வியாழன், 12 ஜனவரி, 2017

தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்களா..? நல்லாட்சி அரசுக்கு எதிராக மனித உரிமைகள் அமைப்பு குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்களா..? நல்லாட்சி அரசுக்கு எதிராக மனித உரிமைகள் அமைப்பு குற்றச்சாட்டு


இலங்கையில் பல தசாப்த காலமாக இடம்பெற்று வந்த உள்நாட்டு யுத்தம் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் புறக்கணித்து வருகின்றது.
இலங்கை அரசின் இந்த புறக்கணிப்பின் காரணமாக யுத்தம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், காணாமல் ஆக்கப்பட்டோர், மற்றும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதி, நியாயம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு இன்று இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல முக்கிய பரிந்துரைகள் அடங்கிய 700 பக்கங்களுக்கு மேலான ஒரு விரிவான அறிக்கை ஒன்று கடந்த 3ஆம் திகதி நல்லிணக்க ஆலோசனைக்கான செயலணி வெளியிட்டது.
எனினும், இந்த அறிக்கையினை இலங்கை அரசாங்கம் மிகவும் எளிதாக அலட்சியப்படுத்தும் வகையில் செயற்படுவதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மேலும், அந்த அறிக்கை கையளிக்கப்பட்ட போது ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ பங்கேற்கவில்லை.
அத்துடன், குறித்த அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நீதி அமைச்சர் இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளில் தனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பின் தெற்காசிய இயக்குநர் சம்பா பட்டேல் கருத்து வெளியிடுகையில்,
பிரதமரால் நியமிக்கப்பட்ட செயலணியின் அறிக்கையை மிகவும் விரைவாக தாக்கல் செய்ய இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டது.
சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள 7000க்கும் மேற்பட்ட மக்கள், குறிப்பாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட பலர் தாங்களே முன் வந்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இது தொடர்பான தங்களின் கடும் பணியை சிரத்தையுடன் நல்லிணக்க செயலிணியின் உறுப்பினர்கள் செய்து முடித்து விட்டனர்.
எனினும், செயலணியின் அறிக்கை மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளை இலங்கை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.
தங்களின் குடும்ப உறுப்பினர் கொல்லப்பட்டதாலோ அல்லது காணாமல் போனதாலோ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதற்கு அரசாங்கம் தனது உறுதியை காட்ட வேண்டுமெனில்,
இலங்கை அரசாங்கம், நல்லிணக்க செயலணியின் அறிக்கையின் பரிந்துரைகள் குறித்து வலுவாக கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள