செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

இலங்கைச் சரித்திர சூசனம்:-2

அநுரத புரத்திலுள்ள எல்லாளன் சமாதி .

இரண்டு தமிழர்கள் கொலை செய்யப் பட்டதற்கே எல்லாளன் என்ற சிற்றரசன்,தமிழகத்தில் இருந்து படைதிரட்டி  வந்து சண்டையிட்டது 
பழைய வரலாறு. ஆயிரக் கணக்கில் தமிழர்கள்,துடி துடித்துச் சாக 
கொலை செய்யத் தூண்டியவனுடன், சேர்ந்து கைகுலுக்கி, சேர்ந்து  
வாழுங்கள் என்று கடிதம் எழுதியது இன்றைய தமிழகத்தின், 
,சாதனையுடன் கூடிய வரலாறு. என்ன நடந்ததது இன்றையத் 
தமிழருக்கு 
முதலிருந்து  படிக்க.. 
௨.அதிகாரம்
தேவப்பிரிய தீசன் அரசனானது முதல்; எல்லாளன் வெற்றிபரியந்தம்.

முத்த சிவராஜனுக்குப்பின்,அதாவது கி.பூ. 307ம் வருசத்தில் அவன் மகன் 
(Devananpiatissa ) தேவப்பிரியன் என்னும் பட்டப்பெயருடைய தீசன் அரசனானான்.
இவன் சிம்மாசன மேறியவுடன்,பூமியில் புதைந்து கிடந்த பொன், வெள்ளி,
இரத்தினாதிகள் வெளி யெழும்பின வென்றும், மூங்கில்கள் தாமே வளர்ந்து 
புஷ்பங்கள், மிருகங்கள், பலவர்ணப் பஷிகள் முதலியவற்றை ஈன்றன 
வென்றும் சிங்கள் புராணம் கூறும்.இது மங்கள வருணனையன்றி,
உண்மையாய் நடந்ததன்று.


தேவப்பிரியன் தன் சிநேகனாகிய மகத தேயத்தரசன் தருமா சோகனுக்கு,
ஒரு முறை,விலையுயர்ந்த இரத்தினங்களையும், திவ்விய மதுரமான
சில கனிகளையும், உபகாரமாக  நான்கு சிங்களப் பிரபுக்கள் வசத்தில் 
கொடுத்தனுப்பினான். அவர்கள் அவ்வுகாரப் பொருள்களைக் கொண்டு 
யாழ்ப்பாணத்திற்கு சமீபமாக ஒரு துறையிலே தோணியேறி,அக்காலத்தில் 
$"சம்புத்தீவு" எனப் பெயரிய இந்தியாக் கரையை ஏழாம் நாளில் அடைந்து,
அங்கு நின்றும் புறப்பட்டு,நேரே இராஜதானியாகிய,பாடளிபுரத்துக்குப் போய்,
அரசன் முன் அப்பொருள்களை வைத்து,வணங்கி நின்றார்கள்.அரசனும்
அவர்களை, மரியாதையோடு பசரித்து பின் தான் பெற்ற பொருள்களுக்கு,
பிரதியாக, ஒரு கிரீடம், ஒரு வாள், கங்கையின் தீர்த்தம் ஆகிய இவற்றோடு,
வேறு பல பொருள்களையும்,தன் தூதர் சிலரிடத்துக் கொடுத்து, தன்னைப்போல்,
தீசராஜனும்,புத்த கடவுளுக்கு அடிமையாக வேண்டும்,என்னும் தனது,
கோரிக்கையையும் அரசனுக்குணர்த்துமாறு அவர்க்குக் கட்டளையிட்டு
அப்பிரபுக்களையும் உடன் அனுப்பினான்.அன்றியும் தருமாசோகன்,பௌத்த
மதத்திற் பேரும் பிரமை யுடையனாயிருந்தமையினால்,அம் மதத்தை
இலங்கையிலும் பரவச் செய்தல் வேண்டுமென்னும் ஆசை கொண்டு,
பௌத்த குருமாருள் ஒருவனாயிருந்த தன்மகன் மகிந்தனையும்,
அவ்விடத்திற்கு அனுப்பினான். இது நிகழ்ந்தது கி.பூ.-306 ல்

இவ்வாறு வந்த மகிந்தன், தேவப்பிரியனால் மரியாதையோடு உபசரிக்கப்
பட்டு,ஊர்கள் தோறும் சென்று பிரசங்கம் செய்யத் தொடங்கினான்.அவன்
பிரசங்கங்களைக் கேட்ட பலர், தம் சுய மதத்தைவிட்டுப், பௌத்தராயினர்.
பெண்கள் கூடமாக வந்து, பிரசங்கங்களைக் கேட்டு,அவற்றில்
மயங்கினவர்களாய்த் தமதரச பத்தினியாகிய அனலை என்பவளைத்,
தலைமையாகக் கொண்டு, மஹிந்தனையணுகி,தங்களுக்குக், குருத்துவம்
தரும்படி வேண்டினார்கள்.மகிந்தன் அக்கேள்விக்கிசையாது, தன் சகோதரியாகிய,
"சங்கமித்திரையைக் கேட்க" வென்று அவர்களுக்குரைத்தான். உடனே,
அனலை, பாடலி புரத்திற்கு ஒரு தூதனை அனுப்பிச், சங்கமித்தைக்குத்
தனது கருத்தைத் தெருவித்தாள்.அதைக்கேட்ட சங்கமித்தை,தான்
இலங்கைக்குப் போக விடைதரவேண்டும் என்று, தந்தையைக்கேட்க,தந்தை
"உனைப்பிரிந்து நான் உய்வதெப்படி" என்று தடுக்க, அவள் அதனைக்கேளாது
தந்தையை யொருவாறு சம்மதிக்கச் செய்து,அவனிடத்தில் விடை பெற்று,
ஒரு வெள்ளரச மரத்துக் கிளையுங் கையிற்கொண்டு,புறப்பட்டு,இலங்கையைச் சேர்ந்தாள்.

இவள்,இவ்வாறு வந்து சேர்ந்தவுடன்,தன் வேலையிற் கையிடத் தொடங்கி,முதலில் தான் கொணர்ந்த,*வெள்ளரசங் கொம்பை மகாமேகத தோட்டத்தில் நாட்டிப்,பின்
பற்பல விடங்களுக்குஞ்சென்று பெண்களுக்குபதேசம் பண்ணி வருவாளாயினாள்
அக்காலையில் அரசன் அம்மகாமேகத் தோட்டத்தை மகிந்தனுக்குபரிக்க,
அவனுமதையேற்றுத், தனக்கு ஆசிரமமாக்கிக்கொண்டங்கிருந்தான். இன்னும்
சங்கமித்தை தனது சகோதரனுடைய துணையால்,சமாதிகளையும்
பள்ளிகளையும் பலவாகக் கட்டுவித்ததுமன்றி,ஆங்காங்கும் மலைகளைக்
குடைந்து,கெபிக்கோயில்களையும் முனிவர் வாசகங்களையும் இயற்றுவித்தாள்
அப்போது தருமாசோகனும் ஒரு சிறிய பாத்திரத்தில் புத்தருடைய,அஸ்தியில் சிறிதைவைத்து இலங்கைக்கு அனுப்பினான்.அதனைச் சங்கமித்தை பெற்று,ஆங்காங்கும் கோயில்களில் சிறிது சிறிதாய் அடக்கஞ்செய்து
பிரதிஷ்டை செய்தாள். இப்படியே,தான் எடுத்தக்கொண்ட பிரயாசைகளால்
திருப்தியடைந்தவளாய்த் தன்வாணாளின் கடைநாட்களை ஏகாந்தவாழ்விற்
கழித்தாள்.

சமயாபிமானமென்னும் வீராவேசத்தால் தூண்டப்பட்டவர்களாய், மகிந்தனும்
சகோதரியும்,தங்கள் அரச யோக்கியதையும், போகபோக்கியத்தையும்,தாய்
தந்தையரோடின்புற்றிருக்கும் சலாக்கியத்தையும் ஒரு சிறிதும்,லட்சியம்
செய்யாது,தம் பௌத்தமதமது விருத்தியின் பொருட்டு இலங்கைக்கு வந்து,
தம் வாணாளைக்கழித்தது புகழப்படத் தகுவதொருசெயலேயாகா,உலகத்தில்
மெய்ச்சமயம் எதுவோ அச் சமயத்திலபிமானமுடையோ மென்றிருப்போர்,
அச் சமய விருத்தியின் பொருட்டுத் தமதுயிரிழக்க வரினும் இழந்துவிடலன்றோ
சிறப்பும் ஆண்டகையுமாகும்.அது நிற்க,

தேவப்பிரியன் அநுரத புரத்திலே தூபராமயமெனப் பெயரியதும்,புத்தருடைய
கழுத்தின் வலப்புறத்தெலும்பு அடங்கி இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளதும்,
இலங்கையிலுள்ள, கோயில்களுள் விசேட அலங்க்காரமுள்ளதுமானவோர்,
ஆலயத்தைக் கட்டுவித்ததுமன்றி,மிகிந்தலையிலும் பௌத்த குருமாருக்கு,
முப்பத்திரண்டு,கூடங்களையுமியற்றுவித்தான்.இவையன்றி தீச வாவி
எனப்பெரிய தடாகத்தையும்,இவனே கட்டுவித்தான்.

இவ்வண்ணம்,தேவப்பிரியன் அரசுபுரிந்துவருநாளில்,அவன் பத்தினியாகிய,
அனலை,தனது, நாயகன் இறக்க வருங்காலத்தில்,தன் புத்திரனுக்குப்
பட்டங் கிடைக்க வொட்டாமல்,தன் கொழுந்தனாகிய,மகானாகன் கலகஞ்
செய்வான் என்னும் அச்சத்தால், அவனைக் கொல்லவெண்ணி,நஞ்சூட்டிய
வொரு கனியை உபகாரப் பொருள்போல் அவனுக்கனுப்பினாள்.
"ஒன்று நினைக்கவது வொழிந்த்திட்டொன்றாகும்," என்றபடி அவனும் அதை
வாங்கி அக்காலையில்,தன்னுடனிருந்த, அனலை புத்திரனுக்குக் கபடொன்று
மின்றி,யுண்ணக்கொடுத்தான்.அக்குழந்தையும் விதியின் வழியே அதனை
ஏற்றுண்டு உடனே உயிர்துறந்தது.இதனைக்கண்ட மகாநாகன் திகிலடைந்து,
"இதுவோ நங்குடும்பத்துச் சீர்," என்று,துயரத்தோடும் அவ்விடத்தை விட்டோடித்
தெற்கின் கண் உள்ள ஊருகுணையையடைந்து, அங்கே மாகமம் என்னுமொரு
பட்டணத்தை அமைத்து அதைத் தனக்கு,ராஜதாணியாக்கிக் கொண்டங்கிருந்தான்.
அவ்விடத்திலே அநேக *விகாரைகளும், மகியங்கனாவிலே ஒரு கோயிலும்
இவனாற் கட்டப்பட்டன.

இவன் இப்படியிருக்க,இவன் குமாரன் (Yatalatissa ) யதலத்தீசன் கழனியாவென்று
 இக்காலத்திலழைக்கப்படும் இடத்துக்குச் சென்று அப்பெயரால், ஒரு நகரைக்
கட்டி, அங்கிருந்தாண்டான். அவனுக்குப் பின், கழனித்தீசன் அன்னகர்க்குப் அரசனாயினான்.அவன் காலத்தில் நுளையர் வாசஞ்செய்த, 979  சேரிகளையும் 
வேறு அநேக கிராமங்களையும், கடல் கொண்டது, அதுபற்றியே முன் கழனியா விலிருந்து 16 மைல் தூரத்திற் கிடந்த கடல்,பிற்காலத்தில் 4 மைலாக நெருங்கிற்று.
அது,நிற்க.

இவர்கள் சீரிப்படியாக, அங்கே தேவப்பிரியன்,நாற்பது வருடம்,நல்லரசு புரிந்து
கி.பூ.266 -ம் ளு த்தில் இறக்க,அவன் தம்பி (yttiya )  உத்தியன் அரசனானான் இவன்
அரசனாகி எட்டம் வருடத்தில் மகிந்தன் இறந்துபோக,அவனுக்குத் தீக்கடன்
முதலிய செய்து அவனை அதி சம்பிரமத்துடன் தகனஞ்செய்வித்தான்.அடுத்த
வருடத்தில்,சங்கமித்தையுமிறந்தாள்.மகிந்தணிறந்த இடம் இப்போது
மகிந்தல மலை எனப்படும்.

