சனி, 27 பிப்ரவரி, 2010

"வணக்கம்!,ஐயா!."


ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம்,அன்று தபால் காரரின் வருகைக்குப் பிறகு ,பாடசாலை சிறிய மாற்றத்துக்குள்ளானது.எப்படி?என்பது,எங்களையாரும் கூப்பிட்டுச் சொல்லவில்லை.வழமையான வேலையொன்று நேரத்திற்கு முடியவில்லை.அந்தக் காலப் பகுதியில் பாடசாலைக்கு,ஐக்கிய அமெரிக்க குடியரசின் நன்கொடைஎன்று இடைவேளை நேரத்தில் பிஸ்கட் வழங்கப்படும்.அந்த பிஸ்கட் தலைமை ஆசிரியரின் வீட்டில்தான் இருக்கும்,அதை எடுத்து வருவதற்கும், பாடசாலையில் கொண்டுவந்து  பகிர்ந்து கொடுப்பதற்கும்,அந்தப் பாடசாலையின் பெரிய வகுப்பு,மாணவர்களை அழைப்பது வழக்கம்,அன்று அழைக்கப்படவில்லை.இது பெரிய வகுப்பு மாணவர்களுக்கு பெரிய சங்கடமாகப் போச்சு,பெரிய வகுப்பு மாணவர்கள்,எவ்வளவு முயற்சி எடுத்தும்,அதற்குப் பொறுப்பான தலைமை ஆசிரியரும்,அவர் மனைவியும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.இன்னும் இருபது நிமிடங்கள் இடை வேளை மணி  அடிப்பதற்கு,இருந்த வேளை, பாடம் நடத்திக் கொண்டிருந்த,கணித பாட ஆசிரியர் பெரிய வகுப்பு மாணவர்களின் அவதியை அறிந்து,வினவினார்,விஷயம் விளக்கத்திற்கு வந்ததும்.அவரே தலைமையாசிரியரிடம்,கதைத்துஅருகில் இருந்த,தலைமையாசிரியரின் வீட்டிற்குப் போய்,எடுத்து வந்து,பங்கிட்டு கொடுக்கவும்  சொன்னார். ஆனால்,தலைமை ஆசிரியரும் மனைவியும்,எதையோ பறிகொடுத்தவர்கள் மாதிரித்தான் காணப்பட்டார்கள்.வழமையாக பாடசாலை கலையும் நேரம் வந்தது,எல்லாம் வழமைபோல நடந்தாலும் தலைமை ஆசிரியருடைய முகத்திலும்,அவர் மனைவி முகத்திலும்,வழமைக்கு மாறாக வித்தியாசம் தெரிந்தது.

அடுத்த நாள் வழமைபோல்,பாடசாலைக்கு வந்தபோது,இரண்டாவது தலைமை ஆசிரியர் தான் அலுவல்களைக் கவனித்தார்.வழக்கம்போல் பிஸ்கட் எடுக்கச் சென்றபோதுதான்,உண்மை தெரிந்தது,தலைமை ஆசிரியருக்கு இடமாற்றம்,என்பது அதனால்தான் இந்த  களபேரம்.என்று.

இதுவரை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் எங்கள் பாடசாலையின் நிலைமையை,ஐந்தாம் வகுப்புத்தான் பெரிய வகுப்பு,நாங்கள் தான் பெரிய மாணவர்கள்.பாடசாலையில் மாற்றங்கள் நடந்தது,புதிய தலைமை ஆசிரியர் பாடசாலைக்கு வந்ததும்,ஒவ்வொரு வகுப்புக்கும் வந்து தன்னை அறிமுகப்படித்தி தனது வேலையை ஆரம்பித்தார்.அடுத்த நாள் காலையில் கடவுள் வணக்கம் முடிந்தவுடன்,முதன் முதலாக தலைமை ஆசிரியர் தனது பேச்சை ஆரம்பித்தார்.தினமும் காலையில் கடவுள் வணக்கம் முடிந்தவுடன் சிலநிமிடங்கள்,பாடசாலை ஒழுங்குகள் பற்றிக் கதைத்தார்.மாணவர்கள் ஆசிரியரைக் கண்டவுடன் வணக்கம் செலுத்துவது,பாடசாலைக்கு வரும்போது கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை,இப்படி பல விசயங்கள்,எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.அன்றிலிருந்து பாடசாலையில் ஒவ்வொரு ஆசிரியரும்,காலை வணக்கத்தின் பின் சில நிமிடங்கள்,நல்ல போதனைகள் உபதேசித்தார்கள்.

