செவ்வாய், 21 மார்ச், 2017

ஏன் தோற்றார் இரோம் ஷர்மிளா?



ஏன் தோற்றார் இரோம் ஷர்மிளா?
மணிப்பூரைத் தாண்டியும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் எதிரொலித்தது இந்தத் தேர்தல் முடிவு. உத்தர பிரதேசத்தில் 325/403 தொகுதிகளைப் பெற்று பாஜக அடைந்த வெற்றிக்கு அடுத்து, உள்நாட்டிலும் அதிகம் பேசப்பட்டது இரோம் ஷர்மிளாவின் தோல்விதான்.
வட கிழக்கு மாநிலங்களைக் கடந்த 60 வருடங்களாகத் தொடரும் ராணுவப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) எதிர்த்து 16 ஆண்டு காலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இரோம் ஷர்மிளா, தன்னுடைய உண்ணாவிரத முடிவுக்குப் பின் அரசியலைத் தேர்ந்தெடுத்தார். மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் மாநில முதல்வரை எதிர்த்து அவர் நின்றார். தோல்வி அடைந்ததுகூடத் துயரம் அல்ல; நோட்டாவைவிடக் குறைவாக, வெறும் 90 வாக்குகளில் அவர் அடைந்த தோல்வி, எல்லோரையுமே அதிரவைத்தது. பலரைக் கலங்கவும் செய்தது. தோல்வியின் தொடர்ச்சியாக அரசியல் ஓய்வை அறிவித்திருக்கிறார் ஷர்மிளா.
தோல்வி அல்ல; பழிவாங்கல்!
கடந்த ஆண்டின் நடுப் பகுதி வரை, 16 ஆண்டு காலப் போராட்டத்தில் ஆதிக்க சக்திகளைக் குலைநடுங்க வைத்த ஒரு போராளியால், ஏன் தன் இனத்தைச் சேர்ந்த மக்களின் - அந்தக் கொடுங்கோன்மை சட்டத்தின் பாதிப்புகளை அனுதினமும் அனுபவித்துவரும் மக்களின் - நம்பிக்கையை வென்றெடுக்க முடியவில்லை?
முதலில் இரோம் ஷர்மிளா கடந்த ஜூலையில், 16 வருட உண்ணாநோன்பை முறித்துக்கொண்டபோதே, மாநிலத்தில் பெருவாரியான மக்களின் எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டியிருந்தது. போராட்டத்தை முடித்து, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப அவர் முற்பட்டபோது, அவருடைய அம்மாவும் அண்ணனுமே அவரை வரவேற்கத் தயாராக இல்லை. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஒன்றுகூடி அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
ஏனென்றால், மணிப்பூர் மக்களைப் பொறுத்த அளவில், அவர்களுடைய வரலாற்றுப் போராட்டத்தை உலகம் உற்றுநோக்குவதற்கான மையமாக இருந்தவர் ஷர்மிளா. அவருடைய 16 ஆண்டு காலப் போராட்டமே அதன் மையம். அவருக்குப் புதிதாக உருவான நட்பு, பின் காதலானபோது அதை மக்கள் எதிர்த்தார்கள். அவருடைய காதலர் ‘ஷர்மிளாவின் போராட்டத்தை முறியடிக்க இந்திய அரசு அனுப்பிய உளவாளி’ என்றார்கள் அவர்கள். தனிப்பட்ட ஆசாபாசங்களை ஷர்மிளா கைவிட வேண்டும் என்றார்கள்.
மக்களின் அதிருப்தி
ஷர்மிளா நீண்ட காலம் போராடிவிட்டார். எந்த நல்விளைவையும் அவர் இந்திய அரசிடமிருந்து பெற்றுவிடவில்லை. ‘நானும் ஒரு உயிர்; பெண்; எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கும்தானே!’ என்று முறையிட்டார் அவர். “நான் என் போராட்டத்தை விடவில்லை; போராட்ட வடிவத்தை மட்டும்தான் மாற்றிக்கொள்கிறேன். உண்ணாவிரதத்தைக் கைவிட்டு அரசியலைத் தேர்ந்தெடுக்கிறேன்” என்றார்.
