சனி, 26 அக்டோபர், 2019

எந்த இனத்துக்கும் அநீதி இழைப்பதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.


எமது நாட்டின் இனங்களுக்கிடையில் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு இனத்திற்கும் அநீதி இழைக்கப்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. பாதுகாப்பு என்பது சகலருக்கும் ஒருவிதமானதாகத் தான் அமையும் என தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேசிய பாதுகாப்பு என்ற எனது கருத்து ஒரு சமுகத்தை மட்டும் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் ஒரு திட்டமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜா-எல நகரில் நேற்று முன்தினம் இரவு (24) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச,
இந்நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜையும் அரசியலமைப்பு ரீதியில் ஒரு விதமாகத்தான் உள்வாங்கப்படுகிறார்கள். எவருக்கும் தனியான சிறப்பு உரிமை எதுவும் கிடையாது. நான் அனைவரையும் இலங்கை பிரஜையாகவே பார்க்கின்றேன். இன ரீதியாகவோ மத ரீதியாகவோ யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பார்க்க விரும்பவில்லை.
எங்களுக்குத் தேவை சுவீட்சமான ஒரு நாட்டை உருவாக்குவதே. உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இரண்டாம் தரமாக வாழ்வதற்கு நாம் விரும்பவில்லை.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் வறுமை கோட்டிலுள்ள மக்களை எட்டவில்லை. அவர்கள் தொடர்ந்தும் வறுமை கோட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பொருளாதார ஆய்வு முடிவுகளின்படி எமது நாட்டில் வளமான வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு அவசியமான வருமானத்தை நாட்டு மக்கள் தொகையில் 45சதவீதமானோர் பெற்றுக்கொள்வதில்லை எனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பாலும் வரி அதிகரிப்பாலும் பாரிய சுமையை மக்கள் சுமந்தி கொண்டிருக்கும் நிலையில் நான் பதவியேற்றதும் மிக குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன் அதனை சாதாரண மக்களும் உணரக் கூடிய நிலையை உருவாக்குவேன். எமது மக்கள் இன்னொருவர் கைகளில் தங்கி நிற்கும் நிலை இருக்கக் கூடாது. எல்லோருக்கும் சமமான சகல உரிமைகளும் கிட்டவேண்டும்.
எதிர்காலத்தில் நாட்டின் நிர்வாகம் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்போது நாட்டு மக்களை முன்னிறுத்தி சிந்தித்து வரிச் சுமையிலிருந்து விடுபடும் ஒரு நிலையை ஏற்படுத்துவேன். எம்மிடம் நிதி இல்லையென்று எவரும் கூறமுடியாது உண்மையிலேயே போதுமான அளவிற்கு நிதி வசதியுண்டு. ஆனால் ஜனாதிபதி என்ற கதிரைக்கு சென்ற உடன் அரச திறைசேரியை குடும்பத்தின் உடமையாக்கிக் கொள்ளும் கலாசாரமொன்றே உருவாகியிருந்தது. நாட்டின் அரச சொத்துக்கள் அனைத்தும் பொது மக்களுக்கே சொந்தமானது. அரசியல் வாதிகளுக்குச் சொந்தமானதல்ல. எனவே நாம் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யவோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தவோ மாட்டோம். நாம் நாட்டை ஆட்சி செய்வோர்களல்ல. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மக்களால் குறிப்பிட்ட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற நாட்டுக்கான சேவையாளர் மட்டுமே. மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொண்டு சேவை செய்வதே என் மீதான கடப்பாடாகும்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் வாதிகளுக்கு புதிய வாகனங்கள், வீடுகள் வழங்கப்படும். ஆனால் நான் ஜனாதிபதியானதன் பின்னர் எக்காரணம் கொண்டும் வெளிநாடுகளிலிருந்து எனது பாவனைக்காக குண்டு துளைக்காத வாகனங்களை பெற்றுக் கொள்ள மாட்டேன். அரசியல் வாதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு பாராளுமன்றத்தினூடாக நிதி ஒதுக்கீடு செய்யமாட்டேன். இந்த பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கம் அமைப்பதென்பது உண்மையிலேயே மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களுக்கும் சேவையாற்றி நாட்டுக்கும் சேவையாற்றுவதேயாகும். இதனை உணர்ந்த எவரும் என்னோடு இணைந்து செயற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றி:எம்.ஏ.எம். நிலாம்,தினகரன் .

