ஞாயிறு, 26 டிசம்பர், 2010

.இதயத்தைவிட்டகலாத ஈழத்துப் பூராடனார்

இதயத்தைவிட்டகலாத ஈழத்துப் பூராடனார் 
துள்ளுறாலுந் தேனிறாலும் தோகையர்தம் துவரிறாலும்
     அள்ளுசுவை மயக்கினிலே அகப்பொருளின் சிறப்போங்கும் 
விள்ளுதமிழ் தோழ் வலியார் வீரமதிற் புரமொளிரும்
வெள்ளமெனக் கவிப்பாடி விரிநிலமார் இருதிணையே.
ஈழத்துப் பூராடனார்.        
(மட்டக்களப்பு மாநிலத்தின் வளம் -02 -11 -1991 )


                                                    
                                   இலக்கிய மணி திரு.சாமுவேல் கதிர்காமத்தம்பி செல்வராசகோபால்.
                                                           (13.12.1928 -- 20.12.2010)

மீன் பாடும் தேனாட்டின்-இன்பத்
தேன்பாயத் தமிழ் யாத்த,
வானுயர் பெருமை கொண்ட -எங்கள்
தேனூர் பூராடன் புகழ் வாழ்கவே.

காலத்தின் கட்டாயம் உன்னை விரட்டினாலும்
கோலத்தைக் கொண்ட கொள்கையாய்க் கொண்டு
ஞாலத்தைத் திரும்பவைத்த தெய்வத் தமிழ்மகனே,-தமிழ்ப்
 பாலத்தைத்  திறந்துவைத்துப் பரலோகம் சென்றாயோ?

இங்கிருந்தாலும் இப்படி இந்தச்சேவை செய்யமுடியாது -ஆனாலும்
அங்கிருந்து தமிழ் அவனிக்கு ஆற்றியது பல்லாயிரம்
எங்கிருந்தாலும் இன்பத்தமிழ், உன் உயிர் மூச்சு!--என்றும்
மங்காது உனது புகழ், மறவாது உனது தமிழ்ப் பேச்சு!

தித்திக்கும் இன்பத்தமிழ் இணைந்திருக்க --உலகின்
எத்திக்கும் யுன் புகழ் பரந்திருக்க
பக்திக்கு தமிழ் மக்கள் பரந்திருக்க --ஜீவ
முத்திக்கு எங்கு சென்று நீ முயன்றாய்?

வார்த்தைகளை வளைக்க முடியவில்லை யுன் --தமிழ்ப்
போர்த் துடிப்பை மதிக்க முடியவில்லை
யார் நினைத்தார் இம் முடிவை --பாரில்
மார்தட்டி வாழ வழி வகுத்தவனே. !

நான் ஆரம்பப் பாடசாலையில் (மட் /தேற்றாத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன்
பாடசாலையில்)முதலாம் வகுப்பிருந்து ஐந்தாம் வகுப்புவரை படித்த நேரம்,1962 -1966 எனக்கு படிப்பித்த, வகுப்பாசிரியராக இருந்தவர்களில் திருமதி பசுபதி செல்வராசகோபால் அவர்களும் ஒருவர். அத்துடன் அவரது கடைசி மகன் ரிச்சட் சந்திரா எனது வகுப்பில் தான் படித்திருந்தார். அந்நாளில் அவர்களது வீட்டில்,மனோகரா அச்சகம் இருந்தது.அங்கு
அச்சடிக்கப்பட்ட "சாந்தி மார்க்கம்" ஜீவா பிரசுரம் என்ற புத்தகத்தின் உறை இந்த ரிச்சட் சந்திரா என்பவரால் பாடசாலையில் படிக்கும் அவரது நண்பர்களுக்கு வழங்கப்படும இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு மனோகரா அச்சகத்திற்க்குச் சென்றதுண்டு,அந்
நேரம் அச்சு இயந்திரங்களைப் பார்த்து வியந்ததுண்டு. இன்றும் கல்முனைக்குப் போகும்போது அந்த இடத்தைப் பார்த்து பெருமூச்சு விடுவதுடன்,பசுபதி அக்காவையும்
நினைப்பதுண்டு. தேற்றாத்தீவில் ஆரம்பக்கல்வியை அனைவருக்கும் ஆரம்பித்து வைத்தவர் அல்லவா.

