வெள்ளி, 19 மே, 2017

பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு உணர்த்துவது எப்படி?

பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு உணர்த்துவது எப்படி?
ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்.
ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.
மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாயை எடுத்து நீட்டினான். அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார்.
மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார்.
மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது, மகன் தாவி அதை அணைத்தான். 'அப்பா என்ன செய்கிறீர்கள்?' என்று அலறினான்.
அவர் சொன்னார் : ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’
ஆச்சரியமடைந்த அவன்,' எப்படி கண்டு பிடித்தீர்கள் ?'என்றான்.
'நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் அது கரியானபோது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.
இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான். உலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.
விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்குத் தெரியவில்லை.
இரண்டாயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.
ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.
இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.
போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள்.
குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.
படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம். வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா?
இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும்.
அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள்:
100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டுக் கொடுங்கள்.
கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.
பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள். பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.
உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.
காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை. ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதைப் புரிய வையுங்கள். பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.
உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றைத் தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.
மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.
தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது.
தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவைப் பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப் பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.
எனவே எதை வாங்குவது? எப்படி வாங்குவது? எப்போது வாங்குவது? இதெல்லாம் பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால பாடங்கள்.
எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது?
100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.
அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).
இதனால் என்ன என்ன பயன்?
தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்கக் காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.

தமிழன் என்றொரு இனமுண்டு!

தமிழன் என்றொரு இனமுண்டு
நாமக்கல் கவிஞர் 

தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அவனே மாந்தன் முதலேடு
அளித்தான் உலகப் பண்பாடு
ஒன்றே குலமெனும் உயர்வோடு
உரைத்தான் தெய்வம் ஒன்றென்று
யாதும் ஊரே என்றுரைத்தான்
யாவரும் கேளிர் என்றழைத்தான்
அறமே வாழ்வின் நெறியென்றான்
அருளே பொருளின் முதலென்றான்
அன்பின் வழியது உலகென்றான்
ஆசைப் பெருகின் அழிவென்றான்
ஒழுக்க வாழ்வே உயர்வென்றான்
அழுக்கா றின்றி வாழென்றான்
ஒன்று பட்டால் வாழ்வென்றான்
ஒற்றுமை இன்றேல் தாழ்வென்றான்
பணிதல் யார்க்கும் நன்றென்றான்
பகையே வாழ்வின் இருளென்றான்
சினமே உயிர்க்குப் பகையென்றான்
சீற்றம் தவிர்ப்பது சிறப்பென்றான்
இன்சொல் யார்க்கும் அணியென்றான்
இன்னா செய்தல் பழியென்றான்
வாய்மை வாழ்வின் நெறியென்றான்
தூய்மை வாழ்வின் விளக்கென்றான்
அமிழ்தின் இனிய பண்பெல்லாம்
அணியாய்க் கொண்ட தமிழன்தான்
தன்னை இழந்து வாழ்கின்றான்
தமிழை மறந்து அழிகின்றான்
ஆங்கில மொழியின் தாக்கத்தால்
ஆன்ற பெருமை இழக்கின்றான்
கற்றோர் கொண்ட கலக்கத்தால்
கல்விச் சிக்கல் எழுந்திங்கே
ஆங்கில வழியில் கற்றால்தான்
அறிவைப் பெறலாம் என்றவர்கள்
உலகைப் புரிந்து கொள்ளாமல்
உளறி வைத்தனர் மக்களிடம்
ஓங்கிய தமிழ்வழி இல்லாமல்
ஆங்கில மொழிவழிக் கல்வியினால்
ஈங்குநம் குழந்தைகள் இழந்தார்கள்
இயல்பாய் படைக்கும் ஆற்றலினை
கருத்தறி வில்லாக் கல்வியினால்
காரிருள் சூழ்ந்தது இம்மண்ணில்
படிப்பில் பதவியில் உயர்ந்தவர்கள்
பழக்கத் தாலே இம்மண்ணில்
படிக்கா தவரும் ஆங்கிலத்தின்
பிடிக்குள் ளானார் படிப்படியாய்.
ஆங்கில மொழியின் அடிமைகளாய்
ஆயினர்  தமிழர்  அதனாலே
வழக்குச் சொற்கள் பலயிழந்தோம்
வாழ்வின் நெறிகளும் மறந்துவிட்டோம்
தமிங்கில மக்களாய் வாழ்கின்றோம்
தமிழ்வழி மாறிச் செல்கின்றோம்.
இந்நிலை தடுத்து நிறுத்தோமேல்
எந்நிலை யாகும் இந்நாடு
மண்ணின் மக்கள் தமிழர்களாய்
மாறுவ தெப்போ திந்நாட்டில்.
தமிழைத் தமிழாய்ப் பேசும்நிலை
தழைப்ப தெப்போ திந்நாட்டில்
படிப்பில் பதவியில் உயர்ந்தவர்கள்
பழக்கம் மாறின் நிலைமாறும்
துறைகள் தோறும் தமிழாட்சி
தொடங்கின் நாட்டின் நிலைமாறும்
கல்வி மொழியும் தமிழாயின்
கடிதில் இம்மண் கதைமாறும்
கோயில் மொழியும் தமிழாயின்
குடிகள் மாறும் தமிழ்வழியில்
ஆயின் இவற்றைச் செய்வதற்கு
ஆரே யுள்ளார் இம்மண்ணில்
மக்கள் எழுச்சி பெறவேண்டும்
மண்ணில் மாற்றம் எழவேண்டும்
மக்கள் புரட்சி எழுமானால்
மாற்றம் விரைவில் உண்டாகும்.