வியப்பூட்டும் வாக்குறுதிகள்

வியப்பூட்டும் வாக்குறுதிகள்

தேர்தல் திருவிழாக் காட்சிகளும் தலைவர்களின் கதைகளும் கட்சிகளின் அறிக்கைகளும் சிரிப்பைத் தருகின்றன.காலங்கள் மாறினாலும் இந்தக் காட்சிகள் மாறவில்லை.அதாவது எதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே பொருளாகும்.
இதனால்தான் இலங்கையில் இனப்பிரச்சினை உள்ளிட்ட எந்தப் பிரச்சினையும் தீர்க்க முடியாமலிருக்கின்றன. எளிய உண்மை என்னவென்றால், இலங்கையின் இனப்பிரச்சினை தொடக்கம் பொருளாதாரப் பிரச்சினை வரையில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் மேலும் வளர்ந்து முள்ளாகச் சடைத்துக் கொண்டேயிருக்கின்றன. இதைத் தீர்ப்பதற்கு ஆத்ம சுத்தமான முறையில் முயற்சிகளை எடுத்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது.
ஆனாலும் அரசியல்வாதிகள், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் திரும்பத் திரும்ப நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளோடு வருகிறார்கள். “இதைப் பற்றி மக்கள் என்ன சிந்திப்பார்களோ” என்று எந்தவிதமான அக்கறையோ கூச்சமோ இல்லாமல் மறுபடியும் மறுபடியும் அதே வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டு நமக்கு முன்னே வருகிறார்கள் என்றால், இப்படி வரக்கூடிய துணிச்சலை இவர்களுக்குக் கொடுத்தது வேறு யாருமல்ல. நாம்தானே!
எளியதொரு உதாரணம், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்று எத்தனை தடவை சொல்லி விட்டன இக்கட்சிகள்? இப்படிச் சொன்னதற்கு அமைய, வாக்குறுதிகளை வழங்கியதற்கு ஏற்ப இவை விசுவாசமாகப் பின்னர் செயற்பட்டுள்ளனவா? அப்படிச் செயற்படவில்லை என்றால் இவற்றை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? 
இன்றுள்ள தலைவர்கள் எத்தனையோ தடவை இதைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஏராளம் வாக்குறுதிகளை நமக்குத் தந்திருக்கிறார்கள். இவர்கள்தான் ஐம்பது ஆண்டுகளாக (அரை நூற்றாண்டு காலமாக) மாறி மாறி அரசியல் அதிகாரத்திலிருக்கிறார்கள். தீர்மானிக்கும் நிலையிலிருக்கிறார்கள்.  இவர்களால் இந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லை என்றால் இதை நாம் எப்படிப் பார்ப்பது? எப்படிப் புரிந்து கொள்வது? இனியும் இதைப் பற்றி பேசுவதற்கான தகுதி இவர்களுக்கு உண்டா? இனியும் அரசியலில் இவர்களை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? 
ஏனெனில் தங்களுடைய கடந்த காலச் செயற்பாடுகளின் மூலமாக தங்களைத் தவறானவர்கள் என்று இவர்களே நிரூபித்திருக்கிறார்கள். தங்களின் பலவீனங்களையும் தகுதியின்மையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கடந்த காலத்தில் இவர்கள் இந்த நாட்டு மக்களாக எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எடுத்துப் படித்துப் பார்த்தால் புரியும். 
காலமாற்றங்கள் என்பது சமூக வளர்ச்சியினாலேயே அடையாளப்படுத்தப்படும். சமூக வளர்ச்சி என்பது ஒரு தீப்பொறியைப் போன்றது. அது நிச்சயமாக ஒரு போது ஒளிகொண்டெழும். அதுவரையில் இந்த மாதிரியான சீரழிந்த நிலையே நீடிக்கும். அந்த நிலை இந்த மாதிரியான அரசியல்வாதிகளுக்கும் தவறான அரசியலுக்கும் வாய்ப்பாகும்.
இதை நாம் மேலும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய பிரச்சினைகள் எதுவும் தீராதிருப்பதற்குக் காரணம் நாமும்தான் என்ற புரிதல் (பிரக்ஞை) நமக்கு வேண்டும். ஆனால், இதைப்பற்றி நாம் கவலைப்படுவதே கிடையாது.
ஆனாலும் அவ்வப்போது இதையெல்லாம் கண்டு கோபப்படுகிறோம். சலித்துப் பேசுகிறோம். பிறகு வேறு வழியில்லை என்று சொல்லிக் கொண்டு இவர்களுக்கே வாக்களித்து விட்டு வருகிறோம். இது நம்முடைய இயலாமையின் வெளிப்பாடா? அல்லது அறியாமையின் விளைவா? இதிலே சிங்களத் தலைவர்கள்தான் ஏதோ தவறானவர்கள், வாக்குறுதிகளைச் செயற்படுத்தாதவர்கள் என்றில்லை.  தமிழ்த் தலைவர்களும் தமிழ்க் கட்சிகளும் இதிலே சேர்த்தி.
2009க்குப் பிறகு வருகின்ற எல்லாத் தேர்தல்களிலும் போர் வெற்றி அரசியல் முதலீடாக்கப்படுகிறது.
விவசாயிகளின் கடன்களை ரத்துச் செய்வேன் என்கிறார் கோட்டாபய. விவசாயிகளுக்கு வேண்டியளவுக்கு மானியங்களை வழங்குவேன் என்கிறார் சஜித். நாட்டின் பாதுகாப்புக் கவசமாக இருப்பேன் என்கிறார் கோட்டாபய. பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க மாட்டேன் என்கிறார் சஜித். புதிய பொருளாதாரத் திட்டங்களை உருவாக்குவேன் என்கிறார் கோட்டாபய. சம்பளத்தையே வாங்க மாட்டேன் என்கிறார் சஜித்.
இப்படி ஆளாளுக்கு மாறி மாறி ஏராளம் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது இந்த ஜனாபதிபதிப் பதவி என்பது ஏதோ கடவுளுக்கு நிகரானது. சர்வ வல்லமை பொருந்தியது. எல்லா நோய்களுக்கும் நிவாரமளிக்கக் கூடிய சர்வரோக நிவாரணி போலவே படுகிறது.   இதொன்றும் புதிதல்ல. இதற்கு முன்பிருந்தவர்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்களில்லை இவர்களும் என்பதையே இவர்களுடைய கடந்த காலமும் எங்களுக்கு நிரூபித்திருக்கிறது.
 வந்தாலும் வந்தது ஜனாதிபதித் தேர்தல். இந்தத் தேர்தலையொட்டித் தினமும் ஏராளம் ஏராளம் வேடிக்கைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் இருபத்தைந்து நாட்கள் இருக்கின்றன. அதற்கிடையில் இன்னுமின்னும் ஏராளம் காட்சிகளைப் பார்க்கலாம். ஆனால், இந்தக் காட்சிகள் ஒன்றும் முன்னரைப்போல இலகுவாகக் கடந்து செல்லக் கூடியனவல்ல. அல்லது இலகுவில் மறந்து விடக் கூடியனவாகவும் இருக்காது.
நன்றி :கருணாகரன்.தினகரன் .

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversary
இலங்கை அரசியல் வரலாற்றில் 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி மறக்க முடியாத நாளாகும். ஏனெனில் அன்றைய தினம் தான் அரசியல் யாப்புக்கு முரணாக புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டார். சூழ்ச்சிகரமான முறையில் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளும் வரையான செயற்பாடுகள் இந்நாட்டு வரலாற்றில் கரும்புள்ளியாகப் பதிவாகியுள்ளது. அதனால் சட்ட ரீதியான பிரதமர் தலைமையிலான அரசாங்கம் போலி பிரதமர் தலைமையிலான கும்பலுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்தது.
ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversary
இதேவேளை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருப்பதை வாக்கெடுப்பின் மூலம் உறுதிப்படுத்த சபாநாயகர் கரு ஜயசூரிய நடவடிக்கை எடுத்தார். என்றாலும் சூழ்ச்சிக்காரர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனினும் அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தைக் கருத்தில் கொள்ளாது பாராளுமன்றத்தைக் கலைக்கும் முயற்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பு பாராளுமன்றம் கலைக்கப்படுவதைத் தவிர்த்தது.
அதேநேரம் பிரதமர் தலைமையிலான பாராளுமன்ற குழு என்றும் சிவில் செயற்பாட்டாளர்களது வழக்கு தீர்ப்பின் படி போலி அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது.
என்றாலும் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு இவ்விருண்ட கரும் புள்ளியை இந்நாட்டு வரலாற்றால் மறக்க முடியாது.
அதனால் அது தொடர்பில் திரும்பி பார்ப்பது பயன்மிக்கதாக இருக்கும்.
இவ்வாறான ஒழுக்க மீறல்களிலிருந்து நாட்டை கட்டியெழுப்பும் விதம் குறித்து சிந்திக்க வேண்டும்
சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன்
ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryஇலங்கையானது சிறந்த ஜனநாயகத்தை முன்னெடுக்கும் நாடொன்று அல்ல. இது மிகவும் பின்னடைந்த நாடாகும். கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வை மிகவும் கவலைக்குரிய கெட்ட நிகழ்வாகவே நான் நோக்குகின்றேன். இது நாட்டு ஜனாதிபதி இந்நாட்டு அரசியலமைப்பை மீறிய ஒரு சந்தர்ப்பமாகும். இதற்கு முன்னரும் இந்நாட்டு ஜனாதிபதிகள் அரசியலமைப்பை மீறியுள்ளனர். நீதிமன்றமும் அரசியலமைப்பை மீறியுள்ளன. பாராளுமன்றமும் அரசியலமைப்பை மீறி இருக்கின்றன. ஆனால் உலகில் நன்நடத்தை மிக்க நாடுகள் தம் அரசியலமைப்பை மிக உயர்வான  ஒன்றாகவே கருதி செயற்படுகின்றன. எனினும் அரசியலமைப்பு மீறப்படுவதை கூட்டு மனித படுகொலையை விடவும் பயங்கரமான ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஆனால் இலங்கையில் அரசியலமைப்பை மீறும் செயல் அன்றாடம் இடம்பெற்ற போதிலும் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்காத சாதாரண விடயமாகவே உள்ளது. இந்நாட்டு அரசியல்வாதிகளும் சமூகத்தினரும் தான் இந்நாட்டை இந்நிலைக்கு உள்ளாக்கின்றனர். உதாரணமாக அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மிக முக்கிய விடயம் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாற முடியாது என்பதாகும். அவ்வாறு கட்சி மாறினால் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதாகும். எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அதனை மீறினார்.  அதற்கு முன்னர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்திலும் அரசியலமைப்பை மீறிய செயற்பாடுகள் இடம்பெற்றன.
அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பிரதம நீதியரசர் வெளியேற்றப்பட்ட விதம் முற்றிலும் அரசியலமைப்புக்கு விரோதமானது. இவ்வாறான நெருக்கடிகள் உருவாவது தொடர்பிலும் ஜனநாயகம் தொடர்பிலும் மக்கள் மத்தியில் காணப்படும் குறைந்த அறிவும் புரிந்துணர்வின்மையுமே இவற்றுக்கு காரணமாக அமைகின்றன. இவ்வாறான நிலைமைக்கு நாடு உள்ளாக அவ்வாறான ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் மக்களும் காரணகர்த்தாக்களாக உள்ளனர். அதனால் இவ்வாறான நற்பண்புகளற்ற நிலைமைகள் நாட்டில் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.
சட்டம் பிழையாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக மக்கள் உள்ளனர் என்பது வெளிப்பட்டது
பேராசியர் சந்ரகுப்த தேனுவர
ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryநாம் ஜனநாயக சூழ்நிலையை உருவாக்கி சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்கினோம். என்றாலும் அரசாங்கத்தின் தலைவரே அரசியலமைப்பை மீறி யாப்புக்கு எதிராக செயற்பட்டு பிரதமரை நீக்கினார். அவர் மக்களின் வாக்கின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதமராவார். இதனை அரசியல் கலாசாரம் எதிர்கொள்ளும் சவாலாகவே நான் பார்க்கின்றேன். அதேநேரம் இது தொடர்பில் நியாயத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற தேவை மக்களிடம் எவ்வளவு தூரம் இருந்தது என்பதையும் எம்மால் காண முடிந்தது. இது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் பலவும் நடவடிக்கைகளை முன்னெடுத்தன. அவ்வாறு செயற்பட்டதன் விளைவாக நீதித்துறையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது. அரசியலமைப்பின் பாதுகாப்பை உச்ச நீதிமன்றம் நிறைவேற்றியது. அத்தோடு சுயாதீன நீதித்துறையையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் விடயத்தைப் பாராளுமன்றம் மேற்கொண்டது.
இதன் பயனாக முதற்தடவையாக கடமையாற்ற தடை விதிக்கப்பட்ட பிரதமராகவும் பாராளுமன்ற குழுவாகவும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் உள்ளாகினர். இது சட்டத்தை பிழையாகப் பாவிப்பதற்கு எதிராக மக்கள் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தியது.  சட்டத்திற்காகப் போராடிய தரப்பினர் தமது பலத்தை உரசிப்பார்க்க இதனூடாக வாய்ப்பு கிடைத்தது. அது வெற்றிக்கும் இட்டுச்சென்றது. இந்நிகழ்வுகளை ஒரு வருடம் முடிந்துள்ள இந்நிலையில் திரும்பிப் பார்க்கும் போது அவ்வாறான துரதிஷ்டகர நிகழ்வுகளும் மோசமான அனுபவங்களும் நாட்டில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் நினைவுக்கு வருவதைப் போன்று அதற்கு எதிராக மக்கள் எழுச்சி பெற்றமை மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.
இவ்வாறான சூழ்ச்சிகள் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது
பேராசிரியர் ஜயதேவ உயங்கொட
ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryஓக்டோபர் 26ஆம் திகதி இடம் பெற்ற நிகழ்வோடு நாடு சீரழிந்தது. அந்த 52நாட்களில் நாடே சீரழிவு நிலைமையை அடைந்தது. என்றாலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்போடு மீண்டும் ஜனநாயகம் வெற்றி பெற்றது. அதன் ஊடாக தோற்றம் பெற்ற ஜனநாயக அரசியல் விவாதத்தை உரிய முறையில் பாவிப்பதற்கு ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்ட தரப்பினரால் வெற்றி பெற முடியாமல் போனது. எனினும் இலங்கையில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டது. அச்சூழ்ச்சியினால் ஏற்பட்ட பின்னடைவு நிலையோடு ஜனநாயகத்திலும் பின்னடைவைக் காண முடிந்தது. அதனை மீண்டும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அவதானம் தற்போதைய ஆளும் தரப்பினரிடம் குறைவடைந்துள்ளது. ஜனநாயகத்தில் பின்னடைவைப் போன்று அதிகாரிகள் வாதமும் மேலெழுந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்போடு நீதித்துறை அரசியலமைப்பை பாதுகாத்ததாக எமக்கு விளங்கியது. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறலாம். எவர் வென்றாலும் தோற்றாலும் அரசியலமைப்பில் காணப்படும் குறைபாடுகளைப் பாவித்து பல்வேறு தரப்பினரும் இவ்வாறான சூழ்ச்சிகளில் மீண்டும் மீண்டும் ஈடுபட முடியும். அதனால் எதிர்வரும் தேர்தலில் எவர் வென்றாலும் தோற்றாலும் அரசியலமைப்பிலுள்ள குறைபாடுகள் காரணமாக மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படலாம்.
ஆகவே இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாதிருக்கக்கூடிய வகையில் யாப்பில் சீரமைப்பை ஆட்சிக்கு வருபவர் முன்னெடுப்பாராயின் அதுவே நல்லது.