திரு செல்வராசகோபால் அவர்களை நான் அறிந்திருந்தாலும்,அந்த வயதில் அவர் பெருமை எனக்குத் தெரியவில்லை. பின்னர் அவரது மைத்துனர் திரு.பிரவுன் கிரகெரி
இராஜதுரை (இராஜ பாரதி) அவர்கள் மூலம்தான் இவர பெருமைகளைஅறியக்கூடியதாக இருந்தது.  காலங் கடந்த ஞானம் என்றாலும்,இவரது புத்தகங்களைத் தேடிப்பிடித்துப்
படிப்பதன் மூலம் அந்தக் குறை நிறைவேறியது. ஆனாலும் அவரது ஆக்கங்கள் மட்டக்களப்பு மக்கள் கைகளில் கிடைக்காமல், சூறவளியும், சுனாமியும் சதி செய்தது,
காலத்தின் கொடுமை.

இலக்கியமணியின் இனிய வாழ்க்கைக்குறிப்புகளை கீழ்வரும் இணைய தளங்களில்
சென்று பாருங்கள்.
  http://muelangovan.blogspot.com/2010/12/blog-post_941.html
http://www.palakani.com/showthread.php?tid=453

சூடாமணி உள்ளமுடையான்.

சோதிடத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.சோதிடத்தை விரும்பிப் படிபவர்களுக்கு இது ஒரு புதையல்.சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்.


நட்சத்திரங்களின் மறு பெயர்கள் 

புகலுருபரிமா வாசி புரவியேறுரசுஞ் சென்னி 
இகலுறு குதிரைமுந்நா ளிரலையைப் பசியின்பேராம்
மகலிய தாழிபூத மடுப்பொடு தராசு கங்குல் 
பகல்வறு கிழவன் சோறு பரணியின் பெயராமே.  01

அசுவினி நட்சத்திரத்தின் மறு பெயர்கள்::
பரி, மா வசி,புரவி,துரகம், சென்னி, குதிரை, முன்நாள், இரலை.

பரணி நட்சத்திரத்தின் மறு பெயர்கள்::
தாழி,பூதம்,அடுப்பு, தராசு, கங்குல், கிழவன்,சோறு.


ஆரலே யழலேயங்கி அலகிறாலறு மீனாவி 
சீர்கொள் கார்த்திகைப் பேராகுந் தெருருளயனாள் வையம்
பார் சகடு ரோகணிப் பேர் பரவு மான்றலை யைந்தானம் 
மார்கழி மதி பேராளன் நரிப்புறமிருகசீரப் பேர் -02


கார்த்திகையின்  பெயர்: 
ஆரல்,அழல்,அங்கி,அளகு,இறால்,அறுமீன்,ஆவி.



ரோகிணியின் பெயர். 
தேருருள்,அயன்நாள்,வையம், சகடு.     


மிருகசீரிடத்தின் பெயர்:
மான்றலை,ஐந்தானம்,மார்கழி, மதிபேராளன்,நரிப்புறம்.

பேரிறை செங்கை யாழ்வில் லாதிரைப் பெயராம்பிண்டி 
கார்திரள் மூங்கில்மாலை கரும்பொடா வணமேவிண்டல் 
கூரிய புநர் தமாகுங் குடந்தரா கொடிறுதையம்
பார்மதி பூசப்பேராம் பணிநாள் கவ்வை பாம்பாயில்யம்.03

திருவாதிரையின் பெயர்:
இறை,செங்கை,யாழ்,வில்,

புணர்பூசத்தின் பெயர்: 
பிண்டிகார், திரள்,மூங்கில், மாலை,கரும்பு,ஆவணம்,விண்டம்,புனர்தம்.

பூசத்தின் பெயர்:
குடம், தரா, கொடிறு,தையம், மதி,

ஆயில்யத்தின் பெயர்:
அரவினாள்,கவ்வை,பாம்பு.

பாவுமுற் சனியே வாயக்கால் வேட்டுவனெழிலி பாரிற்
கூவிய ஞமலி மாசி கொடு நுகமகப்பேர் துர்க்கை 
நாவிதனெலியே மாற்றை யிடைச்சனி பூரனாம்
மோவில் பாற்குனி பங்குனி கடைச்சனி யுத்தரப் பேர். 04

மக நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
முற்சனி,வாய்க்கால், வேட்டுவன், எழிலி,ஞமலி,மாசி,கொடுநுகம்.

பூர நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
துர்க்கை,நாவிதன்,எலி, இடைச்சனி.

உத்தர நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
பாற்குனி,பங்குனி,கடைச்சனி.

உத்தமக் களிறு நவ்வி யுயர் கெளத்துவ மாங்கைம்மீன் 
அத்தமென் கன்னியாடை யாம்பரம் பயறு நெய்மீன் 
சித்திரப் பெயர் மரக்கால் பதுமமே தீபஞ்சோதி
மொத்த வைகாசி முற்றில் சுளகுடன் முறம் விசாகம்.  05

அத்த நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
களிறு,நவ்வி,கெளத்துவம்,கைமீன்.

சித்திரை நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
கன்னி,ஆடை,ஆம்பரம்,பயறு,நெய்,மீன்.

சுவாதி நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
மரக்கால்,பதுமம்,தீபம்.

விசாகம் நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
வைகாசி,முற்றில், சுளகு,முறம்.


விசைகொள் புற்றாளி புன்றேள் மெய்ப்பெண்ணையனுடப்பேரா
மாசி வில் வல்லாரை வாளி துடங் கொளி கேட்டையாகுந் 
திசையுறு குருகு கொக்கு தேட்கடையாணி மூலம் 
வசையிலாக்குளமே பொய்கை வாவி பூரடமாமே. 06




அனுஷ நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
புல்,தாளி,தேள்,பெண்ணை.

கேட்டை நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
வல்லாரை,வாளி,துடங்கொளி.

மூல நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
குருகு,கொக்கு,தேட்கடை ஆனி

பூராட நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
குளம்,பொய்கை, வாவி.

மானெனிற்குளமேகூவன் மணிமுடியாடையூர்தி
கானவுத்தரடாஞ்சோணை சிரவண முலக்கை யோண
மானபுட் பறவை காக்கை யாவணி யவிட்டைப்பேராந் 
தேனனாய் சுண்டன் குன்று செக்கிவை சதையம் செப்பே.

உத்தராட நட்சத்திரத்தின் மறு பெயர்கள்: 
குளம்,கூவல்,மணிமுடி,ஆடை,ஊர்தி.

திருவோணம் நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
சோணை,சிரவணம்,உலக்கை.

அவிட்டம் நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
புள்,பறவை,காக்கை,ஆவணி,

சதய நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
சுண்டன்,குன்று,செக்கு.

செவ்விய கொழுங்கோல் நாழி புரட்டை சீர் புரட்டாதி 
யவ்விய முரசு வேந்த னறிவனுத்தரடாதிப்  பேர் 
வவ்விய கடைமீன் தோணி மரக்கலஞ்சூலம் நாவாய் 
நவ்விதரேவதிப்பே ரவைதினம் நாட்பொதுப் பேர்.

பூரட்டாதி நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
கொழுங்கோல்,நாழி,புரட்டை.

உத்தரட்டாதி நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
முரசு,வேந்தன்,அறிவன்.

ரேவதி நட்சத்திரத்தின் மறு பெயர்கள்:
கடைமீன்,தோணி,மரக்கலம்,சூலம்,நாவாய்,