பாடசாலையில் சில முன்னேற்றங்களும்,பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் மாற்றங்கள் இடம்பெறத் தொடங்கியது.ஆசிரியர்களை கண்டால் "வணக்கம்!, ஐயா!'
சொல்வது,என்று நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக வளர்ச்சி கண்டோம்.தலைமை ஆசிரியர் காலை வணக்கத்தின் பின்னர் தான் வரும்போது இருந்த நிலைமைக்கும்,தற்போது மாணவர்களின் தகமையும்,திறமையும் அதிகரித்துள்ளதாகவும்,பெருமைப்பட்டார்.தன்னைக் காணும் எல்லா மாணவர்களும்,மாணவிகளும்,"வணக்கம் ஐயா!"சொல்வதாகவும்,சந்தோசப்பட்டார்,அத்துடன் நில்லாது,குறிப்பிட்ட ஒரு மாணவனைக்காட்டி, தான் இவரைக் கோயிலடியில் கண்டதாகவும்,இவர் தனக்கு மரியாதை செய்யவில்லைஎன்றும்,இனிமேல் அப்படி நடக்கக் கூடாது என்று புத்திமதியும்   கூறினார்.

வழமைபோல்,நாட்களும் பாடசாலையும் நடைபெற்றது,அன்று ஞாயிற்றுக் கிழமை தலைமை ஆசிரியர் சந்தைக்குச் சென்று சாமான்கள் வாங்குவதற்கு குறித்த மாணவனின்  வீட்டிற்கு எதிரில் உள்ள வீதியால் துவிச்சக்கர வண்டியில் போய்க்கொண்டிருக்கும் போது ,மாணவன் தலைமை ஆசிரியரைக் கண்டு "வணக்கம் ஐயா!'சொன்னான் தலைமை ஆசிரியர் கவனிக்கவில்லை,ஆசிரியர் சென்றுவிட்டார்.

மாணவன் நிலை தடுமாறிவிட்டான்.மீண்டும் ஆசிரியர் நம்மளைக் கேள்வி கேட்க வைத்து விட்டோமே என்று பதைபதைத்தான்.யோசிக்கத் தொடங்கினான்.திங்கட் கிழமை கடவுள் வாழ்த்தின் பின் நடக்கப்போவதை நினைத்து மனவருத்தப் பட்டான்.ஒருமுடிவுக்கு வந்தான் எப்படியும் இன்று தலைமை ஆசிரியருக்கு "வணக்கம், ஐயா! கூறியே ஆகுவது என்று முடிவெடுத்து செயலிலும் இறங்கத்தொடங்கினான்.தலைமை ஆசிரியர் வரும் வழியை ஆவலுடன் எதிர் நோக்கினான்.தலைமை ஆசிரியர் வருவதை அறிந்ததும்,செயல்படத் தொடங்கினான்.ஏற்கனவே தெரிவு செய்து வைத்திருந்த ,ஒரு அளவான முருங்கக் கட்டையை எடுத்து வீதியின் குறுக்கே போட்டு,ஓரத்தில் அவன் நின்று,தலைமை ஆசிரியர் அருகே வருமுன்னே,"வணக்கம்,ஐயா"என்றான்.தலைமை ஆசிரியர் பலத்த சிந்தனையுடன்,துவிச்சக்கர வண்டியில் வந்ததால்,தனக்கு முன்னால் நடந்த எதையும் கவனிக்கவில்லை,திடீரென்று சத்தம் வந்ததால் நிலை குலைந்து விட்டார்.மாணவனை உற்று நோக்கியதால் வீதியில் கிடந்த கட்டையின் மேல் துவிச்சக்கர வண்டியின்  முன் சக்கரம் ஏறி தலைமை ஆசிரியர்,ஸ்தலத்திலேயே விழுந்தார்,அவருடன் துவிச்சக்கர வண்டி,வாங்கிவந்த பொருட்கள் எல்லாம் சிதறி,அல்லோல கல்லோலம்.

அடுத்து வந்த திங்கட் கிழமை, காலை வணக்கத்தின் பின் தலைமை ஆசிரியர்,உரையாற்றவில்லை,விபத்தில் காயமடைந்து  ஆசுபத்திரியில் அனுமதிக்கப்பட்டதால்,இரண்டாவது தலைமை ஆசிரியரால் ஒரு வேண்டுகோளும் விடுக்கப் பட்டது,இனிமேல் பாடசாலை தவிர்ந்த,எந்த இடத்திலும் "வணக்கம்!,ஐயா."சொல்லக்கூடாது என்று.





























