செவ்வாய், 9 மே, 2017

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்குக் காரணம்

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்குக் காரணம்… ஒரு முனிவர் தந்த‌ சாபமே! – அரியதோர் ஆன்மீகத் தகவல்

Menon Balasubramanian
பாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் விஷ்ணு பகவான் அகிலத்தில் உள்ள‍ மக்க‍ளைக் காக்க‍வும், தீயவர்களை
அழிக்க‍வும் எடுத்த‍துதான் 10 அவதாரங்கள் என்பது நாமறிந்த செய்தியே! ஆனால் விஷ்ணு, இந்த 10 அவதாரங்களையும் எடுக்க‍க் காரணமாக இருந்தது ஒரு முனிவரின் சாபம்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
பலநூறு ஆண்டுகளுக்கு முன், சூரிய வம்சத்தைச் சார்ந்த அம்பாரிஷி என்ற மன்னன் ஆட்சியில் இருந்தான். அவன் ஸ்ரீமன் நாராயணன் என்கின்ற விஷ்ணுவின் பக்தன். பெளர்ணமியின் பதினோறாவது தினங்களில் கடுமையான ஏகாதசி விரதம் அனுஷ்டித்து வந்தவன். அன்று முழுவதும் ஹரியைக் குறித்த பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு பொழுதைக் கழித்தப்பின் அடுத்த நாளான துவாதசி அன்று விரதத்தை முடித்துக் கொள்வான். அந்தக் கடுமையான விரதமுறையை எந்தக் காரணம் கொண்டும் மாற்றிக் கொண்டது இல்லை.
அப்படி இருக்கையில் ஒரு முறை துவாதசி தினத்தன்று அம்பாரிஷின் அரண்மனைக்கு முனிவர்களில் மாமுனியான துர்வாசர் வந்திருந்தார். அவர் சற்று முன்கோபக்காரர். அன்று மன்னன் ஏகாதசி விரதத்தில் இருந்தான். மாமுனிவரைக் கண்டவன் பெரும் மகிழ்ச்சி அடைந்து அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தான். அர்க்கியபாத்யம் கொடுத்ததுடன் (கை கால்களை அலம்பிக்கொள்ள தண்ணீர் தருவது) மாமுனிவரிடம் தான் ஏகாதசி விரதத்தை துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்திற்குமுன் முடிக்க வேண்டி இருப்பதால் விரைவாக காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு வந்து விடுமாறு அவரிடம் மிகவும் பணிவாக வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோளை ஏற்ற மாமுனிவரும் நதிக் கரைக்குசென்று தன்னுடைய ஆசார அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பி வரத்துவங்கினார் . ஆனால் துரதிஷ்டவசமாக அனுஷ்டானங்களை முடித்துக்கொள்ள நேரம் ஆகிவிட்டது. துவாதசி காலநேரம் முடிந்துவிடும் என்பதை மறந்துவிட்டார். குறிப்பிட்ட நேரத்திற்குள் முனிவரும் வரவில்லை என்பதைக் கண்ட அரசன் தவிக்கலானான்.
தன்னுடைய வாழ்க்கையில் அத்தனைக் காலமும் துவாதசி காலநேரம் முடிவதற்கு முன் தவறாமல் தன் விரதத்தை முடித்துக்கொண்டு வந்திருந்தான். சோதனையாக அன்று மாமுனிவர் வரவில்லை. வந்த விருந்தாளி சாப்பிடுவதற்கு முன் தான் சாப்பிடுவது தவறு என்பதால் மன்னன் தவித்தான். அதே சமயத்தில் விரதத்தையும் துவாதசி காலநேரம் கடக்கும்முன் முடிக்கவேண்டும். மாமுனிவரையும் அவமானப்படுத்துவது போல அவர் வரும் முன்னர் சாப்பிடக் கூடாது. என்ன செய்வது எனப் புரியாமல் குழம்பி நின்றவன் யோசனை செய்தான். என்ன செய்வது என யோசித்தவன் தண்ணீர் அருந்துவது உணவு அருந்தியதற்கு சமானம் அல்ல என்பதினால் சிறிது தண்ணீர் மட்டும் பருகிவிட்டு விரதத்தை முடித்துக் கொண்டான். வேறு வழி இல்லை, தணிணீர்கூட அருந்தாமல் இருந்தால் விரதம் முடிந்து போனதாகக் கருத முடியாது என்பதினால் அதைச் செய்தபின் முனிவர் வரும் வரை காத்திருந்தான்.
தனது காலைக் கடமைகளை முடித்துக்கொண்டு துர்வாச முனிவர் அரண்மனைக்கு வந்தார். அங்கு மன்னன் விரதத்தைமுடித்துக் கொண்டு விட்டதைப் பார்த்தார். தன்னுடைய முக்காலமும் உணரும் சக்தியினால் நடந்து முடிந்திருந்த அனைத்தையும் அறிந்துகொண்டார். துவாதசி காலநேரம் முடியும்முன் தண்ணீர் அருந்தி விரதத்தை முடித்துக்கொண்டது உணவு அருந்தியதற்கு இணை ஆகாது என்ற சாஸ்திரம் அவருக்கும் நன்கே தெரியும். ஆனாலும் முன்கோபம் அவரை மீறிக்கொண்டது. மன்னனை ‘நான் வரும் முன்னரே உணவை அருந்தி பாவம் செய்துவிட்டாய்’ எனக் கோபித்துக்கொண்டு சாபம் கொடுக்கத் தயார் ஆனார்; மன்னன் பார்த்தான். அந்த சாபத்தினால் ஏற்பட இருக்கும் அழிவை நாராயணன் மூலமே தடுக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்தான். ஆகவே மாமுனிவர் சாபம் தரத்துவங்கும் முன்னரே நாராயணனைத் துதித்து தியானம் செய்யத் துவங்கினார். அவர் தியானம் செய்யத் துவங்கியதுமே நாராயணன் அவர்களுக்கு இடையில் வந்துநின்று கொண்டுவிட்டார். துர்வாச முனிவர் சாபம் தரும்முன் தன்னைக் காப்பாற்றுமாறு விஷ்ணுவின் கால்களைப் பிடித்துக் கொண்டு அம்பாரிச மன்னன் கெஞ்சினான். அதனால் துர்வாசமுனிவரை நோக்கி ஸ்ரீமன் நாராயணண் கூறினார் ‘மகரிஷியே இந்த அம்பாரிச மன்னன் என்னுடைய உண்மையான பக்தன். நீ எந்த சாபத்தைக் கொடுத்தாலும் அது அவனிடம் போய்ச் சேராது , என்னையே அது வந்தடையும். ஏனெனில் என்னிடம் தஞ்சம் அடைந்து விட்டவர்களைக் காப்பது என் கடமை. நீங்கள் என்ன சாபம் தந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன்’
அதைக்கேட்ட துர்வாச முனிவருக்குத் தெரிந்தது உலகத்தின் நன்மையைக் கருதித்தான் இப்படி ஒரு நிலைமை வந்திருக்கின்றது என்று. பூமியில் உள்ள மக்களின் நன்மையைக் கருதித்தான் கடவுள் பூமியில் அவதரிப்பார் என்பது தெரிந்திருந்ததாலும், ஏதோ ஒரு காரணத்திற்காக நாடகம் நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்டதினாலும் தன்னைப் போன்ற மற்ற முனிவர்களின் நலனை மனதில் வைத்துக்கொண்டு ஸ்ரீமன் நாராயணனுக்கு தான்கொடுக்க உள்ள சாபமும் நன்மைக்காகவே இருக்கட்டும் என எண்ணிய துர்வாசர் கூறினார் ‘சரி, நான் கொடுக்க உள்ள சாபமும் ஸ்ரீஹரி ஆகிய உங்கள் மீதே விழட்டும். அதன்படி நீங்கள் பூமியில் பல பிறவிகள் எடுக்கவேண்டும்’ அப்படி பொதுநன்மையை மனதில் கொண்டவண்ணம் துர்வாசமுனிவர் கொடுத்த சாபத்தின் விளைவாகவே விஷ்ணு பூமியில் பல அவதாரங்களை எடுக்க வேண்டி இருந்தது.