சுதந்திரத்திற்கு பின் ஜனநாயகத்தில் இருண்ட 52 நாட்கள்
புரவெசி பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்கொட
ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryஎமது நாட்டில் இடம்பெறவிருந்த பெரும் பேரழிவிலிருந்து நாட்டைப் பாதுகாத்த நிகழ்வுகளாக ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின்னரான நிகழ்வுகளை நான் நோக்குகின்றேன். என்றாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நாம், நாடு என்ற வகையில் இன்னும் முகம் கொடுக்கின்றோம். அந்த 52நாட்களிலும் நாடு சென்ற இருண்ட பாதை எவ்வாறானதென்று குறிப்பிடுவதாயின் அது விலைமதிக்க முடியாத நஷ்டமாகும். இந்த சூழ்ச்சியின் பின்னர் அரச கட்டமைப்பு செயலிழந்தது. அதன் ஊடாக நாடு சீரழிந்தது. பொருளாதார ரீதியில் நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது. இந்நாட்டில் ஏற்படுத்தப்பட்டு வந்த ஜனநாயக அரசியல் முறைமை முழுமையாக துஷ்பிரயோகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர் இலங்கை அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற பயங்கர அரசியமைப்பு சூழச்சியாகவே இதனை நான் பார்க்கின்றேன்.
1963இல் இவ்வாறான அரச விரோத சூழ்ச்சியொன்று முன்னெடுக்க முயற்சிக்கப்பட்ட போதிலும் அதனை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட தரப்பினர் கைது செய்யப்பட்டதால் அந்த சூழ்ச்சி தவிர்க்கப்பட்டது. அதன் விளைவாக எவ்வித பின் விளைவுகளும் ஏற்படவில்லை. ஆனால் இந்த சூழ்ச்சியின் ஊடாக ஜனநாயகத்தில் பெரும் கறைபடிந்தது. அத்தோடு நாட்டின் பொருளாதாரமும் பின்னடைவுக்கு உள்ளானது. சுதந்திரத்தின் பின்னரான ஜனநாயகம் ஏழு தசாப்தங்களை கடந்துள்ள போதிலும் இந்த 52நாட்களையும் நான் இருண்ட நாட்களாகவே நோக்குகின்றேன். நீதிமன்றம் அரசியலமைப்பை பாதுகாத்தது. அதன் மூலம் சூழ்ச்சியை தோற்கடிக்க முடிந்தது. என்றாலும் அதன் பின்னர் இதிலிருந்து மீட்சி பெற முடியாதுள்ளது. இவ்வாறான ஒன்றை ஜனநாயக நாடொன்றில் மேற்கொண்டால் அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அது இங்கு இடம்பெறவில்லை. அது ஒரு குறைபாடாகும். 
நீதித்துறை தொடர்பான நம்பிக்கை உறுதியானது
ஊடகவியலாளர் கபில எம். கமகே
ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryஇந்த சம்பவத்தை அசிங்கமான அரசியல் காரணமாக ஏற்பட்டதாகவே நான் பார்க்கின்றேன். பொதுவாக அரசாங்கம் ஒன்றின் அதிகாரம் சட்டப்படி ஜனநாயக முறையில் தான் மாற்றப்படும். ஆனால் இங்கு வேறுவிதமாகவே ஆட்சி மாற்றம் இடம்பெற்றது. அரசியல்வாதிகளுக்கு சட்டம் குறித்த தெளிவு கிடையாது. அந்த தெளிவின்மை காரணமாக அவர்கள் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கின்றனர். என்றாலும் நீதிமன்றம் அவர்களுக்கு சட்டம் இது தான் என தெளிவுபடுத்தியது. நீதித்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீனத்தன்மையின் பிரதிபலனாவே நான் அத்தீர்ப்பை பார்க்கின்றேன். நீதித்துறை சுயாதீனத்தன்மையை நாம் பாராட்ட வேண்டும். ஜனநாயக நாடொன்றில் அதனை மிகவும் சிறந்த தீர்மானமாக நோக்க முடியும். அத்தீர்ப்பின் ஊடாக நீதித்துறை தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அது ஜனநாயக ரீதியிலான தீர்ப்பாகும். அதனால் இவ்வாறான விடயங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறாதிருக்க முழு சமூகமும் பொறுப்பாக இருக்க வேண்டும் என நான் கருதுகின்றேன்.
நன்றி :முயலகன்   தினகரன்