அதிகாரப்பகிர்வை நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்பு மாற்றத்துக்கு மில்லிபான்ட் அழைப்பு



 

உலகத் தமிழர் அமைப்பின் லண்டன் மாநாட்டில் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் கலந்துகொண்டதையிட்டு இலங்கை அரசாங்கம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருக்கும் அதேவேளை, பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுண் மாநாட்டில் பங்கேற்ற தூதுக் குழுவினரை சந்தித்திருக்கிறார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை பிரிட்டனின் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் உலகத் தமிழர் அமைப்பின் மாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டிற்கு உலகின் பல நாடுகளிலிருந்தும் வருகைதந்திருந்த தூதுக் குழுவினரை பிரதமர் கோர்டன் பிறவுண் சந்தித்ததாக பி.பி.சி. செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.இந்த மாநாட்டில் ஆரம்ப உரையாற்றிய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், அதிகாரப் பகிர்வை நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

உலகத் தமிழர் அமைப்பின் மாநாட்டில் டேவிட் மில்லிபான்ட் ஆற்றிய உரை வருமாறு:பாராளுமன்றத்திற்கு வருகைதந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நல்வரவேற்பளிக்க நான் விரும்புகிறேன். இதனை மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக நான் கருதுகின்றேன். 14 நாடுகளிலிருந்து மக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்றனர். இது பாரியதொரு வெற்றியாகும். உலகளாவிய ரீதியில் பரவியிருக்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் சுவாசத்தின் வெளிப்பாடாக இது காணப்படுகிறது. இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றுக்கு சேவையாற்றக்கூடிய ஐக்கியம் குறித்ததாக இந்த மாநாடு அமையுமென்று நான் எதிர்பார்க்கிறேன்.

இலங்கையுடன் பிரிட்டன் கொண்டிருக்கும் உறவு முறையின் வரலாற்றை அடையாளப்படுத்துவதாக இந்த மாநாடு காணப்படுகிறது. அருட்தந்தை இம்மானுவேல் இதனைப் பற்றிப் பேசியுள்ளார். வரலாற்றியலாளர்கள் மட்டுமன்றி, தமிழர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வதற்கான தருணமாக இது காணப்படுகிறது. இலங்கையின் எதிர்காலத்திற்கான குறிப்பிடத்தக்க தருணமாக இது நோக்கப்படுகிறது. இலங்கையின் எதிர்காலம் தொடர்பான பிரிட்டனின் விவாதத்தில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய மூன்று உறுப்பினர்கள் எனது பக்கத்தில் இங்கு காணப்படுகின்றனர். வீரேந்திரசர்மா,கீத்வாஸ்,ஷியோபாயின் மக்டொனா ஆகிய மூவரும் இலங்கையர்களின் உரிமைகளை தீவிரமாக நியாயப்படுத்துபவர்களாவர். அரசாங்கங்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பது மாத்திரமன்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய பணிகளையும் சமூகக் குழுக்கள் ஆற்றும் பணிகளையும் அங்கீகரிப்பது முக்கியமாகும். சமூகக் குழுக்களில் சில தமிழர்களால் உருவாக்கப்பட்டவையாகும். ஏனையவை தேவாலயங்களால் அமைக்கப்பட்டவை. இலங்கையின் துன்ப நிலையை பார்த்திருந்த பிரிட்டிஷ் மக்கள் குழுவினர் அதற்குப் பதிலளிக்க வேண்டுமென விரும்பியிருந்தனர். அரசாங்கத்தின் தலைமையில் வழிநடத்தப்படும் இயக்கமாக அல்லாமல், பிரிட்டனிலுள்ள தாழ்ந்த மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் இயக்கமாக இதனை நான் கருதுகிறேன்.

உலகத் தமிழர் மன்ற அமைப்பின் அத்திவாரம் குறித்து நான் பேசுவதற்கு விரும்புகிறேன். சர்வதேச மட்டத்திலான இந்தப் பணியை ஆரம்பிப்பது அரசியலுக்கு மிகவும் முக்கியமான தருணமாகும். யாவற்றுக்கும் மேலாக இலங்கையிலுள்ள சகல அரசியலுக்கும் முக்கியமான தருணமாக இது காணப்படுகிறது. ஏனென்றால் அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தக் கூடிய அரசியல் ரீதியாகக் குரல் கொடுப்பதற்கான பதிலீட்டுத் தன்மையான பொருளொன்றும் காணப்படவில்லை. தமது பெயருக்கும் தமக்கும் எதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்கு அவர்கள் செலுத்திய விலை குறித்து தமிழர்களுக்குத் தெரியும். உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துவிட்டது. ஆனால், உள்நாட்டில் சமாதானம் இன்னமும் கட்டியெழுப்பப்பட வேண்டியுள்ளது. சமத்துவமானதும் நீடித்ததுமான அரசியல் சிவில் சமாதானத்தை இறுதியாக எட்டுவதற்கான அர்ப்பணிப்புடன் இந்த உலகத் தமிழர் அமைப்பு உள்ளது. சமாதானத்தை கட்டியெழுப்புவது எம் யாவருக்கும் பரீட்சையாக அமையும்.

அகிம்சைக் கொள்கைக்கு ஆதரவளிப்பது மட்டுமன்றி, அதனை உறுதியாக முன்னெடுப்பது என்பது பற்றிய உங்களின் உறுதியான தீர்மானத்தை நான் பாராட்ட விரும்புகிறேன். ஆயுதங்கள் ஊடாக இறுதியான சமாதானம் எட்டப்படுவதில்லை என்பதை வரலாறு எமக்குக் காட்டியுள்ளதாக நான் நினைக்கின்றேன். அரசியல் ஊடாகவே இறுதிச் சமாதானத்தை எட்ட முடியும் என்பதை வரலாறு எமக்குக் காட்டியுள்ளது. இதனை எமது ஐக்கிய இராச்சியத்திலேயே நாம் பார்த்திருக்கின்றோம். குறிப்பாக வட அயர்லாந்து மாகாணத்தில் நாம் இதனைக் கண்டிருக்கிறோம். இந்தப் பாதை மிகவும் நீண்டதாகும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. பற்றுறுதியான ஆதரவை வெளிப்படுத்துவது மாத்திரமன்றி, முழு அளவில் சகல தரப்பையும் உள்வாங்கிக் கொள்ளும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமானதாகும். அகிம்சா வழியிலான ஆதரவு மூலம் இதனை வென்றெடுப்பது அவசியமாகும். இந்த விடயம் தமிழ் மக்களின் மத்தியில் ஆழமாகக் காணப்படும் பெறுமானங்களாகும்.

நான் ஏன் இங்கு வந்துள்ளேன் என்பதை சில சமயங்களில் சொல்லக்கூடும். இந்த முக்கியமான சந்திப்பு லண்டனில் இடம்பெறுகின்றதென்பதால் மட்டும் நான் இங்கு வரவில்லை. இலங்கை விவகாரங்கள் தொடர்பாக இறுதியான சமாதானத்தை எட்டுவதே இங்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைகிறது. பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழமான பிணைப்புகள் உள்ளன. இலங்கையின் எதிர்காலமானது தெற்காசியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.

26 வருடங்களாக இலங்கையின் சகல மக்களுமே உள்நாட்டு யுத்தத்தினால் துன்பமடைந்திருந்தனர். சகல சமூகங்களும் பாதிக்கப்பட்டிருந்த அதேசமயம், தமிழ்ச் சமூகம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததை நாம் அறிவோம். மோதல் தருணத்தில் தினமும் தமது வாழ்வுக்காக தமிழர்கள் அச்சத்துடன் இருந்து வந்தனர். விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் அகப்பட்டிருந்த தமிழர்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதை நாம் அறிவோம். சகல சமூகங்களையும் சேர்ந்த 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் அங்கவீனராகியும் உள்ளனர்.

பொதுமக்கள் இடம்பெயர்ந்ததையும் தனிப்பட்டவர்களும் பிள்ளைகளும் குடும்பத்தினரைவிட்டுப் பிரிந்தமையையும் வீடுகளும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டிருந்தமயையும் நாமறிவோம். பிரிட்டிஷ் தமிழர்கள் இந்த நாட்டிற்கு ஆற்றி வரும் பங்களிப்பையிட்டு நாம் பெருமையடைகின்றோம். நீங்கள் எமது அயலவர்கள்,எமது நண்பர்கள், எமது உறவினர்களாக உள்ளீர்கள். வர்த்தகம்,அரசியல் என்பவற்றில் நீங்கள் ஆற்றும் பங்களிப்பையிட்டு நாம் பெருமை கொள்கிறோம்.

தமிழர்கள் அச்சத்துடன் இருந்தார்கள். சிலர் தமது நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். அத்துடன், நீங்கள் புலிகளின் நிழலில் இருந்தீர்கள் என்பனவற்றைப் பற்றிக் கூறுவது முக்கியமானதாகும். பயங்கரவாத அமைப்பான புலிகள் எண்ணிக்கையற்ற அராஜகங்களை மேற்கொண்டிருந்தனர்.புலிகள் அமைப்பு கருத்து பேதம் உள்ளவர்களை

சகித்துக் கொள்வதை மறுத்துவந்தது. பலவந்தமாக சிறுவர்களை படைக்குச் சேர்த்திருந்தது. மோதலிலிருந்து தமிழ்ப் பொதுமக்கள் தப்பிச் செல்வதற்கு அனுமதியளிக்க மறுத்திருந்தது. இந்த விடயங்களைப் பற்றிக் கூறுவதும் முக்கியமானதென நான் நினைக்கின்றேன்.

தற்போது முன்னாள் மோதல் வலயத்தில் கண்ணிவெடிகள் காணப்படுவதை நாம் அறிவோம். அப்பகுதிகளில் உள்சார் கட்டமைப்பு குறைவாகவுள்ளது. மின்சாரம் இல்லை, நீர்ப்பாசனம் இல்லை, ஏனைய மாகாணங்களிலும் பார்க்க தமிழ்ப் பகுதிகளில் வறுமை வீதம் இரு மடங்காகவுள்ளது. உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்னர் இலட்சக்கணக்கான தமிழர்கள் இடம்பெயர்ந்தனர். இப்போதும் சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் முகாம்களில் உள்ளனர். கண்ணியமான மனிதர்களாக தம்மை நடத்த வேண்டுமென அவர்கள் விரும்புவதாக எனக்குக் கூறியிருந்தனர். தமது வாழ்க்கை கண்ணியமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். இந்த விடயமே என்னையும் பிரதமரையும் அரசாங்கத்தையும் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்கு தள்ளிவிட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஏனையவர்கள் போன்று தமக்கும் கண்ணியமான வாழ்க்கை கிட்ட வேண்டுமென்பது தமிழர்களின் அபிலாசையாகும்.

மனிதாபிமான நெருக்கடியின் பரிமாணம் இந்தளவிற்கு இருப்பதற்கு மத்தியில் இந்த விடயம் குறித்து நாம் கவனம்செலுத்த வேண்டிய தேவை அவசரமாகக் காணப்படுகிறது. அதேசமயம், நீண்டகால அடிப்படையிலான தேவைகள் குறித்து நாம் மறந்துவிடக்கூடாது. இலங்கையின் எதிர்காலம் பற்றிக் கவனம் செலுத்துவோர் எவ்வாறாகயிருப்பினும் பொருளுதவியினால் மட்டும் அவர்களின் தேவையை நிறைவேற்ற முடியாதென்பதை அறிந்துகொள்ள முடியும். புதிய அரசியல் இணக்கப்பாடு மூலமே இதனைக் கட்டியெழுப்ப முடியும். உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக நாங்கள் எதிர்பார்ப்புடன் உள்ளோம். தேசிய நல்லிணக்கத்தை நோக்கிச் செல்வதற்கு தனக்குக் கிடைத்த மக்களாணையை ஜனாதிபதி பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு இலங்கையரினதும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து மேற்கொள்ள வேண்டிய கடப்பாடுகளை உண்மையான முறையில் நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு மற்றும் இதர துறைகளில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்.

சகல இலங்கையரினதும் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கான பாரிய முயற்சியை முன்னெடுப்பதற்கான தேவையுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 26 உறுப்பு நாடுகள் கொண்டிருக்கும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சாசனத்தை அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். இலங்கைக்கான ஜி.எஸ்.பி.+ வரிச் சலுகைகளை இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் சிபாரிசு செய்திருந்தது. நாங்கள் அதனை ஆதரித்திருந்தோம். வர்த்தகமும் விழுமியங்களும் ஒன்றுடனொன்று தொடர்புபட்டவையாகும். அந்த விழுமியங்களானவை அரசியல் சிவில் உரிமைகள் சம்பந்தப்பட்டவை. வன்முறைகள்,தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்பன பற்றி நாம் கவலையடைந்திருந்தோம். அத்துடன், ஜனாதிபதி வேட்பாளராக நின்றவர் கைதுசெய்யப்பட்ட விவகாரமும் முக்கியமானதொன்றாகும். கைதுசெய்யப்பட்டிருக்கும் அவர் இலங்கைச் சட்டத்தின் பிரகாரம் நடத்தப்பட வேண்டும்.

