வெள்ளி, 24 ஜூலை, 2009

துன்பம் வந்தபோது ....









ஐயோ என்பார்கள் சிலர் --அந்த அவனா என்றார்கள் பலர்
சிவனே என்றும் சிலர் --இன்னும் சிந்திய கண்ணீருடன் பலர்

வந்தது துன்பம் எனக்கு--அதற்கு
வருந்தியவர்கள் ஆயிரம் கணக்கு
வாட்டியவர்களோ பல ஆயிரம் இருக்கு-புரியாத
விந்தை உலகம் இன்னும் எதற்கு

சொந்தம் நான்என்றார்கள்-- எனக்கு
சொகுசாக இருந்தபோது வந்தவர்கள் பஞ்சமில்லை பேச்சில் உறவுக்கு--உதை
பந்தாய் போனது என்பெயர் பேச்சுக்கு

உயர்ந்த இடத்தில் இருந்தபோது--இந்த
உலகம் எந்தன கைகளுக்குள்
உண்மையை யான் உணர்ந்தபோது--ஐயோ
உருண்டுவிட்டேன் உலகத்தின் காலுக்குள்

வேசங்கள் தெரிந்ததும் நெஞ்சுக்குள்--உலக
மோசங்கள் புரிந்ததும் அன்றைக்குள்
வேதங்கள் கூறியது வாழ்க்கைக்கு ---எரியும்
வேதனைகள் யாவும் புதிய பாதைக்கு

ஏணியாக இருந்தபோது எனக்கு –கொஞ்சமும்
ஏறவில்லை இந்த இளவடித்த ஞானம்
ஞானியாக நான் வந்தபோது இன்று –ஏற
ஏணியில்லை எங்கு போவது நானும்

செவ்வாய், 21 ஜூலை, 2009

பட்டினத்தார் பாடல்









இறைவனை எல்லோராலும் காண முடியாது,அவன் கருணையை அறியமுடியாது என்பதனால்தான் இறைவன் தாய்மையை படைத்தான்.தாய் அன்பிற்கு நிகர் எதுவுமே கிடையாது. இறைவனின் மறு உருவம் தாய்.

எல்லாம் துறந்தவர் பட்டினத்தார்,அவரால் தாய் அன்பை மறக்க முடியவில்லை. அதற்கு எடுத்துக்காட்டு அவர் தாய் மீது பாடியுள்ள இந்தப் பாடல்கள்.எப்படித்தான் தாய் தந்தையரை மறந்து பலபேர்களால் வாழா முடிகின்றதோ? அப்படி வாழ்பவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்கட்டும் என்பதற்காக இந்தப் பதிவை இட்டுள்ளேன்.இதைப் பார்த்தாவது சிலர் மனங்கள் மாறும் என்ற நம்பிக்கையுடன்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்

பையலென்றபோதே பரிந்தெடுத்துச்-செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி?


முந்தித் தவம் கிடந்து முந்நூறுநாள் சுமந்தே

அந்தி பகலாய்ச்சிவனை ஆதரித்துத் தொந்தி

சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ

எரியத் தழல்மூட்டுவேன்


வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ

விறகிலிட்டுத் தீமூட்டுவேன்?


நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை

தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்

கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ

மெய்யிலே தீமூட்டுவேன்!


அரிசியோ நான் இடுவேன்? ஆத்தாள் தனக்கு

வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள

தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ

மானே என அழைத்த வாய்க்கு?


அள்ளி இடுவது அரிசியோ? தாய் தலை மேல்

கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல்?-மெள்ள

முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்

மகனே என அழைத்த வாய்க்கு.


முன்னை இட்ட தீ முப்புரத்திலே

பின்னை இட்டதீ தென் இலங்கையில்

அன்னை இட்டதீ அடிவயிற்றிலே

யானும் இட்டதீ மூள்க மூள்கவே!


வேகுதே தீயதனில்: வெந்து பொடி சாம்பல்

ஆகுதே பணியேன் ஐயகோ!-மாகக்

குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்

கருதி வளர்த்தெடுத்த கை

.

வெந்தாளோ சோனகிரி வித்தகா! நின்பதத்தில்

வந்தாளோ! என்னை மறந்தாளோ-சந்ததமும்

உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன்

தன்னையே ஈன்றெடுத்த தாய்!


வீற்றிருந்தாள் அன்னை,வீதிதனில் இருந்தாள்!

நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள்-பால்தெளிக்க

எல்லாரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்

எல்லாம் சிவமயமே யாம்!