வியாழன், 17 நவம்பர், 2016

சிக்கனமாகச் சில சொற்கள்....





சிக்கனமாகச் சில சொற்கள்.... 

இவ்வுலகில் எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது, ஆனால் பெரும்பாலானவற்றை வாங்க முடியும். சிக்கனமாக இருக்க முடிந்தால் , ஒரு கதையுடன் தொடங்குவோமா?

ஒருவர் முகமது நபியிடம் வந்தார். ஊரில் ஒரு பள்ளிவாசல் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. மீதமிருக்கும் கட்டடப்பணியை முடிக்க ஒரு பெருந்தொகை தேவைப்பட்டது. முகமது நபியிடம் செய்தியைச் சொன்னார்.

முகமது நபி கொஞ்சமும் யோசிக்கவே இல்லை. பக்கத்து ஊரிலிருந்த ஒரு பெரிய பணக்காரரைப் பற்றிச் சொல்லி அவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார். கண்டிப்பாக அவர் உதவி செய்வார் என்று நம்பிக்கை ஊட்டினார். வந்தவர் மகிழ்ந்து போனார். வேலை இவ்வளவு சுலபமாக முடியும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. உடனே பக்கத்து ஊருக்குப் பயணமானார்.

இவர் பக்கத்து ஊருக்குப் போனபோது, அந்தப் பணக்காரர் தன்னுடைய வேலைக்காரனின் முகத்தில் ஓங்கி ஓங்கிக் குத்திக் கொண்டிருந்தார். சரியாகப் பத்து குத்துகள். பணக்காரர், வேலைக்காரனைப் போட்டுக் குத்துவதைப் பார்த்து அப்படியே வெலவெலத்துப் போனார் இவர். இந்த நேரத்தில் போய் இவரிடம் எப்படி உதவி கேட்பது? என்று அச்சமாகவும் இருந்தது. வேலைக்காரன் வெளியே வந்ததும் அவனிடம் விசாரித்து விட்டு, பணக்காரனிடம் போவது என்று முடிவு செய்து கொண்டு, வெளியே காத்திருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து, அந்த வேலைக்காரன் வெளியே வந்தான். அவனிடம், பணக்காரர் அவனை அடித்ததற்கான காரணத்தைக் கேட்டார்.

அது ஒண்ணும் இல்லீங்க. கடையில போய் துவரம்பருப்பு வாங்கி வரச் சொன்னாரு. வர்ற வழியில பத்துப் பருப்புங்க கீழ விழுந்துடுச்சு. அதுதான் பத்து குத்து குத்துனாரு முதலாளி - என்றான் வேலைக்காரன்.

திகைத்துப் போனார் இவர். கூடவே ஒரு சந்தேகமும் வந்தது. பத்தே பத்து பருப்பு சிந்தினதுக்கே இப்படிப் போட்டு குத்துற மனுசன், எப்படி அவ்வளவு பெரிய தொகையைத் தருவாரு? - இவர் எந்த முதலாளியைப் பார்க்க வந்தாரோ, அவரைப் பார்க்காமலேயே ஊர் திரும்பினார்.

முகமது நபியிடம் போய் செய்தியைச் சொன்னார். முகமது நபி, பரவாயில்லை. மறுபடியும் போய் அவரைப் பாருங்கள், அவர் கண்டிப்பாக உதவி செய்வார் என்றார். இவரால் மறுக்க முடியவில்லை. முகமது நபியே சொல்லிவிட்டார், போய்த்தான் பார்ப்போமே என்று மறுபடியும அந்த ஊருக்குப் போனார்.

இவர் போனபோது, அந்தப் பணக்காரரின் வீட்டுக்கு முன்னால் கூட்டமாக நின்று மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவரும் எட்டிப் பார்த்தார். அதே பணக்காரர். அதே வேலைக்காரன். இப்போது பணக்காரர், கையில் வைத்திருந்த சவுக்கால் வேலைக்காரனை அடித்துக் கொண்டிருந்தார்.,

சரியாகப் பத்து சவுக்கடிகள். இவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவரை விசாரித்தார்.

அது ஒண்ணும் இல்லீங்க. இந்த வேலைக்காரன் எண்ணெய் வாங்கிட்டு வந்திருக்கான். வர்ற வழியில பத்து சொட்டு எண்ணெய் கீழ சிந்திடுச்சாம். அதுதான் பத்து சவுக்கடி குடுக்கறாரு முதலாளி... என்றான்.

இவருக்கு இதயத்துடிப்பே ஒரு வினாடி நின்றுவிட்டது. பத்து சொட்டு எண்ணெய் கீழே சிந்தியதற்கு இந்த அடி அடிக்கிற மனிதர், எப்படி அவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாகத் தருவார்? நம்பிக்கையற்றவராக அவரைப் பார்க்காமலேயே மீண்டும் ஊர் திரும்பினார்.

முகமது நபி விசாரிக்க, நடந்ததைச் சொன்னார். அடடா தப்புப் பண்ணிட்டீங்களே,, அவரைப் பாத்துட்டுல்ல வந்திருக்கணும்? சரி மறுபடியும் போங்க. இந்தத் தடவை என்ன நடந்தாலும் அவரைப் பார்க்காம வந்துடாதீங்க. போங்க என்றார் நபி. மறுபடியும் அதே ஊருக்குப் போனார்.

இந்த முறை இவர் எதிர்பார்த்ததைப் போல் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. அந்தப் பணக்காரர் வாசலில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார். யாருடனோ சாவகாசமாகப் பேசிக் கொண்டிருந்தார். இவர் பணக்காரருக்கு வணக்கம் சொல்ல, அவரும் மிகப் பணிவாக பதில் வணக்கம் சொல்லி வரவேற்றார். தன்னுடைய ஊரில் பள்ளிவாசல் கட்டும் பணி நடந்து கொண்டிருப்பதையும், பணம் இல்லாமல் வேலை பாதியிலேயே நிற்பதையும் சொன்னார்.

அடடா, நல்ல காரியத்தைப் போய் தள்ளிப் போடலாமா? முதல்லேயே வந்திருக்கக்கூடாது? - என்று உரிமையாகக் கடிந்து கொண்டார் அந்தப் பணக்காரர். உடனே வீட்டுக்குள்ளே போய் கேட்ட முழுத்தொகையையும் எடுத்து வந்து கொடுத்தார்.

வந்தவர் அசந்து போனார். அந்தப் பணக்காரர் அப்படி நடந்து கொள்வார் என்பதை இவர் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, பிரமிப்பு மாறாமல் பணத்தோடு முகமது நபியிடம் வந்தார். பணக்காரர் பணம் கொடுத்த விவரத்தைச் சொன்னார்.

பத்தே பத்து பருப்புகளுக்காகவும், பத்து சொட்டு எண்ணெய்க்காகவும் வேலைக்காரனை அந்த அடி அடிச்சவரு, எப்படி இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையா குடுத்தாரு? - என்று ஆச்சரியம் விலகாமல் நபியிடம் கேட்டார்.

நபிகள் மிகப் பொறுமையாகச் சொன்னார். நீங்க நெனைக்கிற மாதிரி அவரு கஞ்சன் இல்லை... சிக்கனக்காரர்.. அவர் மட்டும் அவ்வளவு சிக்கனமா இல்லைன்னா அவராலே பள்ளிவாசல் கட்டப் பணம் குடுக்க முடியாது.

இதுதான் சிக்கனத்தின் பெருமை.

( ஆர் பத்மநாபன் எழுதிய தண்ணியா செலவழி நூலின் முன்னுரையாகவும், நுழைவாயிலாகவும் எழுதிய சுவையான பகுதிதான் இது ) 














1 கருத்து:

உங்களின் கருத்துரைகள