வெள்ளி, 5 நவம்பர், 2010

.நாயும்,நரியும்.

நாயும்.நரியும் 


எல்லோரும் பாடசாலை நாட்களில்,அநேக நண்பர்களுடன் கூடித் திரிந்தவர்கள்தானே,
நானும் அப்படித்தான்,கூடித்திரிந்தேன். அப்பொழுது எனது சகோதரர் ஒருவர்,இந்தக் கதையையும் கூறி, பாட்டையும் படிப்பார்.படித்துப் பாருங்கள்.


பசியால் வாடி மெலிந்த நரி தின்பதற்கு ஏதாவது அகப்படுமா என்று தேடிக்கொண்டு காடு முழுவதும்,அலைந்து திரிந்து நொந்து நூடுல்ஸாகி .நடக்கவும் திரணியற்று, ஒரு மரத்தின் கீழ் அகோரப் பசியுடன் இருந்தது.அப்பொழுது, நல்ல கொளுத்த ஒரு பணக்கார வீட்டின் நாய், குஷியாக எதிரே ஓடி  வந்தது. நாயின் அழகையும்,அதன் மீதிருந்து வந்த மணமும். நரியைக் கிறங்கச் செய்தது. இது இருக்கிற நிலையில இன்றைய உணவை, இதை  வைத்தே கணக்குப் பண்ணலம்போல் எண்ணி ,வடிவேல் தனமாய் யோசித்தது.இருந்தாலும் தான் தற்போது இருக்கும் நிலையில்,இந்த நாயுடன் சண்டைபோட்டுத் தாக்குப் பிடிக்க முடியாது என்பதையும் கணக்குப் போட்டுத் தெரிந்து  கொண்டது.நரியின் ஆசையும் பசியும் அதிகமாகிக் கொண்டே போனது.அதனால் நாயுடன் நட்பாகப் பேச ஆரம்பித்தது.நாயினுடைய அழகையும்,கொழுத்துப் போயிருந்த உடம்பையும்.அதிலிருந்து வரும் சம்புவின் மணத்தையும் வாயாரப் புகழ்ந்தது.புகழ்ச்சியைக் கேட்டு மடங்கிய நாயர், நரியாரைப் பார்த்து "நண்பனே, நான் சொல்கிறபடி கேட்டால்,நீயும் என்னைப்போல் இருக்கலாம்.பசியுடனும் பட்டினியுடனும் இந்தக் காட்டில் இருந்து ஏன்?கஷ்டப்படுகிறாய்? என்னுடன் வந்தாயானால் நல்ல உணவும்,நேரத்திற்கு குளிப்பும், சௌக்கியமான படுக்கையும் கிடைக்கும்" என்று சொன்னது.  .
  
நரியும், சிந்தித்துப் பார்த்தது,எவ்வளவு நாளைக்குத்தான் நாமளும் இக்காட்டில்  கிடந்து கஷ்டப்படுவது.காட்டைச் சுற்றித் திரிந்தது போதும் கொஞ்சக்காலம் நாட்டையும் சுற்றிப்பார்ப்போம்.இந்தச் சிந்தனையுடன்,நாயைப் பார்த்துக் கேட்டது,"நண்பனே! நான் அங்கு வந்தால், என்ன வேலை செய்ய வேண்டும்?

"வேலையாவது, கீலையாவது,ஒன்றுமே கிடையாது.வீட்டுக்கு வருகிற பிச்சைக்காரர்களை குலைத்து விரட்டியடிக்க வேண்டும்.வீட்டுக்காரர்களைக் கண்டால்வாலைக் குழைக்க வேண்டும்.அவ்வளவுதான் வேலை.இதற்குப் பதிலாக வகை வகையான உணவுகள்,நேரம் தவறாத குளிப்புகள் எல்லாம் கிடைக்கும்.  நாம் நல்லவிதமாகவும், வீட்டுக்காரர்மனம்கோணாமலும்,அவர்கள் மீது பிரியமாகவும் நடந்தால் வீட்டுக்காரர் நமது தலையை தடவிக்கொடுப்பாகள்.என்ன ஒரு சௌகரியம் தெரியுமா?"என்று அல்வா கணேசன் ரேஞ்சுக்குச் சொன்னது.

நாயின் வர்ணனையைக்கேட்ட நரி  சொக்கிப் போயிற்று,"எல்லாம் சரி நண்பனே!உன்னைக் கண்டது முதல் ஒன்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.உனது கழுத்தில்
கிடக்கும்,இந்த அழகான கறுத்தப் பட்டி எப்படி வந்தது?"

"எனது வீட்டுக்காரர் என்மேல் கொண்ட அன்பால் இதை அணிவித்தார்.நாட்டுக்குள் நீ வந்தாயானால்,மனிதர்களும் இதைப்போல வகைவகையாக, அணிந்திருப்பதைக் காண்பாய்" என்றது நாய்.

நாயும் நரியும்,ஒரு முடிவுக்கு வந்து நாட்டை அடையும்போது நல்ல இரவாகிவிட்டது.வீட்டுக்காரரின் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் வெகு தடபுடலாக நடந்தது கொண்டிருந்தது. வழக்கத்தை விட,உற்றார் உறவினரின் நடமாட்டம் அதிகமாகவே தென்பட்டது, மறுபுறம்
சமையல் வெகு விமரிசையாக,ஆட்டுக் கொழம்பு,கோழிப்பொரியல்,முட்டை அவியல் என வீடே அமளிப்பட்டது.நாயும் நரியும் வீட்டை அண்மிக்கும்போது சாப்பாட்டின் வாசனை நரியை எங்கோ கனவு உலகுக்கு  கூட்டிக் கொண்டு போனது.நரி நினைத்தது நல்ல ஒரு இடத்திற்குத்தான் நாம் வந்து சேர்ந்துள்ளோம்.உணவை விட அதிலிருந்து வரும் வாசனைதான் பசியை அதிகரிக்கிறது,  இன்று ஒரு கட்டுக் கட்டவேண்டியதுதான் என்று மனதினில் நினைத்தவாறே நாயைப் பின்தொடர்ந்தது.

நரியை நாய் அழைத்தது,"நண்பரே! நீ முதன்முதலிலஎனதுவீட்டுக்குவருகிறாய்,முதலில்
உன்னை முன் வாசலால் அழைத்துப் போகமுடியாததற்கு மன்னித்துக் கொள்,"என்றது.
நரியார்,"பரவாயில்லை எனக்கும் மனிதர்களை முதன் முதலில் பார்க்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் உள்ளது.உனக்குத்தான் இங்குள்ள நிலவரங்கள் நன்றாகத்
தெரியும்,அதற்குத் தக்கபடி என்னை அழைத்துச் செல்,"என்றது.

நரியாரும் நாயரும் ஒரு மூலையால் புகுந்து உள்ளே நுழைந்து பார்த்தால்,திருமண
வீடல்லவா கூட்டம் சே, சே,என்று இருந்தது.  திரும்பிய பக்கமெல்லாம் உறவினர்கள்.

நாயார் யோசித்தார் இதில் நமது நண்பன் நரியார், மனிதர்களின் கண்ணில் பட்டால்
கதை கந்தலாகிவிடும்.நரியாரை மிகவும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல
வேண்டும் என்று யோசனையுடன்,அங்கும் இங்கும் பார்வையைச் செலுத்திக்கொண்டு
வந்தார்,திடீரென்று அவருக்கு மேல் மாடி காலியாக இருப்பது நினைவுக்கு வந்தது.
நாரியரை அழைத்துக் கொண்டு மாடத்துக்கு விரைந்தார். அங்கும் எல்லாம் தூசு தட்டி
சாமான்களையெல்லாம் ஒதுக்கி வைத்திருந்தார்கள்.நாயர் ஒரு மாதிரியாக ஒரு மறைவான இடத்தை ஒதுக்கிகொடுத்து கொண்டிருக்கும்போது யாரோ வருவது மாதிரி
சத்தம் கேட்டதும் நரியாரும் நாயரும் மறைந்து கொண்டார்கள்.வந்தவர்கள் சாப்பாட்டுச்
சாமான்களை இவர்கள் மறைந்து இருந்த இடத்திற் பாதுகாப்பாக வைத்துச் சென்றார்கள்.
நரியாருக்கோ ஒருபுறம் பசி,மறுபுறம் களைப்பு,எல்லாவற்றையும் விட உணவுவகைகளின் ஒன்றித்த மணம்,நரியாரின் கட்டுப்பாடு நிலை தளர்ந்து போய்க் கொண்டிருந்தது.

நரியார் நாயரிடம் "நண்பா! பசி கண்ணை மறைக்கிறது,சாப்பாடும் அருகில் இருக்கிறது,
சாப்பிடலாமா?" என்றார்.நாயார் நரியாரைப் பார்த்துச்  சொன்னார்,"நண்பா!அவசரப் படாதே,இது மனிதர்களுக்கான உணவு,நமது உணவு கிழே  இருக்கும்,நான் போய்ப்பார்த்து வருகிறேன் கொஞ்சம் பொறுமையாக இரு." என்று சொல்லிவிட்டுக் கீழ் இறங்கிப்போனது.

நேரம் ஆக, ஆக,நரியாருக்கு இருப்புக் கொள்ளவில்லை.பசி பொறுமையைக் கடந்து
கொண்டிருந்தது.நரியாருக்கு நாயின் வருகையை எதிர் பார்த்து கடுப்பாகி விட்டது.
துணிந்து முடிவெடுத்து செயலிலும் இறங்கத் தொடங்கிவிட்டார். கொண்டு வந்து
வைத்திருந்த உணவுப் பண்டங்களைக் காலிபண்ணத்தொடங்கியது.சாப்பிட்டது
திருப்தியாக இருந்ததால்,லேசாக மயக்கம் தாலாட்டத் தொடங்கியது,ஒருவாறு தனது
மறைவிடத்தை அடைந்தார்.நரியாருக்கு சந்தோசம் தலையெடுக்கத் தொடங்கியது.
எதற்கும் நண்பன் நாயார் வந்தால்,அவரிடம் சொல்லி தனது சந்தோசத்தைக் கொண்டாடலாம் என்று நினைத்தபோது,நாயார் வந்துகொண்டிருந்தார்.நாயார் வந்தவுடன்,ஒரு பார்வையில்,ஒரு நொடியில் களநிலைமையை உணர்ந்து கொண்டார்.
நரியார்,நண்பன் நாயாரைக் கண்டவுடன்,"நண்பா! என்னை அழைத்து,மதித்து இவ்வளவு பெரிய
விருந்து படைத்த உன்னை,எவ்வளவு வாழ்த்தினாலும்,தகும். இருந்தும் என் மனது உன்னை    வாழ்த்திப் பாடச் சொல்கிறது, பாடாவிட்டால்,நான் பிறந்த பிறப்புக்குப் பெருமையில்லை" என்று கூறி,நாயாரின் பதில் வெளிப்படும் முன்னரே  பாடத்தொடங்கினார்.நாயார் எவ்வளவு தடுத்தும்,எடுத்துக் கூற முயற்சித்தும்,எந்த  பயனுமில்லை.நாயார் நிலைமை மோசமாகுவதை 
அறிந்து தப்பி ஓடிவிட்டார். 

நரியாரின் ஓலம்,வீடு முழுவதும் எதிரொலித்தது,வீட்டில் இருந்தவர்கள் நரியின் ஓலம்   கேட்டதும் ,வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியும்,ஆத்திரமும் ஒருங்கே வந்தது.கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு,
நரியின் ஊளைச்  சத்தம் கேட்ட திசை நோக்கி, வீட்டு மாடியை நோக்கி விரைந்து,வந்து  நரிக்கு நல்ல மரியாதை வழங்கி  சாத்துச் சாத்தி இடுப்பை உடைத்து விட்டார்கள்.இடுப்புடைந்த நரி இடுப்பை இழுத்து காட்டைநோக்கி நகர்ந்தது.நகர்ந்து போகும் போது,

                                          கூடாத கூட்டங்கள் கூடாதே, 
                                                     கூடாத கூட்டங்கள் கூடினாலும், 
                                           கூடங்கள் மாடங்கள் ஏறாதே!, 
                                                     கூடங்கள் மாடங்கள் ஏறினாலும்,
                                           கீதங்கள் நாதங்கள் பாடாதே! 
                                                    கீதங்கள் நாதங்கள் பாடினால், 
                                          மோசங்கள் நாசங்கள் வந்துசேருமே!. 

இது மனிதர்களுக்கும் பொருந்தும்,எப்படியோ இருந்தவர்களை,இவனும் நம்மைப் போல்,நல்ல இருக்கட்டும் என்று நினைத்து அழைத்து வந்து வைத்தால்.வழி காட்டியவனுக்கும் ஆப்புவைத்து,அலைக் கழிப்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.