மக்கள் அதை ஏற்கவில்லை. ஏனென்றால், மணிப்பூர் போன்ற ஒரு சின்ன மாநிலத்தின் குரல், சர்வதேச அளவில் ஒலிப்பது ஷர்மிளாவின் உண்ணாவிரதத்தோடு கேள்விக்குறியாகிவிடும் என்று அவர்கள் நினைத்தார்கள். இறுதியில் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தபோது, மக்கள் கடுமையான அதிருப்திக்கு ஆளாகியிருந்தார்கள். தொடர்ந்து, மக்கள் மறுமலர்ச்சி மற்றும் நீதிக்கான கூட்டணி என்ற பெயரில் ஒரு கட்சியையும் துவக்கினார் ஷர்மிளா. ஆஆக, இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் ஆதரவும் அவருக்குக் கிடைத்தது.
இந்தத் தேர்தலின்போது மாநிலத்தின் ஆளும் கட்சியான காங்கிரஸ், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானவை என்று அவர் அறிவித்தபோதிலும், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் மூன்றில் மட்டுமே (ஷர்மிளா, ஹார்வர்டு பட்டதாரியும் கட்சியின் துணை நிறுவனருமான எரெண்ட்ரோ லீச்சோம்பாம், நஜிமா பீபி என்ற ஒரே முஸ்லிம் பெண் வேட்பாளர்) அவரது கட்சி போட்டியிட்டது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஆட்சியில் இருந்த காங்கிரஸும், ஆட்சியைப் பிடிக்க முனைந்த பாஜகவும் இன மோதல்களைக் கொண்டு காய் நகர்த்திக்கொண்டிருந்த நேரத்தில், மாநிலத்தில் கடும் புயலாக உருவெடுத்துள்ள நாகா குழுக்களின் அச்சுறுத்தல்கள், அதனால் அவரது சொந்த இனமான மீட்டி இனத்தவரின் மனங்களில் எழுந்துள்ள அச்ச உணர்வு ஆகியவை தொடர்பில் ஷர்மிளா எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக, முதல்வரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை மட்டுமே மக்கள் முன்வைத்து அவர் போட்டியில் இருந்தார்.
முதிர்ந்த அரசியல் முடிவல்ல!
வட கிழக்குப் பகுதியின் அரசியலைப் பொறுத்தவரையில் தேசியக் கட்சிகளே அங்கு ஆதிக்கம் செலுத்த முடியும். காரணம், அவை நிர்வாகத்துக்கு 90% மத்திய நிதியையே பெருமளவில் நம்பியிருக்கின்றன. சின்ன மாநிலம் என்பதால், ஒவ்வொரு தொகுதியும் முக்கியமானவை. இந்த நிலையில், வெறும் மூன்று தொகுதிகளில் நிற்கும் ஒரு புத்தம் புது கட்சிக்குத் தன் 16 வருடப் போராட்டத்துக்கான அங்கீகாரமாக மக்கள் ஆதரவு தருவார்கள் என்று ஷர்மிளா கணக்கிட்டதே ஒரு முதிர்ந்த அரசியல் முடிவு என்று கருத முடியாது.
மேலும், அரசியல் களம் என்பது தொழில்முறையாக அமைப்பைக் கட்டியெழுப்புவதில் இருக்கிறது. வெறுமனே வேட்பாளராக ஒருவர் நின்றுவிடுவதாலேயே தேர்தலில் வென்றுவிட முடியாது. அப்படியான அமைப்பு பலமோ அல்லது அதை ஈடுசெய்யக்கூடிய பண பலமோ ஷர்மிளாவிடம் இல்லை. மேலதிகம் அவர் ஏற்கெனவே கடுமையான அதிருப்தியையும் சந்தித்திருந்தார்.
அடுத்து, அவர் தேர்ந்தெடுத்த தொகுதி. மூன்று முறை ஆட்சியில் இருக்கும் காங்கிரஸுக்கு எதிராக அதன் முதல்வர் போட்டியிடும் தொகுதியை அவர் தேர்ந்தெடுத்தது மேலும் ஒரு பலவீனம். ஆக, தொழில்முறை அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில், அவர் நகைப்புக்குரியவராகவே பார்க்கப்பட்டார். மக்களைப் பொறுத்தவரையிலோ தான் ஏற்ற சவாலைப் பாதியிலேயே கைவிட்டுவிட்டுப் போனவர் அவர் என்பதாகவே அவர்களின் சிந்தனை இருந்தது. காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் சட்டசபைத் தேர்தல் என்பது ஒருவகையில் உள்ளாட்சித் தேர்தல்போல. நேரடியாக அவர்களுக்குக் கிடைக்கும் சேவைகளைத் தீர்மானிப்பது அது. யாரால் பேரம் பேச முடியுமோ, யார் பலம் படைத்தவரோ அவரே அவர்களுடைய தேர்வு. இந்தப் பின்னணியில்தான் நாம் ஷர்மிளாவின் தோல்வியை அணுக வேண்டும்.
மணிப்பூர் மக்கள் அவரை வெறுக்கவில்லை. ஆனால், தங்களின் தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
Tamil Hindu - 21/3/2107

புதிய அரசியலமைப்பு பரிந்துரைகளில் நாடு பிரிக்கப்படும் அபாயம்

புதிய அரசியலமைப்பு பரிந்துரைகளில் நாடு பிரிக்கப்படும் அபாயம்

தினகரன் 
புதிய அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தினால் சமஷ்டி முறையில் ஒன்பது பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்ட இலங்கையே எஞ்சும். உள்நாட்டு புரட்சிக்கு முகம் கொடுக்க முடியாத அரசாங்கமே இதனூடாக உருவாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டையும் இனத்தையும் அழிக்கும் வகையில் அரசியலமைப்பு மற்றும் சட்ட திருத்தத்தை வரையும் முயற்சியை தோல்வி அடையச் செய்ய வேண்டுமெனவும் அவர் கூறினார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையின் அரசியலமைப்பையும் அரச கட்டமைப்பு, சட்ட அமைப்பையும் மாற்ற அரசு எடுக்கும் முயற்சி எதிர்காலத்தில் சபைக்கு வருவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் முதல் உத்தியோக பூர்வமாகவும் ஊடகங்களின் மூலம் வெளியான தகவல்களில் அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாகியுள்ளது. அரசியலமைப்பு சபையின் ஆறு உப குழுக்களின் உத்தியோக பூர்வ அறிக்கை கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
 பிரதமரின் நல்லிணக்கம் மற்றும் குடியேற்ற நியாயம் தொடர்பான செயலணியின் அறிக்கை ஜனவரியில் வெளியானது GSP+ வரிச் சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய சங்கம் விதித்த 55 நிபந்தனைகள், பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்குப் பதிலாக பிரதமர் பரிந்துரைத்துள்ள புதிய சட்ட வரைவும் ஊடகங்களினூடாக வெளியிடப்பட்டது.
புலிகள் அமைப்பின் மயானங்களை முன்னர் இருந்தவாறு மீண்டும் அமைத்தல் புலிகளின் மாவீரர் தினத்தை கொண்டாட தேவையானவர்களுக்கு அனுமதி வழங்கல், புலி உறுப்பினர்களின் உறவினர்களுக்கு புலி உறுப்பினர்களின் புகைப்படம், புலிகளின் சீருடையுடன் தங்களுடைய வீடுகளில் காட்சிப்படுத்த அனுமதி அளித்தல் என்பவை தொடர்பாக பிரதமரின் நல்லிணக்கம் தொடர்பான செயலணி பரிந்துரை செய்துள்ளது. ஆனால் பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் நிகழ்ச்சிகளோ, அல்லது அவர்கள் பெற்ற வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சிகளோ அவ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வில்லை.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத புலி சந்தேக நபர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் குற்றம் செய்ததாக சந்தேகப்படும் அரச ஆயுதப் படை உறுப்பினர்களை கைதுசெய்ய வேண்டுமெனவும். பிரதமரின் நல்லிணக்கம் தொடர்பான செயலணி கூறுகின்றது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த இவை முக்கியமான காரணிகள் என அவர்கள் கூறுகின்றார்கள்.
