி விலகப்போகிறீர்கள்” என சசி தரப்பு கேட்டதாகச் சொல்கிறார்கள்.
ஆனால் இந்த முறை ஓ.பி.எஸ் பதில் வேறுமாதிரி இருந்திருக்கிறது. “எல்லாம் நன்றாய்த்தானே போய்க்கொண்டிருக்கிறது. கட்சிக்கு உங்களை எந்த பிரச்னையுமின்றி தேர்ந்தேடுத்து விட்டோம்.
ஆட்சியை நான் பார்த்துக்கொள்கிறேன். இதிலும் உங்கள் குறுக்கீடு இருந்தால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு எழும். அது கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்லதல்ல.
ஏற்கனவே தீபா பிரச்னை. இதில் நாமும் சலசலப்பை எழுப்புவது நல்லதல்ல” என்ற தொனியில் ஓ.பி.எஸ் பேசியதாக கூறப்படுகிறது.சசிகலா தரப்பு கொஞ்சம் இன்னும் அழுத்தம் கொடுத்த போது, ஓ.பி.எஸ் சொன்ன வார்த்தைகள் அதிர்ச்சி தந்ததாம். “எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.
நீங்கள் அழுத்தம் கொடுத்தால் இப்போதே பதவி விலகுகிறேன். ஆனால் அடுத்த நொடியிலிருந்தே உங்களுக்கு பிரச்னைகள் உருவாகும். அதை சமாளிக்க முடியுமா என பார்த்துக்கொள்ளுங்கள்” என்றபோது விக்கித்து போனதாம் சசி தரப்பு. ஓ பி எஸ்அன்று முதல்தான் இரண்டு கடிதங்கள்,
இரண்டு அறிக்கைகள், என ஓ.பி.எஸ்க்கும் சசி தரப்புக்கும் பனிப்போர் துவங்கியது என்கிறார்கள். ஓ.பி.எஸ் ஸை பொறுத்தவரை கட்சியின் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் மத்தியில் அவர் அம்மாவால் வைக்கப்பட்ட கொலு பொம்மை என்ற பிம்பம்தான் இன்றுவரை உள்ளது.
அதனால் ரெமோவிலிருந்து அந்நியனாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் தந்திரங்களை அவர் இப்போது கையாளத்துவங்கிவிட்டார் என்கிறார்கள்.
கட்சியும் ஆட்சியும் சசிகலாவினால் ஒரு பிரச்னையுமின்றி நிர்வகிக்கப்படுகிறது என்ற பிம்பத்தை உடைக்கும் முயற்சியாகத்தான் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி திவாகரனை குறிவைத்ததும் காரசாரமாக அவர் கடந்த மாதத்தில் பேட்டி அளித்ததும் என்கிறார்கள்.
கட்சியில் இன்னொரு தலைமை மேலெழும்பும்போது அதிருப்தியாளர்கள் எளிதாக அதன் கீழ் ஒன்றிணைவார்கள் என்பது ஓ.பி.எஸ் தரப்பின் எண்ணம். ஆனால் அதை திணிப்பதுபோல் அல்லாமல் கலகக்குரல், பரபரப்பு பேட்டிகள், என அடுத்தடுத்து மூவ் மூலம் இயல்பான ஒரு விஷயமாக மாற்றி சாதிக்க நினைக்கிறது என்கிறார்கள்.
அதன் முன்னோட்டம்தான் கே.பி முனுசாமி - திவாகரன் மோதல் விவகாரம். முனுசாமி முந்தைய ஆட்சியில் ஓ.பி.எஸ் உடன் இணைந்த நால்வர் அணியில் ஓ.பி.எஸ்க்கு நெருக்கமானவராக இருந்தவர்.
திவாகரனுடனான மோதலில் அவர் அளித்த பேட்டியில் திவாகரனை வசைபாடிய அவர், கூடவே ஓ.பி.எஸ் நிர்வாகத்திறமையை புகழ்ந்து தள்ளியதையும் கவனித்திருக்கலாம்.
அதைத்தொடர்ந்தே அப்போது ஒரு விழாவில் பேசிய நடராஜன், தமிழகத்தில் உள்ள சிலரின் சதித்திட்டத்திற்கு மோடி பலியாகிவிடக்கூடாது என காட்டமாக தெரிவித்திருந்தார்.
ஓ.பி.எஸ்எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதுபோல், டெல்லி விஜயத்தில் ஓ.பி.எஸ் தனித்தன்மையுடன் நடந்துகொண்டது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக எம்.பிக்களை மோடி தவிர்த்து விட்டு ஓ.பி.எஸ்க்கு மட்டும் அப்பாயிண்மென்ட் வழங்கியது என அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள் எல்லாம் சசி தரப்பை எரிச்சலடையச் செய்திருக்கிறது.
அதனால்தான் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான முடிவுகளை மோடி எடுத்த நிலையிலும், சசியின் குரலாக தம்பிதுரை பாஜக வை கடந்த வாரம் வறுத்தெடுத்தது என்கிறார்கள்.ஜல்லிக்கட்டு விவகாரம் எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக கலவரத்தில் முடிந்தது,
இதில் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் உருவாகியது. இதை வைத்து ஓ.பி.எஸ்-யை ஓரங்கட்டலாம் என்று சிலர் நினைத்தார்கள். ஆனால், அதுவும் இறுதியில் தோல்வியில் முடிந்தது.
முதல்வராக பலம்பொருந்திய பதவியில் ஓ.பி.எஸ்ஸை தொடரச் செய்வது கட்சியில் அவருக்கான ஆதரவு வட்டத்தை பெருக்கி கட்சியில் இன்னுமொரு அதிகாரம் மையம் உருவாகிவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கும் அதேசமயம், ஓ.பி.எஸ்க்கு டெல்லித் தலைமை அளிக்கும் முக்கியத்துவத்தையும் கூர்ந்து கவனிக்கிறது.
இதனால் அச்சத்துக்குள்ளாகியிருக்கும் சசி தரப்பு, ஓ.பி.எஸ் ஸை மென்மையான அணுகும் முடிவுக்கு வந்திருப்பதாக சொல்கிறார்கள். அதனால்தான் இப்போதைக்கு விவகாரத்தை ஆறப்போட முடிவெடுத்திருக்கிறதாம்.
ஓ.பி.எஸ்முதல்வர் பொறுப்பில் இருந்து ஓ.பி.எஸ்ஸை ஓரம்கட்ட சட்டமன்றத்தின் உள்ளேயே எம்.எல்.ஏக்கள் மூலம் சகல வித்தைகளையும் காட்டமுடியும் என்றாலும், அது மக்களிடையே உள்கட்சி விவகாரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டிவிடும் என்பதால் கொஞ்சகாலம் பொறுமை காப்பது நல்லது என முடிவெடுத்திருப்பதோடு, அதை பட்டவர்த்தனமாக கடந்த வாரம் நடராஜன் மூலம் ஒருமேடையில் 'ஓ.பி.எஸ்ஸை இப்போதைக்கு மாற்றும் எண்ணம் இல்லை' என்று கூறி தற்காலிகமான முதல் பாதி ஆட்டத்தை முடித்துக்கொண்டிருக்கிறது சசிகலா தரப்பு என்கிறார்கள்.
- Vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள