புதன், 25 ஜனவரி, 2017

சிவபெருமான் பொலிசை அனுப்பினார், அலறியது யார் தெரியுமா? வம்பிழுக்கும் சுப்ரமணியன் சுவாமி


சிவபெருமான் பொலிசை அனுப்பினார், அலறியது யார் தெரியுமா? வம்பிழுக்கும் சூப்புர மணியன் சுவாமி


தமிழகத்தில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி சிவபெருமான் பொலிசை அனுப்பினார், பொறுக்கிகள் அலறிக்கொண்டு ஓடிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் தாமாக முன்வந்து போராடி வந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்து நேற்று சில வன்முறை சம்பவங்களுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி, சிவபெருமான் பொலிசை அனுப்பினார், பொறுக்கிகள் அலறிக்கொண்டு ஓடிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில், ”தைரியம் இருந்தால் மெரினாவிற்கு வருமாறு பொறுக்கிகள் என்னை அச்சுறுத்தினார்கள்.
சிவபெருமான் பொலிசை அனுப்பினார், பொறுக்கிகள் ஐய்யோ, ஐய்யோ என அலறி அடித்துக் கொண்டு ஓடிவிட்டனர். தற்போது பொறுக்கிகள் தமிழ்நாட்டிற்கு வருமாறு கூறுகிறார்கள். சிவபெருமான் முடிவு செய்யட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், “முதல்வர் ஓ.பி 3 நல்ல விஷயங்களை செய்துள்ளார். 1.சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளின் படி நடந்த ஜல்லிக்கட்டை நிறுத்திவிட்டார். தமிழக சட்டசபையில் சட்டதிருத்த மசோதாவை கொண்டு வந்தார் 3.பொறுக்கிகள் மீது தாக்குதல் நடத்தும்படி உத்தரவிட்டார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில் பொறுக்கிகள் என்று கூறி சுப்ரமணியன் சுவாமி மீண்டும் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னதாக, போராட்டம் தொடங்கிய சில தினங்களில், பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில், “டுவிட்டரில் பீட்டா அமைப்பை அச்சுறுத்தும் விதமாக கருத்துக்களை பதிவு செய்யும் அனைத்து தமிழ் பொறுக்கிகளும், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்காக தங்கள் முகவரியையும் எழுத வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் தமிழக முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மத்தியில் சுப்ரமணியன் சுவாமியின் கருத்துக்கு கடுமையாக கொந்தளிப்பு நிலவியது.
இந்த விவகாரத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கும், சுப்ரமணியன் சுவாமிக்கும் இடையேயும் கருத்து மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

07 முஸ்லிம்களையும் சுதந்திர வீரர்களாக பிரகடனப்படுத்த கோரிக்கை

07 முஸ்லிம்களையும் சுதந்திர வீரர்களாக பிரகடனப்படுத்த கோரிக்கை

RSM
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
 
 
பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக செயற்பட்ட காரணத்தினால் 1804ஆம் ஆண்டு தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட 7 முஸ்லிம்களையும், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய முஸ்லிம் தலைவர்கள் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எஎம். ஹிஸ்புல்லாஹ் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
 
பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஊவா, வெல்லஸ்ஸ பகுதிகளில் கிளர்ச்சி செய்த சிங்கள தலைவர்கள் 19 பேர் 1818 ஆம் ஆண்டு தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாசவின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவர்களுக்கு எதிரான பிரகடனம் ரத்து செய்யப்பட்டு போர்வீரர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
 
இந்நிலையில், தேசத்துரோகிகளாக பிரித்தானிய ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ள 7 முஸ்லிம்களையும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்துமாறு  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
 
பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்டிருந்த இலங்கை திருநாட்டை அவர்களிடமிருந்து விடுவிப்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், பிரித்தானியரால் பல சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தேசத் துரோகிளாக பிரகடனம் செய்யப்பட்டனர்.
 
1815 பிரித்தானியர் கண்டி இராச்சியத்தை கைப்பற்றி முழுநாட்டையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தமைக்கு எதிராக ஊவா,வெல்லஸ்ஸ மற்றும் வலப்பன பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சிகளுக்கு காரணமாக இருந்த 19 சிங்கள தலைவர்களும் தேசத்துரோகிகளாக   1818 ஜனவரி 10 ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்டனர்.
 
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் அந்த பிரகடனத்தை  வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதிகாரபூர்மாக நீக்கி இரத்துச் செய்திருந்தீர்கள்.
இதே போன்று, பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக பல முஸ்லிம் தலைவர்களும் கிளர்ச்சி செய்து தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளனர். 
 
அந்த வகையில், 1804 ஜுன் மாதம் 4ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு முஸ்லிம்களும், திருகோணமலை மாவட்;டத்தைச் சேர்ந்த மூன்று முஸ்லிம்களும் தேசத்துரோகிகளாக பிரகடம் செய்யப்பட்டனர்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மீரா ஒசன் அவ்வக்கர் (ராய்மூனை), ஒசன் லெப்பை உதுமா லெப்பை (ராய்முனை), அவ்வக்கர் ஈஸா முகாந்திரம் (சம்மாந்துறை), அனீஸ் லெப்பை (மருதமுனை) ஆகியோரும், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சேகு தீதி (தோப்பூர்), சலம்பதி உடையார் (குச்சவெளி), பீர் முகம்மது ஆகியோரும் இவ்வாறு தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
நாட்டின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்காக பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக செயற்பட்ட குறித்த 7 முஸ்லிம் தலைவர்களுக்கும் எதிராக தேசத்துரோகிகள் என முன்வைக்கப்பட்டுள்ள பிரகடனத்தை வர்த்தமானி மூலமாக அதிகாரபூர்மாக இரத்து செய்து, நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய முஸ்லிம் தலைவர்கள் என பிரகடனம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
குறித்த கடிதத்தின் பிரதி வருமாறு...
 
 
 
 
(காத்தான்குடி விஷேட நிருபர் - பழுலுல்லா பர்ஹான்)
 

ஆற்றல், அறிவு இல்லாததே இலங்கையின் அபிவிருத்திக்குத் தடை

ஆற்றல், அறிவு இல்லாததே இலங்கையின் அபிவிருத்திக்குத் தடை



ஹாவார்ட் கென்னடி அரச கல்லூரியின் பேராசிரியர் ரிக்காடோ ஹோஸ்மான் 'அகமான வலயத்திலிருந்து வெளியேறி உங்களுடைய வெற்றிவாய்ப்பை அதிகரிப்பது: புதிய நெருக்குதல்களுக்கு இலங்கையின் வளர்ச்சியை ஒரு மாதிரியாகப் பின்பற்றுதல்' என்ற தலைப்பில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் உரையாற்றினார்.
கென்னடி அரச பாடசாலையின் சர்வதேச அபிவிருத்தி மையத்தை நடத்தும் ஹோஸ்மானும் அவருடைய குழுவினரும் இலங்கையின் கடந்த வருட பொருளாதாரத்தை ஆய்வு செய்தனர். இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த அவருடைய உரை நாட்டின் தற்போதைய பொருளாதார குறைபாடுகள் மற்றும் அதிகரித்த வளர்ச்சிக்கான அதன் பாதைகள் தொடர்பானதாக இருந்தது. உண்மையாகச் சொல்வதென்றால்,
அவருடைய ஆய்வின் முடிவுகள் நாட்டின் எதிர்கால பொருளாதாரம் முற்றிலும் எழுச்சி பெறும் என்று கூறுவதாக இல்லை. இருப்பினும், மனித அபிவிருத்தி குறியீட்டைப் பொறுத்தவரையில் இலங்கை மிக நல்ல நிலையில் மெச்சத்தக்க வகையில் தெற்காசிய நாடுகளிலேயே முதன்மையாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஆனால் பிரச்சினை என்னவென்றால் யுத்தத்துக்குப் பின்னான பொருளாதார வளர்ச்சி வருடா வருடம் 4% என்றுதான் கடந்த நான்கு வருடங்களாக இருந்தது. இது ஏன் நடந்தது?
ஏற்றுமதி முன்னேற்றம்
“யுத்தத்தின் பின்னான காலக்கட்டத்தில் பரந்த கடன் பற்றாக்குறையுடனான வளர்ச்சி ஏற்பட்டது தெளிவாகத் தெரிகிறது. பரந்த நடைமுறைக்கணக்கு பற்றாக்குறையான ஒரு போக்குடன்தான் இந்த வளர்ச்சி ஏற்பட்டது” என ஹோஸ்மான் கூறினார். 2009 க்குப் பின்னர் அரச செலவினத்தால் பொருளாதார வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
ஏற்றுமதி வளர்ச்சி காணப்படவில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் போது இறக்குமதியும் அதிகரிக்கின்றது. இறக்குமதிக்கு ஒத்ததாக ஏற்றுமதி இருக்கவில்லையென்றால் நடைமுறைக்கணக்கின் பற்றாக்குறை விரிவடையும்.
இதனால் வளர்ச்சி குறைவடையும். பொருளாதாரத்தின் ஏனைய வளர்ச்சியுடன் இணைந்து செல்லும் விதமாக நீங்கள் உங்களுடைய ஏற்றுமதிகளை அதிகரிக்கும் வேகத்திலும் முக்கியத்துவம் இருக்கிறது. தாய்லாந்து, மலேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சி மிகவும் பின்தங்கியதாக உள்ளது" எனவும் அவர் மேலும் கூறினார்.
இந்த ஏற்றுமதி பற்றாக்குறைக்கு பிரதான காரணம் ஏற்றுமதிப் பொருட்களில் பல்வகைத் தன்மை இல்லாததே. 2000-2015 காலப் பகுதியின் போது சீனா தனது ஏற்றுமதிப் பொருட்களுடன் இன்னும் அதிகமாக தனிநபர் வருமானத்துக்கு 245 டொலர்கள் பெறுமதியான 76 பொருட்களையும் சேர்த்துக்கொண்டது.
தாய்லாந்து தனியார் வருமானத்துக்கு 326 டொலர்கள் பெறுமதியான 70 பொருட்களை அதிகமாக ஏற்றுமதி செய்தது. ஒப்பீட்டளவில், இலங்கை அதன் தனியார் வருமானத்தில் ஏழு டொலர்கள் பெறுமதியான ஐந்து பொருட்களையே உற்பத்தி செய்தது.
இதன்படி பார்த்தால் இலங்கை தனது ஏற்றுமதிப் பொருட்களில் இன்னும் பல பொருட்களைச் சேர்க்க வேண்டிய தேவை இருப்பது தெளிவாகிறது. இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களாக தேயிலை, இறப்பர், மாணிக்கக்கற்கள், தைத்த ஆடைகள் என்பன பல வருடங்களாக இருக்கின்றன.
சீனாவோ மின்னணுவியல் பொருட்கள், இயந்திரங்கள், இரசாயனப் பொருட்கள் என்பவற்றை ஏற்றுமதி செய்து பெரும் செல்வந்த நாடாக மாறியிருக்கின்றன. ஒரு நாடு பலதரப்பட்ட புதிய பல்வகைத் தன்மையான கைத்தொழில் பொருட்களை உற்பத்தி செய்வது எவ்வாறு? ஹோஸ்மானைப் பொறுத்தவரையில் இதற்குப் பிரதானமானது தொழில் நுட்ப அறிவுதான்.
ஒன்றின் மாதிரிப்படி செய்வது, அதை மறுபடியும் மறுபடியுமாகச் செய்வது என நீண்ட காலமாக கற்றுக்கொள்வதன் மூலமே அந்த அறிவு கிடைக்கிறது. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி நடப்பதெனக் கற்றுக்கொடுப்பதில்லை. பிள்ளைகள் மற்றவர்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் யூகித்துத்தான் நடக்கக் கற்றுக் கொள்கிறார்கள். கண்ட காட்சிகளை உணர்ந்து அதன்படி செய்யும் மூளையின் திறன்தான் அறிவு. அது மூளையைச் சுற்றி பின்னப்படும் ஒரு செயல்முறையாகும்.
பல்வேறு திறமைகளைக் கொண்டிருத்தல் :
வளர்ச்சியடையாத சமூகங்களில் உள்ள மக்களுக்கு விவசாயக் கருவிகளை உருவாக்குதல் போன்ற அறிவு இருந்தாலும் பரந்த அறிவு இருப்பதில்லை. உதாரணமாக, பல நாடுகளுக்கு இன்று, வீடுகளை அமைக்கவும் மீன் பிடிக்கவும் அறிவு உண்டு. ஆனால், ஒரு கைத்தொலைபேசியை எப்படி உருவாக்குவது என்று தெரியாது.
வளர்ச்சியடைந்த நாட்டிலுள்ள ஒருவருக்கு தனியாக கைத்தொலைபேசி ஒன்றை உருவாக்கத் தெரியாமலிருக்கலாம். ஆனால், அவரது சமூகத்திலுள்ள பலர் சேர்ந்து கைத் தொலைபேசியை உருவாக்க முடியும். பலவகைப்படுத்தல். பொருளாதார அபிவிருத்தி என்ற இந்த இரண்டுக்கும் முக்கியமாக இருப்பது நானாவித திறமைகளும், அறிவும் கொண்ட தனிநபர்கள்தான். அறிவை ஒன்றாகச் சேகரிப்பதன் மூலம் பல வகையான உயர் பெறுமதிமிக்க பொருட்களை நீங்கள் உருவாக்க முடியும். இங்கு ஹோஸ்மான் பல திறமைகளுக்கு எழுத்துக்களை ஒப்பிட்டுப் பேசினார்.
‘A’ என்ற ஒரு எழுத்து இருந்தால் நீங்கள் ஒரு சொல்லை உருவாக்கலாம். பத்து எழுத்துக்களைக் கொண்டு பலவகையான நீண்ட 595 சொற்களை உருவாக்கலாம். வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ்வாறான எழுத்துக்களுக்கும் ஆற்றல்களுக்கும் வசதிகள் உண்டு எனக் கருதுகிறார் அவர். சின்ன அறிவுள்ள ஒரு நாட்டில் ஒருசில குறைந்த சொற்களை இலகுவாக உருவாக்க முடியும்.
பல சொற்கள் கொண்ட நாடுகளில் கடினமான பல பொருட்களை உருவாக்கிவிடலாம். பல எழுத்துக்களுக்கும், செல்வத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு எனவும் ஹோஸ்மான் கூறுகிறார். பாகிஸ்தானைவிட பிரான்ஸில் அதிக எழுத்துக்கள் இருப்பதால் இந்த எழுத்து கருத்தியலானது பல நாடுகளின் விடயத்தில் உண்மையாக இருக்கிறது. ஆனால், நாடுகளிலுள்ள பிராந்தியங்களை ஆய்வு செய்யும் போதும் அது உண்மையாகவே இருக்கிறது.
இலங்கையில் முல்லைத்தீவு, மன்னாரில் உள்ள மக்களைவிட கொழும்பிலுள்ளவர்கள் பல பொருட்களை உருவாக்கி பெரும் செல்வத்தை அனுபவிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக, இலங்கையின் நாளாந்த பொருட்களின் ஏற்றுமதி 1995ம் ஆண்டு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்தது.
இப்போதும் அது குறைவுதான். செல்வந்த நாடாக மாறுவதற்கு இலங்கைக்கு உள்ள பிரச்சினை போதுமான அறிவோ, ஆற்றல்களோ இல்லாததுதான். திறமைகளை முயன்று பெறுவது என்பது கடினம். உங்களுக்குத் தெரியாத பொருட்களை நீங்கள் உருவாக்கவும் முடியாது. உதாரணமாக, கைக்கடிகாரம் செய்பவர்கள் இல்லாமல் நீங்கள் கைக்கடிகாரம் ஒன்றை உருவாக்க முடியாதே. நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய பொருட்களுக்கு ஒத்த பொருட்களை தயாரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையை இலகுவாக்கலாம்.
உதாரணம்: பெண்களின் பாவாடையை தைக்கத் தெரிந்த நாடுகள் பெண்களின் ஆடைகளைத் தைக்கலாம். இதற்கு மாறாக, எண்ணெய் அகழ்வுக்கென நீங்கள் பெருங் குழிகளைத் தோண்டினால் அந்த ஆற்றலை வேறு கைத் தொழில்களுக்கு பயன்படுத்த முடியாது.
ஒரு பொருளுக்கான வரைபடத்தை உருவாக்குவதனால் ஒரு நாட்டின் பொருட்கள் எவ்வளவு பலதரப்பட்டவை; தொடர்புபட்டவை என அறிந்து கொள்ளலாம். தைத்த ஆடைகள், கட்டுமானப் பொருட்கள், இயந்திரங்கள், மின்னணுப் பொருட்களைத் தயாரிப்பதில் சீனா கைதேர்ந்த நாடு. இதனால், அந்த நாடு பலவகையான, பெறுமதிமிக்க பொருட்களை தயாரிக்கக் கூடியதாக இருக்கிறது. மின்னணுவியல் பொருட்களைத் தயாரித்தல்.
இலங்கையின் பொருட்கள் நன்கு கட்டமைக்கப்படுவதில்லை. நாட்டில் புதிய பொருட்களை உருவாக்கக் கூடிய அறிவு இல்லை என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது. இந்த வடயத்தில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இலங்கை சிறிதளவாக முயற்சிகளையே செய்திருக்கிறது.
1995ம் ஆண்டு பலவகைக் பொருட்களை ஏற்றுமதி செய்த விடயத்தில் இலங்கையை விடக் குறைந்த மட்டத்தில் காணப்பட்ட வியட்நாம் மின்னணுவியல் பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறியிருப்பதால் இலங்கையை இப்போது அது விஞ்சிவிட்டது. அறிவின் பெருக்கம் வளர்ச்சி என நாம் நினைக்கிறோம். ஒரு ஊமை மேதையாக மாறுவது போன்றதன்று அது.
ஒரே பொருளை எவ்வாறு செய்வது என்ற அறிவுள்ள ஒரு சமூகத்திலிருந்து வெவ்வேறான பல பொருட்களை செய்யக் கூடிய அறிவுள்ள மக்கள் உள்ள சமூகத்துக்கு செல்வதுதான் அது. அது மின்னணுவியல் பொருட்கள், கார், மருந்துகள் தயாரிக்கும் ஒரு சமூகமே.
இந்த யோசனைகள் இலங்கைக்கு உபயோகமாக இருந்தாலும் நாட்டின் பொருளாதார பல்வகைத் தன்மையை மேம்படுத்துவதற்கான ஓர் தெளிவான திட்டம் அல்ல. ஹோஸ்மானின் உரையின் இறுதிப்பகுதி ஒரு பொருளை உற்பத்தி செய்யும் அறிவை ஒரு நாட்டின் எல்லைக்கு அப்பால் பரவச் செய்வது தொடர்புபட்டதாக இருந்தது.
பாரம்பரியமாக ஐந்து வழிகளில் இந்த அறிவை பரவச் செய்யலாம். நிறுவனங்களுக்கிடையே தொழிலாளர்களை நகர்த்துதல், குடியகல்வு, புலம்பெயர்ந்து வாழ்பவர்கள், வியாபார நோக்கத்திலான பிரயாணம், வெளிநாட்டு நேரடி முதலீடு, இதில் முதலாவதாக உள்ள நிறுவனங்களுக்கிடையே தொழிலாளர்களை நகர்த்துதல் என்பது குறித்து நாட்டில் அறிவில்லாததால் எமக்கு அது பொருத்தமானதாக இல்லை. எனவே, குடியகல்வு, வெளிநாட்டவர்களுக்கு நாட்டைத் திறந்து விடுவதுமே மிக முக்கியமாகும்.
இலங்கையில் 1% மக்கள் வெளிநாட்டவர்கள். இவர்களில் 99% இந்தியாவில் பிறந்தவர்கள். சிங்கப்பூர் போன்ற ஒரு நாட்டை எடுத்துக் கொண்டால் அங்குள்ள மக்களில் 40% நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவர்கள். இந்த இணைப்பினால் அறிவு விசாலமடைகிறது. அதாவது பல நாடுகளிலிருந்து வரும் மக்கள் ஒரு நாட்டுக்குள் பல ஆற்றல்களைக் கொண்டு வருகிறார்கள்.
ஆக்கபூர்வமான அபிவிருத்தி கொள்கைகள் அவசியம்:
ஆற்றல்களுக்கும், அறிவுக்கும் இலங்கை தனது புலம் பெயர்ந்து வாழும் மக்களைப் பயன்படுத்திக் கொள்ள முனைய வேண்டும். வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுடன் தொடர்புகளை விருத்தி செய்து கொள்வது இப்போது நடப்பதில்லை. வியாபார நோக்கத்துடனான பிரயாணம் மூலம் இலங்கை நன்மை பெறுவதுமில்லை. அத்துடன், யுத்தம் முடிந்ததிலிருந்து வெளிநாடடு நேரடி முதலீடுகளின் தொடர்ச்சியான அதிகரிப்பையும் காண முடியவில்லை.
அயல்நாடுகளுடன் சாத்தியமான பல திட்டங்கள் 2010ம் ஆண்டு முதல் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறும் ஹோஸ்தான் இலங்கை வெளிநாடுகளுடன் கூட்டு வர்த்தக முயற்சிகளில் ஈடுபட சிறந்த வழிகளில் செயற்பட வேண்டுடமெனவும் ஆலோசனை கூறுகிறார்.
குடியகல்வு, புலம்பெயர் தமிழர்களுக்கான கொள்கைகளும் வகுக்கப்பட வேண்டியுள்ளதுடன் கைத் தொழில்களுக்கு இன்னும் எவ்வளவு சார்பாக சேவையாற்றலாம் என சிந்திக்கவும் வேண்டும். புதிய கைத்தொழில்கள் நாட்டுக்குள் வருவதற்கு ஏற்ற சூழலையும் அது மேம்படுத்த வேண்டும். ஏற்கனவே செயல்படும் கைத்தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை அரசுக்கும், தனியார் துறைக்கும் இடையில் அதிக ஒத்துழைப்பும், இலாபத்துக்கு பதிலாக உற்பத்தி மீதான கூடிய கவனமும், கூட்டு தொழில் முயற்சிகளுக்கு ஆர்வமும் காட்ட வேண்டும்.
இலங்கையில் செயல்படும் நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதில் அதிக வெளிப்படைத் தன்மை முக்கியம். புதிய கைத்தொழில் நிறுவனங்களைக் கவர்வதற்கு அதற்கான சாத்தியம், தொடர்புடைய தடைகளைப் பற்றி ஆராய குழுக்களை நியமிக்கவும் வேண்டும். கடைசியாக, நேரடி சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள், சந்தர்ப்பங்களைத் தேடும் முதலீட்டார்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு முதலீட்டுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் ஹோஸ்மான் தனது பரிந்துரைகளில் மேலும் குறிப்பிட்டார்.
Sam Bresnick
ஷாம் பிரேஸ்னிக்

மட்டக்களப்பில் கடும் மழை! தாழ் நிலங்கள் மூழ்கும் அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் கடுமையான மழை காரணமாக மட்டக்களப்பு நகர் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தாழ் நிலங்கள் வெள்ள அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளது.
அத்துடன், இன்று (24) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 86 மில்லி மீற்றர் மழை வீச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், மட்டக்களப்பு நகர் 97.4 மில்லி மீற்றர், மைலம்பாவெளி 81.0 மில்லி மீற்றர், பாசிக்குடா 50.8 மில்லி மீற்றர், உறுகாமம் 72.4 மில்லி மீற்றர், உன்னிச்சை 95.4 மில்லி மீற்றர், வாகனேரி 42.3 குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசன திணைக்களம் கூறியுள்ளது.
கடுமையான வறட்சி காரணமாக நீர்மட்டம் கடுமையான முறையில் குறைந்திருந்த நிலையில் இரண்டு தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வாகனேரிக்குளம் மற்றும் வெலிக்காகண்டிக்குளம், வடமுனைக்குளம், கித்துள் வடிச்சல் குளம், கட்டுமுறிவுக்குளம், புணானைக்குளம், நவகிரிக்குளம், தும்பங்கேணிக் குளம், புளுகுணாவைக்குளம் ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டு எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சி..! சபையில் போட்டுடைத்த சம்பந்தன்

கூட்டு எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சி..! சபையில் போட்டுடைத்த சம்பந்தன்



கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஊழல் செய்பவர்களை சிறை வைப்பதையும் ஐக்கிய தேசிய கட்சி தடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான கோப் குழுவின் அறிக்கை மீதான விவாதம் பாராளுமன்றில் இன்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஊழல் செய்தமைக்காக எந்தவொருவரும் இதுவரை குற்றவாளியாக அடையாளம் காணப்படவில்லை.
அத்துடன் ஊழல் செய்தமை தொடர்பில் எந்தவொரு நபரும் இதுவரை சிறை வைக்கப்படவில்லை. எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலரும் ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, அவர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட வேண்டும். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஊழலில் ஈடுபடுவதாக தாம் கூறவில்லை.
எனினும் ஊழல் செய்வதை இருவரும் அனுமதிக்கின்றனர். இதேவேளை, தற்போதைய அரசாங்கம் மற்றும் கூட்டு எதிர்கட்சியின் செயற்பாடுகள் குறித்து மக்கள் சோர்வு அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.