இவ்வுத்திய ராஜன் பத்து வருடமரசு செய்து,கி.பூ.56ம் ளு வருடத்தில் இறக்க,
அவன் தம்பி, (Mahasiva ) மகாசிவன் அரசனாகினான்.அவனும் பத்துவருடம்,
ஆண்டு,அப்பால் கி.பூ.246ம் ளு, வருடத்தில் மடிந்து போக,(Suratissa ) சூரதீசன்
அரசனானான்.அவன் தன் அதி விவேகத்தால், துரக சேனாபதிகளாக (senan )
(Guttikan )  என்னுமிரு தமிழரை நியோகிக்க, அவர்களும் சமயம் வாய்ந்ததது
என்று அரசனுக்கு மாறாயத் திரும்பி அவனைக் கொன்று தாமே அரசராயினர்.
இவவாறுவிவர்கள் அரசராகி 22 வருடமாண்டு, வருமளவில், மேற்கூறிய
மகா சிவராஜனுடைய ஒன்பதாம் புத்திரனாகிய (Asela ) அசேலன் என்பவனாற்
கொலையுண்டிறந்தனர்.

அப்பால், அசேலன் தானே அரசனாகி பத்து வருஷம் செங்கோலோச்சி
வருமளவில், சோழநாட்டிலிருந்தபடி,இதனைக் கேள்வியுற்ற (Elala )
எல்லாளன் என்னுமோர் தமிழ் சிற்றரசன், மேற்கூறிய "இரு தமிழரையும்
வென்ற அசலனோடு போர்செய்வேன்" எனத் தீர்மானித்து, அங்கு நின்றும்
புறப்பட்டு,மகாவலி கங்கா சங்கமத்திற்குச் சமீபமாகத், தனது சேனைகளோடு
வந்திறங்கிச்சேனைகளை அணிவகுத் தழைத்துக் கொண்டு நேரே
அநுரதபுரத்திகுச் சென்று,அங்கே எதிர்த்த அசெலனைப் புறங்க்கொடுக்கச்
செய்து,ஊருகுணை ஒழிந்த மற்றைய நாடெல்லாம் ஒருங்கே கைப்பற்றி,
ஆங்காங்கும், ஓரோர் கோட்டையாக,முப்பதிரண்டு கோட்டைகளைக் கட்டி,
காவல் செய்தான். அன்றியும் மன்னருக்கு சமிபத்தேயுள்ள,
மாதோட்டமென்னும், நகரமுமிவனாற் கட்டப்பட்டதென்பது சிலர் துணிபு.
தமிழர் இலங்கையின்மேற் பெரும்படை கொண்டு நடந்தது, இம்முறை தான்.
எல்லாளராஜன் தான் விதிக்க சமயத்தவராயிருந்தது பற்றி,பௌத்த சமயத்தை
யடியோடு களையுங் நோக்கத்தோடு,அப் பௌத்தாலயங்களை எல்லாம்,
தகர்ப்பித்து நாசஞ்செய்தானாயினும், தமர் என்றும் பிறர் என்றும் வேற்றுமை
செய்யாது சமநிலையுடையுளத்தினனாய், யாவரையும்,நீதி வழி  நின்று,
காத்தானென சிங்கள சரித்திரங்களே கூறும்.இன்னும், சயனகாலங்களில்
முறையீட்டுக்காக வருவோர், சபா மண்டபத்தில் நின்றபடியே, அசைத்
தொலித்துத் தன் வரவை யரசனுக்குணர்த்துதற்கு, உபகரணமாக அச்சபா
மண்டபமுதல் சுவர்களை ஊடறுத்துச் சயன மண்டபம் வரையில்,நீண்ட ஓர்
கயிற்றுடன்,ஒரோசைமணி அச் சயன மண்டபத்திலே மஞ்சத்தின் மீது கட்டித்
தூக்கப்பட்டிருந்தததென்றால், அவனிடத்தில் அரசலட்ஷனம் நன்றாயமைந்து
கிடந்ததென்பதைச் சொல்லவும் வேண்டுமோ.!

"காட்சிக் கெளியன கடுஞ்சொல்ல னல்லனேல்                 
 மீக்கூறு மன்ன னிலம்."
       

   *கிறிஸ்து பூர்வாப்தம் -கிறிஸ்து பிறக்க முன்னுள்ள காலம்.கி.பூ (B.C )
கிறிஸ்த அபராப்தம் -கிறிஸ்து பிறந்த பின்னுள்ள காலம். கி.அ. (A .D )


$புரானாதிகளிலுள்ளபடி,சம்புத் தீவு சத்த தீவுகளிலொன்று.அது நவ கண்டங்களாக 
வகுக்கப் பட்டுள்ளது.அவற்றுள் ஒன்றாகிய பரத கண்டமே இந்தியா.

*வெள்ளரசு -போதி விருஷம் 

எல்லாளன் சமாதி பற்றியறிய இங்கு போங்கள்       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள