சர்க்கரை நோயைப் பொறுத்தவரை மருத்துவர்களின் எச்சரிக்கை அதனை வருமுன் காப்பது தான் சிறந்தது என்பர். ஆனால் அந்த பாதிப்பு வந்துவிட்டால் ஒரு பிரிவினர் அதனை கட்டுப்படுத்தலாம் ஆனால் குணப்படுத்த இயலாது என்றும், மற்றொரு பிரிவினர் அதனை குணப்படுத்த இயலும் என்று சொல்வர். ஆனால் டயாபடீஸ் எனப்படும் சர்க்கரை நோய் வந்துவிட்டால் உணவுக் கட்டுபாடு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள்.
உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றும் பலருக்கும் அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவு எதிர்பார்ப்பது போல் குறைவதில்லை. ஆனால் அவர்கள் செய்யும் தவறு அதிக கலோரிகளை உடைய உணவு பொருள் எது என்பதை இனங்கண்டறிந்து சாப்பிடுவதில்லை. 
குறைந்த கலோரிகள் கொண்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகள், கீரை வகைகள், பச்சை காய்கறிகள் ஆகியவற்றை தினமும் 800 கலோரி அளவிற்கு எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவைப்படும் அதிகப்படியான சத்தை ஏற்கனவே கொழுப்பாக சேகரிப்பட்டிருப்பவைகள் சிதைக்கப்பட்டு அதிலிருந்து சர்க்கரை சத்து எடுத்துக் கொள்ளப்படும். இதன் காரணமாக சர்க்கரையின் அளவு குறையத் தொடங்கும். அதே சமயத்தில் ஒரு நாளைக்கு 3 லீற்றருக்கு மிகாமல் தண்ணீரும் அருந்தவேண்டும். இதனை தொடர்ந்து பின்பற்றினால் ஆச்சரியப்படும் வகையில் டைப் 2 சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரையின் அளவு குறைந்து அவர்கள் இந்த பாதிப்பிலிருந்து விடுபடுவர்.
இதனை புறகணித்தால் சர்க்கரையின் அளவு அதிகரித்து உயர் இரத்த அழுத்தம், இதய பாதிப்பு, அதிக கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் உருவாகும். அதனால் டைப் 2 சர்க்கரை நோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் உணவுக்கட்டுப்பாட்டை தொடரவேண்டும். அதனை மருத்துவர் கண்காணிப்பார். மீண்டும் பரிசோதனை செய்து சர்க்கரையின் அளவு குறைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, ஆரோக்கியமான வாழ்வை தொடரலாம்.
டொக்டர் ராஜேஷ்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்