வரலாறானது ஒரு முக்கியமான விடயசாகக் காணப்படுகிறது. எமது வரலாற்றிலேயே நாம் இருக்க முடியாது. ஆனால், வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மீள்நல்லிணக்கம் ஒருபோதுமே இடம்பெறாவிட்டால் வரலாறானது புதைகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கும். அண்மையில் நெல்சன் மண்டேலா விடுதலையான 20 வருட நிறைவு தினத்தை நாம் கொண்டாடினோம். இது வரலாற்று ரீதியாக தென்னாபிரிக்கா கற்றுக்கொண்ட பாடத்தின் முக்கிய அம்சமாக விளங்குகிறது. அதனாலேயே சர்வதேச மனிதாபிமான சட்டத்தை இரு தரப்பினரும் மீறிய குற்றச்சாட்டுக் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாம் கோரிக்கை விடுப்பதற்கான காரணமாகக் காணப்படுகிறது.

பாரதூரமான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறோம். சுயாதீனமானதும் நம்பகரமானதுமான விசாரணைகள் இடம்பெற்றால் அந்த முயற்சிகள் இலங்கைச் சமூகங்களுக்கிடையில் மீள்நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முக்கியமான பங்களிப்பை வழங்கும்.

இன்று சிவில் அரசியல் உரிமைகள் பற்றிய கவலையை நான் கூறியுள்ளேன். இடம்பெயர்ந்தவர்கள் பற்றிய கவலை பற்றியும் குறிப்பிட்டுள்ளேன். இலங்கையில் சகல தரப்பினரையும் உள்ளீர்த்த அரசியல் நடவடிக்கைகளின் தேவை பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். பிரிட்டிஷ் அமைச்சரொருவர் இதனை எப்போதாது கூறுகிறாரோ அப்போது நாங்கள் தமது சொந்த விவகாரங்களை எவ்வாறு நடத்த வேண்டுமென இலங்கைக்குக் கூறுவதாக எம்மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. அதனை நான் மிகவும் தெளிவான முறையில் நிராகரிக்கிறேன். இலங்கை மக்களுக்கான எந்தவொரு எதிர்கால அரசியல் இணக்கப்பாட்டிற்கும் இந்த விடயம் மிகவும் முக்கியமானதாகும். இலங்கை மக்கள் தமது உரிமைகளை அடையாளம் கண்டுகொள்வதற்கும் இது அவசியமானதாகும். சிறுபான்மையினரின் உரிமைகளும் இதில் உள்ளடங்கியுள்ளன. இந்த விடயத்தை தீர்மானிப்பது அவர்களைப் பொறுத்தவிடயமாகும். ஆனால், உலகளாவிய மனித உரிமைகளுக்காக நாம் தொடர்ந்தும் ஆலோசனைகளைக் கூறிவருவோம். இந்த உலகளாவிய மனித உரிமைகள் ஜனநாயகத்திற்கு மட்டும் அடிப்படைக் காரணியாக அமைந்திருப்பது மாத்திரமன்றி, எங்குமுள்ள கண்ணியமான சமூகங்களுக்கும் இவை மிகவும் முக்கியமான விடயங்களாகக் காணப்படுகின்றன. பின்வரும் விடயத்துடன் எனது உரையை நிறைவுசெய்ய விரும்புகிறேன். அரசியலானது அரசாங்கங்களைப் பற்றிய விடயமாகும். அத்துடன், அது மக்களைப் பற்றியும் சமாதானமான எதிர்காலத்திற்காக முயற்சிக்கும் மக்களைப் பற்றியதுமான விடயமாக இது உள்ளது. அத்துடன், சமாதானமான எதிர்காலத்தை நாடும் உலக மக்களைப் பற்றியதாகவும் இந்த விடயம் காணப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த குழுவானது ஜனநாயக ரீதியிலான குழுவாகும்.

உலகளாவிய ரீதியில் காணப்படும் தமிழ்ச் சமூகங்களின் செயற்பாட்டுத் திறனுடனான ஈடுபாடே அரசியல் நல்லிணக்கத்திற்குத் தேவைப்படுகின்றதென்பது எனது கருத்தாகும். அகிம்சா வழியிலான தங்களின் விழுமியங்கள் பற்றி பேசுவதற்கான தேவை அவர்களுக்குக் காணப்படுகிறது. தனது சகல மக்களையும் மதிக்கும் கண்ணியமான இலங்கை என்ற தொலைநோக்குப் பற்றி நீங்கள் பேசுவதற்கான தேவை காணப்படுகிறது. ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான வழிமுறைகளை மக்கள் கண்டறிந்து கொள்ளாவிடின் அவர்கள் பகுதி பகுதியாக சிதறுண்டு விடுவார்கள்.

இந்த உறுதிப்பாடுகள் சொல்வதற்கு இலகுவானவை. பிரிட்டன் போன்ற ஜனநாயக நாடொன்றிலிருந்து கொண்டு சௌகரியமான முறையில் கூறுவது இலகுவானதாகும். ஆனால், இலங்கையர்களுக்காக எமது உறுதியான ஆதரவுடன் நாம் இதனைக் கூறுவது மிகவும் முக்கியமானதாகும். அதாவது இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் அதில் உள்ளடங்கியுள்ள உறுதிப்பாடுகளுக்கிணங்க வாழவிரும்புவோர் பீதி,அச்சமின்றி வாழும் நிலையேற்படுவதற்கு ஒவ்வொரு பிரஜையினது உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மிகவும் அவசியமாகும். சமத்துவம்,ஜனநாயகத்திற்கான போராட்டமானது சகல இலங்கையரையும் ஒன்றுபடுத்துவதாக அமைய வேண்டும். உலகளாவிய ரீதியிலுள்ள சகல அரசாங்கங்களையும் ஐக்கியப்படுத்துவதாக இருக்க வேண்டும். பிரிட்டிஷ் அரசாங்கம் அதனை மேற்கொள்ளுமென அரசின் சார்பாக நான் இது தொடர்பாக உறுதியளிக்கின்றேன்.


ஜெனரல் பொன்சேகா விவகாரமும் மகா சங்கமும்

ஜெனரல் பொன்சேகா விவகாரமும் மகா சங்கமும்
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசாங்கம் கைது செய்யாமல் விட்டிருந்தால் அவரைப் பற்றி நாட்டு மக்கள் பெருமளவுக்குப் பேசாமல் இருந்திருக்கக்கூடும். ஊடகங்களில் தலைப்புச் செய்திகளை அவர் ஆக்கிரமிப்புச் செய்வதற்கு வாய்ப்பும் இருந்திருக்காது. அத்துடன் அவரைப் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்திய எதிரணிக் கட்சிகளுக்கு ஆர்ப்பாட்டங்களைச் செய்வதற்கு ஆரவாரமான ஒரு கோஷம் கிடைக்காமல் போயிருக்கவும் கூடும். அரசாங்கம் ஜெனரல் பொன்சேகா விவகாரத்தைக் கையாளுகின்ற முறை அரசியல் ரீதியில் நோக்குகையில் விவேகமுடையதாக இல்லை என்பதே பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய ஆதரவாளரான ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தயான் ஜெயதிலக பொன்சேகா விவகாரத்தை "பூரணமான பெருந்தவறு  என்று வர்ணித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

எதிரணிக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு உத்வேகமுடையவையாக இல்லை. மக்களை அணிதிரட்டுவதில் இந்தக் கட்சிகளுக்கு இருக்கின்ற இயலாமையைத் தெளிவாகவே காணமுடிகிறது. அரசியல் மட்டத்தில் நிலைமை இவ்வாறானதாக இருந்தாலும் ஜெனரல் பொன்சேகா கைது தொடர்பில் தென்னிலங்கையில் பொதுஜன அபிப்பிராயம் மிகவும் குழப்பகரமானதாகவே இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. சிங்கள சமுதாயத்தின் கீழ்ப்பரப்பில் உறங்கிக் கிடக்கின்ற முரண்பாடுகள் வெளியில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கின்றன. இதன் ஒரு தெளிவான வெளிப்பாடே பௌத்த மத உயர்பீடங்களினால் பொன்சேகா கைது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அதிருப்தியாகும். மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் உட்பட நான்கு மகாநாயக்கர்கள் முன்னாள் இராணுவத் தளபதியையும் அவரின் சகாக்களையும் தடுப்புக்காவலில் இருந்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் மகஜர் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். வெறுப்புணர்வை வெறுப்புணர்வினால் வெல்லமுடியாது என்றும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜெனரல் பொன்சேகாவினால் கூறப்பட்டிருக்கக்கூடிய விடயங்களைப் பொருட்படுத்த வேண்டாமென்றும் மகாநாயக்கர்கள் ஜனாதிபதியை வலியுறுத்திக் கேட்டிருக்கிறார்கள்.
நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் ஏனையவர்களுக்கும் இடையே மூண்ட தகராறுகளைத் தீர்த்து வைப்பதற்கு மகா சங்கத்தினர் புராதன காலத்தில் இருந்து கடைப்பிடித்து வந்திருக்கும் அணுகுமுறையின் அடிப்படையிலேயே ஜெனரல் பொன்சேகா விவகாரத்தில் தாங்கள் தலையிடுவதாகக் குறிப்பிட்டிருக்கும் மகாநாயக்கர்கள் மன்னன் துட்டகைமுனுவுக்கும் அவனது சகோதரன் திஸ்ஸவுக்கும் இடையேயான தகராறில் மகாசங்கத்தினர் தலையிட்டதை உதாரணமாகவும் சுட்டிக்காட்டி அதேபோன்றே அரசாங்கத்துக்கும் முன்னாள் இராணுவத் தளபதிக்கும் இடையிலான தகராறைத் தீர்த்துவைப்பதற்கு தற்போதைய தருணத்தில் தாங்கள் தலையிட வேண்டிய தேவை எழுந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். மகாநாயக்கர்களின் இத்தலையீட்டைப் பொறுத்தவரை முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் தற்போதைய அரசியல் நிகழ்வுப் போக்குகள் தொடர்பில் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்காக நாளை மறுதினம் வியாழக்கிழமை மகாசங்க உறுப்பினர்களை கண்டி தலதா மாளிகையில் உள்ள மகா மளுவ மண்டபத்தில் கூடுமாறு அவர்கள் விடுத்திருக்கும் அழைப்பேயாகும். உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தில் இருந்தவேளையில் கூட மகாநாயக்கதேரர்கள் மகா சங்கத்தினருக்கு இத்தகைய அழைப்பொன்றை விடுத்ததில்லை.
நான்காவது ஈழப்போர் என்று வர்ணிக்கப்பட்ட உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பொன்சேகாவை அதுவும் சில மாதங்களுக்கு முன்னர் போர் வெற்றிநாயகன் என்று போற்றப்பட்ட ஜெனரல் பொன்சேகாவை அரசாங்கம் தற்போது நடத்துகின்ற முறையை மகாநாயக்க தேரர்கள் அங்கீகரிக்கவில்லை என்பது தெளிவானது என்ற போதிலும், கண்டி மகாநாட்டில் மேற்கொள்ளப்படக்கூடிய தீர்மானத்தில் அரசாங்கத்தின் தற்போதைய போக்கு தொடர்பில் மகாசங்கம் கடுமையான பொருதல் நிலைப்பாடொன்றை எடுக்குமென்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஆனால், ஜெனரல் பொன்சேகா விவகாரம் தொடர்பில் பௌத்த மத உயர்பீடங்களின் பிரதிபலிப்பு அரசாங்கத்துக்குப் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. தங்களது நிலைப்பாட்டை மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கிக் கூறுவதற்கான ஏற்பாடுகளில் அரசாங்கத் தரப்பினர் இறங்கியிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
மகா சங்கத்தின் தலையீட்டின் விளைவாக ஜெனரல் பொன்சேகா விவகாரத்தில் அரசாங்கம் ஒப்பீட்டளவில் ஒரு தணிவுப்போக்கை தற்காலிகமாகவேனும் கடைப்பிடிக்க நிர்ப்பந்திக்கப்படக் கூடும் என்று அரசியல் அவதானிகள் மத்தியில் அபிப்பிராயம் நிலவுகிறது. போர்க் காலகட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய நிகழ்வுகள் தொடர்பிலான ஆவேசப் பேச்சுக்களை அடியோடு நிறுத்தி விட வேண்டுமென்று முன்னாள் இராணுவத் தளபதியிடம் உத்தரவாதம் கோரப்படலாம் என்றும் இந்த அவதானிகள் எதிர்பார்க்கிறார்கள். எது எவ்வாறிருப்பினும், போருக்குப் பின்னரான சூழ்நிலையில் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்திற்குள்ளும் ஆட்சி அதிகார கட்டமைப்புக்குள்ளும் எல்லாவற்றிற்கும் மேலாக சிங்கள பௌத்த சமுதாயத்திற்குள் தீவிரமடையத் தொடங்கியிருக்கின்ற உள்முரண்பாடுகளையும் குமுறல்களையும் தற்போதைய நிகழ்வுப் போக்குகள் பிரகாசமாக அம்பலப்படுத்துகின்றன!
நன்றி:தினக்குரல்.