2015 ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆலோசனைப்படி யுத்த குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் ஆனால் யுத்த நீதிமன்றத்துக்கு முன்வைக்க சாட்சிகள் இல்லாத இராணுவ வீர்ரகளை நிர்வாக நடவடிக்கை மூலம் சேவையிலிருந்து நீக்க வேண்டும்.
ஆனால் தீவிரவாதத்தை தடுக்கும் சட்டத்துக்கு பதிலாக பிரதமர் வழங்கியிருக்கும் சட்டத்தின்படி பயங்கரவாத சந்தேக நபருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லையென்றால் மன்னிப்பு கேட்டல், தவறுக்கு வருத்தம் தெரிவித்தல், புனர்வாழ்வு பெறுதல், எதிர்காலத்தில் குற்றம் செய்ய மாட்டோமென உறுதியளித்தல், சமூக சேவையில் ஈடுபடல், போன்ற நிபந்தனைகளின் கீழ் சட்ட மா அதிபருக்கோ அல்லது உயர் நீதிமன்றத்துக்கோ அப் பயங்கரவாதிக்கு எதிராகவுள்ள சட்ட நடவடிக்கையை இடைநிறுத்த முடியும்.
இலங்கையை மத சார்பற்ற நாடாக மாற்றுவது தொடர்பான யோசனையை ஆராயுமாறு பிரதமரின் நல்லிணக்கம் தொடர்பான செயலணி பரிந்துரைத்துள்ளது. புத்த மதத்தின் முக்கியத்துவத்தை இல்லாது செய்ய மாட்டோம் எனக் கூறினாலும் இந்த முழு திட்டத்திலும் அதுவும் ஒரு பகுதியென்பது ஆவணங்கள் மூலம் தெரிகின்றது.
ஒன்றையாட்சி அரசாங்கத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக அரசியலமைப்பில் இணைந்த அதிகார பட்டியலை ஒழிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது மத்திய அரசாங்கத்துக்கோ மாகாண அமைப்புகளுக்கோ உட்படாத அனைத்து அதிகாரங்களையும் மாகாண அமைப்புகளுக்கு வழங்க வேண்டுமென மத்திய மற்றும் எல்லைகள் தொடர்பான உப கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. அது மாத்திரமல்ல மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களை மாகாண அமைப்பின் கீழ் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது படிப்படியாக ஒற்றையாட்சி அரசாங்கத்தை அழிக்கும் நடவடிக்கையாக தெரிகின்றது.
உள்நாட்டு வெளிநாட்டு ஈழம் வாதிகள் சில வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து 2015 ஜனாதிபதி தேர்தலின் முடிவை சிதைத்தது நான்கு தசாப்தங்களாக பயங்கரவாதம் மூலம் பெற்றுக்கொள்ள முடியாததை அவர்களுக்கு வழங்க தயாராக உள்ள அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்காகும். அரசாங்கத்திலுள்ள அனைத்து ஸ்ரீல சு கட்சி உறப்பினர்களுக்கும், ஐ. தே. க. உறுப்பினர்களுக்கும் நான் இங்கு குறிப்பிட்டுள்ள ஐந்து கடிதங்களையும் வாசிக்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
இவ்வாறான தேசத்துரோக நடவடிக்கையில் இணைந்து நாட்டையும், இனத்தையும் காட்டிக் கொடுப்பதா இல்லையா என கட்சி பேதத்தை மறந்து அனைத்து உறுப்பினர்களும் தனித் தனியாக எடுக்க வேண்டிய முடிவாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் நல்லாட்சியாளர்கள் நாட்டுக்கு அளித்த அரசியலமைப்பு வாக்குறுதி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழித்தல், தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரல் என்னும் இரண்டு விடயங்களாகும்.